Being led by Women 91

901

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது

Who give their soul to love of wife acquire not nobler gain;
Who give their soul to strenuous deeds such meaner joys disdain.

மனைவியை விரும்பி அவள்‌ சொன்னபடி நடப்பவர்‌ சிறந்த பயனை அடையமாட்டார்‌; கடமையைச்‌ செய்தலை விரும்புகின்றவர்‌ வேண்டாத பொருளும்‌ அதுவே.

Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.

பரிமேலழகர் உரை மனை விழைவார் மாண் பயன் எய்தார் - இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார்; தமக்கு இன்துணையாய அறத்தினை எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது - இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையீடென்று இகழும் பொருளும் அவ்வின்பம்.
விளக்கம்:
(மனையும், விழைதலும், பயனும் ஆகுபெயர். அவ்வின்பம் - அவள் தன்மையராதற்கு ஏதுவாய இன்பம்: அஃது அவளாற் பயனாய அறத்தினும், அவ்வறத்திற்கும் தனக்கும் ஏதுவாய பொருளினும் செல்லவிடாமையின், விடற்பாற்று என்பதாம்.)
மணக்குடவர் உரை பெண்வழிச் சேறலாவது இன்பம் காரணமாக மனையாள் வழி ஒழுகுதல் லும், கணிகையரோடுகூடி ஒழுகுதலும், நறவுண்டு களித்தலும், சூதாடலும், தீயள வன்றி மிக உண்டலுமென ஐந்து வகைப்படும்; அவற்றுள், பெண்வழிச் சேறலாவது மனைவியர் வழியொழுகுதலினால் வரும் குற்றங் கூறுதல். (இ-ள்.) மனையாளைக் காதலித்தொழுகுவார் நற்பயனைப் பெறார்; யாதானும் ஒருவினையைச் செய்து முடிக்கவேண்டுவார் விரும்பாத பொருளும் அவரை விழையாமை,
(என்றவாறு). இஃது அறத்தினும் பொருளினும் காதலின்றி, அவர்தம்மையே காதலிப் பார்க்கு அறனும் பொருளும் இல்லையாமென்றது.
902

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்

Who gives himself to love of wife, careless of noble name
His wealth will clothe him with o’erwhelming shame.

கடமையை விரும்பாமல்‌ மனைவியின்‌ பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம்‌, பெரியதொரு நாணத்தக்க செயலாக நாணத்தைக்‌ கொடுக்கும்‌.

The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife’s feminine nature will cause great shame (to ali men) and to himself;

பரிமேலழகர் உரை பேணாது பெண் விழைவான் ஆக்கம் - தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்தி நின்ற செல்வம்; பெரியது ஓர் நாண் ஆக நாணுத் தரும் - இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நாண் உண்டாகத் தனக்கும் நாணுதலைக் கொடுக்கும்.
விளக்கம்:
(எய்தி நின்றதாயிற்று, படைக்கும் ஆற்றல் இலனாகலின். அச்செல்வத்தால் ஈதலும் துய்த்தலம் முதலிய பயன் கொள்வாள் அவள் ஆகலின், அவ்வாண்மைச் செய்கை அவள் கண்ணதாயிற்று என்று ஆண்பாலார் யாவரும் நாண, அதனால் தன் ஆண்மையின்மை அறிந்து, பின் தானும் நாணும் என்பது நோக்கி, 'பெரியதோர் நாணாக நாணுத்தரும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் மனை விழைதற் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அறத்தினையும் பொருளினையும் பேணாது மனையாளைக் காதலிப் பானது செல்வம், பெரியதோர் நாணம் உலகத்தே நிற்கும்படியாக, தனக்கு நாணினைத் தரும்,
(என்றவாறு).
903

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்

Who to his wife submits, his strange, unmanly mood
Will daily bring him shame among the good.

மனைவியிடத்தில்‌ தாழ்ந்து நடக்கும்‌ இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும்‌ நல்லவரிடையே இருக்கும்போது நாணத்தைத்‌ தரும்‌.

The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good.

பரிமேலழகர் உரை இல்லாள் கண் தாழ்ந்த இயல்பு இன்மை - ஒருவன் இல்லாள் மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம்; நல்லாருள் நாணு எஞ்ஞான்றும் தரும் - அஃது இலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதலை அவனுக்கு எக்காலத்தும் கொடுக்கும்.
விளக்கம்:
(அவள் தான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின், அவளை அஞ்சுதல் இயல்பின்மையாயிற்று. அங்ஙனம் அஞ்சி யொழுகுதலின், அவளை நியமிப்பார் இல்லையாம்; ஆகவே, எல்லாக் குற்றமும் விளையும் என்பது நோக்கி, 'எஞ்ஞான்றும் நாணுத் தரும்' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மனையாள் மாட்டுத் தாழ்ந்தொழுகும் இயல்பாகிய கேடு, எல்லா நாளும் நல்லாரிடத்து நாணுதலைத் தரும்,
(என்றவாறு).
904

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று

No glory crowns e’en manly actions wrought
By him who dreads his wife, nor gives the other world a thought.

மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப்‌ பயன்‌ இல்லாத ஒருவன்‌, செயல்‌ ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never beapplauded.

பரிமேலழகர் உரை மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன் இல்லாதானுக்கு; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும் நல்லோரால் கொண்டாடப்படாது.
விளக்கம்:
('உண்டாய வழியும்' என்பது அவாய் நிலையான் வந்தது. இல்லறம் செய்தற்குரிய நன்மை இன்மையின், 'மறுமையிலாளன்' என்றும், வினையையாளும் தன்மை தன் தன்மையில்லாத அவனால் முடிவு போகாமையின், 'வீறு எய்தல் இன்று' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய்தாதவன், ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை யெய்துதல் இல்லை,
(என்றவாறு) இது பொருள் செய்ய மாட்டாரென்றது.
905

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்

Who quakes before his wife will ever tremble too,
Good deeds to men of good deserts to do.

மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன்‌ எப்போதும்‌ நல்லவர்க்கு நன்மையான கடமையைச்‌ செய்வதற்கு அஞ்சி நடப்பான்‌.

He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.

பரிமேலழகர் உரை இல்லாளை அஞ்சுவான் - தன் மனையாளை அஞ்சுவான்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும்-தான் தேடிய பொருளே யாயினும் அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும்.
விளக்கம்:
(நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். அது செய்ய வேண்டும் நாள்களினும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். "இல்லாளை அஞ்சி விருந்தின் முகங்கொன்ற நெஞ்சின், புல்லாளனாக" (சீவக. மண்மகள். 217) என்றார் பிறரும்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மனையாளை அஞ்சுவான், எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்லவை செய்தலை அஞ்சும்,
(என்றவாறு). இஃது அறஞ்செய்ய மாட்டானென்றது.
906

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்

Though, like the demi-gods, in bliss they dwell secure from harm,
Those have no dignity who fear the housewife’s slender arm.

மனைவியின்‌ தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர்‌ தேவரைப்‌ போல்‌ இவ்வுலகத்தில்‌ சிறப்பான நிலையில்‌ வாழ்ந்த போதிலும்‌ பெருமை இல்லாதவரே ஆவர்‌.

They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods.

பரிமேலழகர் உரை இல்லாள் அமை ஆர் தோள் அஞ்சுபவர் - தம் இல்லாளுடைய வேய் போலும் தோளினை அஞ்சுவார்; இமையாரின் வாழினும் பாடு இலர் - வீரத்தால் துறக்கம் எய்திய அமரர் போல இவ்வுலகத்து வாழ்ந்தாராயினும்; ஆண்மையிலர்.
விளக்கம்:
(அமரர்போல வாழ்தலாவது, பகைத்து வீரர் தோள்களை எல்லாம் வேறலான் நன்கு மதிக்கப்பட்டு வாழ்தல். அது, கூடாமையின் 'வாழினும்' என்றார். 'அமை ஆர் தோள்' எனவே, அஞ்சுதற் காரணத்தது எண்மை கூறியவாறு. வீரர் தோள்களை வென்றார் ஆயினும், இல்லாள் தோள்களை அஞ்சுவார் ஆண்மையிலார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் அவளை அஞ்சுதற்கு குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தேவரைப்போல் இன்புற்று வாழினும், பெருமையிலராவர் ; மனையாளது வேய்போலும் தோளை அஞ்சுபவர்,
(என்றவாறு). இது செல்வமுடையராயினும் பிறரால் மதிக்கப்படாரென்றது.
907

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து

The dignity of modest womanhood excels
His manliness, obedient to a woman’s law who dwells.

மனைவியின்‌ ஏவலைச்‌ செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தைத்‌ தன்‌ இயல்பாக உடையவளின்‌ பெண்மையே பெருமை உடையது.

Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs the behests of a wife.

பரிமேலழகர் உரை பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் - நாண் இன்றித் தன் இல்லாளது ஏவல் தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண் தன்மையின்; நாண் உடைப் பெண்ணே பெருமை உடைத்து - நாணினையுடைய அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து.
விளக்கம்:
('நாணுடைப் பெண்' என வேண்டாது கூறியது, அவள் ஏவல் செய்வஈனது நாணின்மை முடித்தற் காதலின், அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது. ஏவல் - ஆகுபெயர். இறுதிக்கண் 'பெண்' என்பதூஉம் அது. ஏவல் செய்வித்துககோடற் சிறப்புத் தோன்றப் 'பெண்ணே' எனப் பிரித்தார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பெண்டிர் ஏவின் தொழிலைச் செய்தொழுகும் ஆண்மையின், நாணமுடைய பெண்மையே, தலைமை உடைத்தாம்,
(என்றவாறு). இது பிறரால் மதிக்கப்படாரென்றது.
908

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்

Who to the will of her with beauteous brow their lives conform,
Aid not their friends in need, nor acts of charity perform.

மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர்‌, தம்முடைய நண்பர்க்கு உற்ற குறையையும்‌ செய்து முடிக்கமாட்டார்‌; அறத்தையும்‌ செய்யமாட்டார்‌.

Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.

பரிமேலழகர் உரை நல்நுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர் - தாம் வேண்டியவாறன்றித் தம் மனையாள் வேண்டியவாறு ஒழுகுவார்; நட்டார் குறை முடியார் - தம்மொடு நட்புச் செய்தார் உற்ற குறை முடிக்கமாட்டார்; நன்று ஆற்றார் - அதுவேயன்றி மறுமைக்குத் துணையாய அறஞ்செய்யவும் மாட்டார்.
விளக்கம்:
('நல்நுதலாள்' என்பதனை, "அமை ஆர் தோள்" (குறள். 906) என்புழிப் போலக் கொள்க. அவள் தானே அறிந்த ஏவலும், பொருள் கொடுத்தலும் கூடாமையின், இருமைக்கும் வேண்டுவன செய்யமாட்டார் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நல்ல நுதலினை யுடையாள் விரும்பியவாறு செய்தொழுகுவார், தம்மோடு நட்டார் குறைதீர்க்கவுமாட்டார்; அவர்க்கு நல்லது செய்யவுமாட்டார். குறை தீர்த்தல் - உற்ற துயரம் தீர்த்தல்.
909

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்

No virtuous deed, no seemly wealth, no pleasure, rests
With them who live obedient to their wives’ behests.

அறச்‌ செயலும்‌ அதற்குக்‌ காரணமாக அமைந்த பொருள்‌ முயற்சியும்‌ மற்றக்‌ கடமைகளும்‌ மனைவியின்‌ ஏவலைச்‌ செய்வோரிடத்தில்‌ இல்லை.

From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, northose of wealth nor (even) those of pleasure.

பரிமேலழகர் உரை அறவினையும் - அறச்செயலும்; ஆன்ற பொருளும் - அது முடித்தற்கு ஏதுவாகிய பொருட்செயலும்; பிறவினையும் - இவ்விரண்டின் வேறாய இன்பச் செயல்களும்; பெண் ஏவல் செய்வார்கண் இல் - தம் மனையாள் ஏவல் செய்வார்மாட்டு உளவாக.
விளக்கம்:
(புலன்கள் ஐந்து ஆகலின், 'பிற வினை' எனப்பன்மையாயிற்று. அவை நோக்கி அறச்செயல் பொருட் செயல்கள் முன்னே ஒழிந்தார்க்குத் தலைமை அவள் கண்ணதாகலின், பின் அவைதாமும் இலவாயின என்பது தோன்ற அவற்றைப் பிரித்துக் கூறினார். இவை மூன்றுபாட்டானும் அவள் ஏவல் செய்தற் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அறஞ்செய்தலும், அமைந்த பொருள் செய்தலும், ஒழிந்த காம நுகர்தலும், பெண்ணேவல் செய்வார்மாட்டு இல்லையாம்,
(என்றவாறு). இஃது அச்சமில்லாராயினும் சொன்னது செய்வாராயின், இம்மூன்று பொருளும் எய்தார் என்றது.
910

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்

Where pleasures of the mind, that dwell in realms of thought, abound,
Folly, that springs from overweening woman’s love, is never found.

நன்றாக எண்ணுதல்‌ பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும்‌ உடையார்க்கு எக்காலத்திலும்‌ மனைவியின்‌ ஏவலுக்கு இணங்கும்‌ அறியாமை இல்லை.

The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom.

பரிமேலழகர் உரை எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு - கருமச் சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சத்தினையும், அதனினாய செல்வத்தினையும் உடையராய வேந்தர்க்கு; பெண் சேர்ந்து ஆம் பேதைமை எஞ்ஞான்றும் இல் - மனையாளைச் சேர்தலான் விளையும் பேதைமை எக்காலத்தும் உண்டாகாது.
விளக்கம்:
("இடன் இல் பருவத்தும்" [குறள் 218] எனவும், "இடன் இன்றி இரந்தோர்க்கு" [கலித். பாலை.1] எனவும் வந்தமையான், 'இடன்' என்பது அப்பொருட்டாதல் அறிக. இளமைக் காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். அப் பேதைமையாவது, மேற்சொல்லிய விழைதல், அஞ்சல், ஏவல் செய்தல் என்னும் மூன்றற்கும் காரணமாயது. எதிர்மறை முகத்தான் அம் மூன்றும் இதனால் தொகுத்துக் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எண்ணஞ் சேர்ந்த மனத்தினை விரிவாக உடையார்க்கு எல்லா நாளும் பெண்ணைச் சேர்ந்து ஆகும் அறியாமை இல்லையாம், (எ - று ) எண்ணஞ்சேர்தல் - இதனால் வருங்குற்றத்தினைத் தெரிந்துணர்தல்.


transliteration

manaivilaivaar maanpayan yeithaar vinaivilaiyaar
vaentaap porulum athu

paenaathu paenvilaivaan aakkam paeriyathor
naanaaka naanuth tharum

illaalkan thaalndhtha iyalpinmai yenjgnyaanrum
nallaarul naanuth tharum

manaiyaalai anjsum marumaiyi laalan
vinaiyaanmai veeraeitha linru

illaalai anjsuvaan anjsumatr raenjgnyaanrum
nallaarkku nalla seyal

imaiyaarin vaalinum paatilarae illaal
amaiyaarthol anjsu pavar

paennaeval seitholukum aanmaiyin naanutaip
paennae paerumai utaiththu

nattaar kuraimutiyaar nanraatrraar nannuthalaal
paettaangku oluku pavar

aravinaiyum aanra porulum piravinaiyum
paenyaeval seivaarkan il

yensaerndhtha naenjchath thidanutaiyaarkku yenjgnyaanrum
paensaerndhthaam paethaimai il