The Cruel Sceptre 56

551

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து

Than one who plies the murderer’s trade, more cruel is the king
Who all injustice works, his subjects harassing.

குடிகளை வருத்தும்‌ தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச்‌ செய்து நடக்கும்‌ அரசன்‌ கொலைத்‌ தொழிலைக்‌ கொண்டவரைவிடக்‌ கொடியவன்‌.

The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruelthan the man who leads the life of a murderer.

பரிமேலழகர் உரை கொலை மேற்கொண்டாரின் கொடிது - பகைமை பற்றிக் கொல்லுதல் தொழிலைத் தம்மேற்கொண்டு ஒழுகுவாரினும் கொடியன்; அலை மேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும் வேந்து - பொருள் வெஃகிக் குடிகளை அலைத்தல் தொழிலைத் தன்மேற் கொண்டு முறை அல்லவற்றைச் செய்து ஒழுகும் வேந்தன்.
விளக்கம்:
(அவர் செய்வது ஒரு பொழுதைத் துன்பம்; இவன் செய்வது எப்பொழுதும் துன்பமாம் என்பதுபற்றி, அவரினும் கொடியன் என்றார். பால் மயக்கு உறழ்ச்சி. 'வேந்து' என்பது உயர்திணைப் பொருட்கண் வந்த அஃறினைச் சொல். 'அலை கொலையினும் கொடிது' என்பதாயிற்று.)
மணக்குடவர் உரை கொடுங்கோன்மையாவது கொடுங்கோன்மையால் வருங் குற்றங் கூறுதல். அது முறைமை செய்யாமையும், அருள் செய்யாமையும், பிறர் நலியாமற்காவாமை யும், முறைகெடச் செய்தலும், குடிகளுக்குத் தண்டனை ஆராயாது செய்தலும் அல்லவை செய்தலும், குடிகளை இரத்தலுமெனப் பலவகைப்படும். இது கூறிய செங்கோன்மையின் மாறுபட்டுவருதலின், அதன்பின்கூறப்பட்டது. (இதன் பொருள்) கொலைத்தொழிலை மேற்கொண்டவரினும் கொடியன், அலைத் தற்றொழிலை மேற்கொண்டு நீதியல்லாதன செய்து ஒழுகுகின்ற அரசன், (எ-று)
552

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு

As ‘Give’ the robber cries with lance uplift,
So kings with sceptred hand implore a gift.

ஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன்‌ குடிகளைப்‌ பொருள்‌ கேட்டல்‌, போகும்‌ வழியில்‌ தனியே வேல்‌ ஏந்தி நின்ற கள்வன்‌ ‘கொடு’ என்று கேட்பதைப்‌ போன்றது.

The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber whostands with a weapon in hand and says “give up your wealth”.

பரிமேலழகர் உரை வேலொடு நின்றான் - ஆறலைக்கும் இடத்துத் தனியே வேல் கொண்டு நின்ற கள்வன்; இடு என்றது போலும்-ஆறு செல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று வேண்டுதலோடு ஒக்கும்; கோலொடு நின்ற இரவு - ஒறுத்தல் தொழிலோடு நின்ற அரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல்.
விளக்கம்:
('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு நில்லாமையும், 'இரவு' என்றதனால் இறைப்பொருள் அன்மையும் பெற்றாம். 'தாராக்கால் ஒறுப்பல்' என்னும் குறிப்பினன் ஆகலின், இரவாற் கோடலும் கொடுங்கோன்மை ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையது குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தனியிடத்தே வேலொடு நின்றவன் கையிலுள்ளன தா வென் றல் போலும்; முறைசெய்தலை மேற்கொண்டுநின்றவன் குடிகள் மாட்டு இரத் தல்,
(என்றவாறு). கோலொடு நிற்றல் - செவ்வைசெய்வாரைப் போன்று நிற்றல். நிச்சயித்த கட மைக்கு மேல் வேண்டுகோளாகக கொள்ளினும், அது வழியிற் பறிப்பதனோடு ஒக்குமென்றவாறு.
553

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்

Who makes no daily search for wrongs, nor justly rules, that king
Doth day by day his realm to ruin bring.

நாள்தோறும தன்‌ ஆட்சியில்‌ விளையும்‌ நன்மை தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத அரசன்‌, நாள்தோறும்‌ ( மெல்ல மெல்லத்‌ ) தன்‌ நாட்டை இழந்து வருவான்‌.

The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, willdaily fall to ruin.

பரிமேலழகர் உரை நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் - தன் நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறையைச் செய்யாத அரசன், நாள்தொறும் நாடு கெடும் - நாள்தோறும் நாடு இழக்கும்.
விளக்கம்:
(அரசனுக்கு நாடு, உறுப்பு ஆகலின், அதன் வினை அவன்மேல் நின்றது. இழத்தல்: பயன் எய்தாமை. 'மன்னவன் நாடு நாள்தொறும் கெடும்', என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து, அதற்குத்தக முறை செய்யாத அரசன் நாடு நாடோறும் கெடும்,
(என்றவாறு) இது நாடு கெடுமென்றது.
554

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு

Whose rod from right deflects, who counsel doth refuse,
At once his wealth and people utterly shall lose.

( ஆட்சிமுறை கெட்டுக்‌ ) கொடுங்கோலனாகி ஆராயாமல்‌ எதையும்‌ செய்யும்‌ அரசன்‌, பொருளையும்‌ குடிகளையும்‌ ஒரு சேர இழந்து விடுவான்‌.

The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once bothhis wealth and his subjects.

பரிமேலழகர் உரை சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - மேல் விளைவது எண்ணாது முறைதப்பச் செய்யும் அரசன்; கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - அச்செயலான் முன் ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய குடிகளையும் சேர இழக்கும்.
விளக்கம்:
('கோடல்' என்பது திரிந்து நின்றது. முன் ஈட்டிய பொருள் இழத்தற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பொருளையும் பொருள் தரும் குடியையும் கூட இழப்பன், முறை கோடி ஆராயாது செய்யும் அரசன்,
(என்றவாறு) இஃது ஆராயாது செய்வதனால் வருங் குற்றங் கூறிற்று.
555

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் பட

His people’s tears of sorrow past endurance, are not they
Sharp instruments to wear the monarch’s wealth away?

( முறை செய்யாதவனுடைய ) செல்வத்தைத்‌ தேய்த்து அழிக்கவல்ல படை, அவனால்‌ பலர்‌ துன்பப்பட்டுத்‌ துன்பம்‌ பொறுக்க முடியாமல்‌ அழுத கண்ணீர்‌ அன்றோ?

Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from theirking), become a saw to waste away his wealth ?

பரிமேலழகர் உரை அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே - அரசன் முறை செய்யாமையால் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரன்றே; செல்வத்தைத் தேய்க்கும் படை-அவன் செல்வத்தைக் குறைக்கும் கருவி.
விளக்கம்:
(அழுத கண்ணீர்; அழுதலான் வந்த கண்ணீர் - 'செல்வமாகிய மரத்தை' என்னாமையின், இஃது ஏகதேச உருவம். அல்லற்படுத்திய பாவத்தது தொழில் அதற்கு ஏதுவாகிய கண்ணீர்மேல் நின்றது, அக் கண்ணீரில் கொடிது பிறிது இன்மையின். செல்வம் கடிதின் தேயும் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நீதியல்லன செய்தலானே அல்லற்பட்டு, அதற்கு ஆற்றாது, அழுத கண்ணீரன்றோ ? செல்வத்தைத் தேய்க்கும் ஆயுதம்,
(என்றவாறு). இஃது அவ்வரசன் கெடுமென்றது.
556

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி

To rulers’ rule stability is sceptre right;
When this is not, quenched is the rulers’ light.

அரசர்க்குக்‌ புகழ்‌ நிலைபெறக்‌ காரணம்‌ செங்கோல்‌ முறையாகும்‌. அஃது இல்லையானால்‌ அரசர்க்குப்‌ புகழ்‌ நிலைபெறாமல்‌ போகும்‌.

Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have noendurance.

பரிமேலழகர் உரை மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப் புகழ்கள்தாம் நிலை பெறுதல் செங்கோன்மையான் ஆம்; அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச்செங்கோன்மை இல்லை ஆயின், அவர்க்கு அப் புகழ்கள்தாம் உளவாகா.
விளக்கம்:
(விகாரத்தால் தொக்க மூன்றாவது விரித்து ஆக்கம் வருவித்து உரைக்கப்பட்டது. மன்னுதற்கு ஏது புகழாதல் "இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக" (நாண்மணி 17) என்பதனானும் அறிக. மன்னாமை: ஒருகாலும் நிலையாமை. பழிக்கப்பட்டால் ஒளி மன்னாவாம்: ஆகவே, தாமும் மன்னார் என்பதாயிற்று. வென்றி கொடை முதலிய ஏதுக்களால் புகழ் பகுதிப்படுதலின், பன்மையால் கூறினார். அவையெல்லாம் செங்கோன்மை இல்வழி இலவாம் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கொடுங்கோலனாயின் எய்தும் குற்றம் கூறப்பட்டது.) --
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அரசர்க்கு ஒளி நிலைபெறுதல் செங்கோன்மை ; அஃதில்லையா யாயின், அரசாக்கு ஒளி நிலையாதாம்,
(என்றவாறு). முறை செய்யாமையால் அவன் நிலை பெறுதல் அருமையெனக் குற்றங் கூறு வார் முற்படப் புகழில்லையாம் என்றார்.
557

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு

Wi As lack of rain to thirsty lands beneath,
Is lack of grace in kings to all that breathe.

மழைத்துளி இல்லாதிருத்தல்‌ உலகத்திற்கு எத்தன்மையானதோ அத்தன்மையானது நாட்டில்‌ வாழும்‌ குடிமக்களுக்கு அரசனுடைய அருள்‌ இல்லாத ஆட்சி.

As is the world without rain, so live a people whose king is without kindness.

பரிமேலழகர் உரை துளி இன்மை ஞாலத்திற்கு எற்று - மழை இல்லாமை வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம் பயக்கும்; அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்ணளியில்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு.
விளக்கம்:
(சிறப்புப்பற்றி, 'துளி' என்பது மழைமேல் நின்றது: "உயிர்" என்பது குடிகள்மேல் நின்றது. மேல் "வான் நோக்கி வாழும்" என்றதனை எதிர்மறை முகத்தால் கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உலகத்திற் பல்லுயிர்க்கும் மழையில்லையானால் வருந்துன்பம் எத்தன்மைத்தாகின்றது அத்தன்மைத்து ; அரசன் அருளிலனாதல் அவன் கீழ் வாழும் மக்கட்கு,
(என்றவாறு). இஃது அருள் செய்யாமையால் வருங் குற்றங் கூறிற்று.
558

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்

To poverty it adds a sharper sting,
To live beneath the sway of unjust king.

முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல்‌ ஆட்சியின்‌ கீழ்‌ இருக்கப்பெற்றால்‌, பொருள்‌ இல்லாத வறுமை நிலையைவிடச்‌ செல்வநிலை துன்பமானதாகும்‌

Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king withoutjustice.

பரிமேலழகர் உரை முறை செய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் - முறை செய்யாத அரசனது கொடுங்கோலின்கீழ் வாழின்; இன்மையின் உடைமை இன்னாது - யாவர்க்கும் பொருளினது இன்மையினும் உடைமை இன்னாது.
விளக்கம்:
(தனக்குரிய பொருளோடு அமையாது மேலும் வெஃகுவோனது நாட்டுக் கைந்நோவயாப்புண்டல் முதலிய வருவது பொருளுடையார்க்கே ஆகலின், அவ்வுடைமை இன்மையினும் இன்னாதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டு வாழ்வார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நல்குரவினும் செல்வம் துன்பமாகும்; முறைசெய்யாத அரசனது கொடுங்கோலின்கீழே குடியிருக்கின்,
(என்றவாறு). இது பொருளுடையாரும் துன்பமுறுவரென்றது. இவை மூன்றும் முறை செய்யாமையாலே வருங் குற்றங் கூறின.
559

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்

Where king from right deflecting, makes unrighteous gain,
The seasons change, the clouds pour down no rain.

அரசன்‌ முறைதவறி நாட்டை ஆட்சி செய்வானானால்‌, அந்த நாட்டில்‌ பருவமழை தவறி மேகம்‌ மழை பெய்யாமல்‌ போகும்‌.

If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withholdtheir showers.

பரிமேலழகர் உரை மன்னவன் முறை கோடிச் செய்யின் - மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின்; உறை கோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது.
விளக்கம்:
(இரண்டிடத்தும் 'கோடல்' என்பன திரிந்து நின்றன. உறை கோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) முறைமைகோட மன்னவன் செய்வனாயின், பழை துளிவிடு தலைத் தவிர்ந்து பெய்யாதொழியும்,
(என்றவாறு).
560

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

O Where guardian guardeth not, udder of kine grows dry,
And Brahmans’ sacred lore will all forgotten lie.

நாட்டைக்‌ காக்கும்‌ தலைவன்‌ முறைப்படி காக்காவிட்டால்‌ அந்நாட்டில்‌ பசுக்கள்‌ பால்‌ தருதலாகிய பயன்‌ குன்றும்‌; அந்தணரும்‌ அறநூல்களை மறப்பர்‌.

If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men ofsix duties viz., the Brahmins will forget the vedas.

பரிமேலழகர் உரை காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின்; ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்; அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.
விளக்கம்:
(ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஒதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பசுக்கள் பால் குறையும்; அந்தணர் வேதம் ஓதார்; அரசன் காவா னாயின்,
(என்றவாறு). இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.


transliteration

kolaimaetrkon taaritr kotithae alaimaetrkondu
allavai seitholukum vaendhthu

vaelodu ninraan iduvaen rathupolum
koalodu ninraan iravu

naadorum naati muraiseiyaa mannavan
naadorum naadu kedum

koolung kutiyum orungkilakkum koalkoatich
koolaathu seiyum arasu

allatrpatdu aatrraathu aluthakan neeranrae
selvaththaith thaeikkum pada

mannarkku mannuthal sengkoanmai akhthinrael
mannaavaam mannark koli

thuliyinmai gnyaalaththitrku yetrratrrae vaendhthan
aliyinmai vaalum uyirkku

inmaiyin innaathu utaimai muraiseiyaa
mannavan koatrkeelp patin

muraikoati mannavan seiyin uraikoati
ollaathu vaanam paeyal

aapayan kunrum arutholilor noolmarappar
kaavalan kaavaan yenin