Nobility 96

951

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு

Save in the scions of a noble house, you never find
Instinctive sense of right and virtuous shame combined.

நடுவு நிலைமையும்‌ நாணமும்‌ உயர்குடியில்‌ பிறந்தவரிடத்தில்‌ அல்லாமல்‌ மற்றவரிடத்தில்‌ இயல்பாக ஒருசேர அமைவதில்லை.

Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born.

பரிமேலழகர் உரை செப்பமும் நாணும் ஒருங்கு - செம்மையும் நாணும் சேர; இப்பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை - குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு இயற்கையாக உளவாகா.
விளக்கம்:
('இல், குடி, என்பன ஈண்டு உயர்ந்தவற்றின் மேல. செம்மை - கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறாகாமை. நாண் - பழிபாவங்களின் மடங்குதல். இவை இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்க வேண்டாமல் தாமே உளவாம்; பிறர்க்காயின் கற்பித்த வழியும் நெடிது நில்லா என்பதாம்.
மணக்குடவர் உரை குடியியலாவது அரசரும், அமைச்சரும், வீரருமல்லாத மக்கள் தமது இயல்பு கூறுதல். கூறிய அம்மூன்றினும் முற்படக் குடிப்பிறந்தார் இலக்கணங் கூறுவர். (இதன் பொருள்) உயர்குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு நடுவுநிலைமையும், பழி நாணுதலும், இயல்பாக ஒருங்கே உண்டாகா,
(என்றவாறு). இஃது இற்பிறந்தார் இவையிரண்டும் இயல்பாக உடையரென்றது.
952

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்

In these three things the men of noble birth fail not:
In virtuous deed and truthful word, and chastened thought.

உயர்குடியில்‌ பிறந்தவர்‌ ஒழுக்கமும்‌ வாய்மையும்‌ நாணமும்‌ ஆகிய இம்‌ மூன்றிலிருந்தும்‌ வழுவாமல்‌ இயல்பாகவே நன்னெறியில்‌ வாழ்வர்‌.

The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty.

பரிமேலழகர் உரை குடிப்பிறந்தார் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார்; ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும் இழுக்கார் - தமக்குரிய ஒழுக்கம் மெய்ம்மை நாண் எனப்பட்ட இம்மூன்றன் கண்ணும், கல்வியான் அன்றித் தாமாகவே வழுவார்.
விளக்கம்:
(ஒழுக்கம் முதலியன மெய்ம்மொழி மனங்களினவாகலின், அம் முறையவாயின. இழுக்குதல் அறியாது வருகின்றமையின், 'இழுக்கார்' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒழுக்க முடைமையும், மெய்ம்மை கூறுதலும், அற்றம் மறைத்த லாகிய நாணமுடைமையும் ஆகிய இம்மூன்றினையும் தப்பார் உயர்குடிப்பிறந்தார்.
953

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு

The smile, the gift, the pleasant word, unfailing courtesy
These are the signs, they say, of true nobility.

உண்மையான உயர்குடியில்‌ பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல்‌, பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும்‌ நல்ல பண்புகள்‌ என்பர்‌.

A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born.

பரிமேலழகர் உரை வாய்மைக் குடிக்கு - எக்காலத்தும் திரிபில்லாத குடியின்கண் பிறந்தார்க்கு; நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப - வறியார் சென்ற வழி முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், இகழாமையும் ஆகிய இந்நான்கும் உரிய கூறு என்று சொல்லுவர் நூலோர்.
விளக்கம்:
(பொய்ம்மை திரிபு உடைமையின் திரிபின்மையை 'வாய்மை' என்றும், 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர்' ஆகலின், இகழாமையை அவர் கூறாக்கியும் கூறினார். 'குடி' ஆகுபெயர். 'நான்கின்வகை' என்பது பாடமாயின், வாய்மைக் குடிப்பிறந்தார்க்குப் பிறரின் வேறுபாடு இந்நான்கால் உளதாம் என்று உரைக்க. இவை மூன்று பாட்டானும் குடிப்பிறந்தாரது இயல்பு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) முகமலர்ச்சியும், கொடையும், இனியவை கூறுதலும், பிறரை இகழாமையுமாகிய நான்கினையும் மெய்ம்மையுடைய குலத்தினுள்ளார்க்கு அந்த மென்று சொல்லுவர்,
(என்றவாறு).
954

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்

Millions on millions piled would never win
The men of noble race to soul-degrading sin.

பலகோடிப்‌ பொருளைப்‌ பெறுவதாக இருந்தாலும்‌ உயர்குடியில்‌ பிறந்தவர்‌ தம்‌ குடியின்‌ சிறப்புக்‌ குன்றுவதற்குக்‌ காரணமான குற்றங்களைச்‌ செய்வதில்லை.

Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming.

பரிமேலழகர் உரை அடுக்கிய கோடி பெறினும் - பலவாக அடுக்கிய கோடி அளவிற்றாய பொருளைப் பெற்றாராயினும்; குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் தம் ஒழுக்கம் குன்றும் தொழில்களைச் செய்யார்.
விளக்கம்:
('அடுக்கிய கோடி' என்பது, ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. குன்றும் தொழில்கள் - குன்றுதற்கு ஏதுவாய தொழில்கள்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பல கோடிப் பொருளைப் பெறினும், உயர்குடிப்பிறந்தார் தங் குடிக்குத் தாழ்வாயின் செய்யார்,
(என்றவாறு). இது சான்றாண்மை விடாரென்றது.
955

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று

Though stores for charity should fail within, the ancient race
Will never lose its old ancestral grace.

தாம்‌ பிறர்க்குக்‌ கொடுத்துதவும்‌ வண்மை வறுமையால்‌ சுருங்கிய போதிலும்‌, பழம்பெருமை உடைய குடியில்‌ பிறந்தவர்‌ தம்‌ பண்பிலிருந்து நீங்குவதில்லை.

Though their means fall off, those born in ancient families, will not lose their character (forliberality).

பரிமேலழகர் உரை பழங்குடி - தொன்றுதொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார்; வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் - தாம் கொடுக்கும் பொருள் பண்டையில் சுருங்கியவிடத்தும்; பண்பின் தலைப்பிரிதல் இன்று - தம் பண்புடைமையின் நீங்கார்.
விளக்கம்:
(தொன்று தொட்டு வருதல்)
விளக்கம்:
('சேர சோழ பாண்டியர்' என்றார்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல். அவர்க்கு நல்குரவாவது, வழங்குவது உள் வீழ்வது ஆகலின், அதனையே கூறினார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வழங்கும் பொருள் தம்மளவிற்குக் குன்றிச் சுருங்கியவிடத்தும், பழய பண்பு வழுவாத குடிப்பிறந்தார் தமது இயல்பினின்றும் நீங்குத லிலர். இது பண்புடைமை விடாரென்றது.
956

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்

Whose minds are set to live as fits their sire’s unspotted fame,
Stooping to low deceit, commit no deeds that gender shame.

மாசற்ற குடிப்‌ பண்புடன்‌ வாழ்வோம்‌ என்று கருதி வாழ்வோர்‌, வஞ்சனைகொண்டு தகுதியில்லாதவற்றைச்‌ செய்யமாட்டார்‌.

Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto.

பரிமேலழகர் உரை மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார் - வசையற்று வருகின்ற நம் குடிமரபினோடு ஒத்து வாழக் கடவேம் என்று கருதி அவ்வாறு வாழ்வோர்; சலம் பற்றிச் சால்பு இல செய்யார் - வறுமையுற்றவழியும், வஞ்சனையைப் பொருந்தி, அமைவிலவாய தொழில்களைச் செய்யார்.
விளக்கம்:
(அமைவின்மை: அம்மரபிற்கு ஏலாமை. இவை மூன்று பாட்டானும் அவர் வறுமையுற்ற வழியும் அவ்வியல்பின் வேறுபடார் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பொய்யைச் சார்ந்து, அமைவில்லாதன செய்யார்; குற்றமற்ற குலத்தைச் சார்ந்து உயிர் வாழ்வோ மென்று கருதுவார்,
(என்றவாறு). இது சான்றாண்மை விடார் என்றது.
957

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து

The faults of men of noble race are seen by every eye,
As spots on her bright orb that walks sublime the evening sky.

உயர்குடியில்‌ பிறந்தவரிடத்தில்‌ உண்டாகும்‌ குற்றம்‌, ஆகாயத்தில்‌ திங்களிடம்‌ காணப்படும்‌ களங்கம்போல்‌ பலரறியத்‌ தோன்றும்‌.

The defects of the noble will be observed as clearly as the dark spots in the moon.

பரிமேலழகர் உரை குடிப்பிறந்தார்கண் குற்றம் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் மாட்டு உளதாம் குற்றம்; விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து விளங்கும் - தான் சிறியதேயாயினும் விசும்பின் கண் மதியிடத்து மறுப்போல ஓங்கித் தோன்றும.
விளக்கம்:
(உயர்குடி முதலிய பொருள் வகை மூன்றற்கும் விசும்பு முதலிய உவமைவகை ஒத்துப் பால்மாறு பட்டது. குடியது உயர்ச்சியானும் மதி போன்ற அவர் நற்குணங்களோடு மாறாதலானும், உலகெங்கும் பரந்து வெளிப்படும் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உயர்குடிப் பிறந்தார் மாட்டுக் குற்றமுளதாயின், அது வானத் தின் மதியின் கணுள்ள மறுப்போல் உயர்ந்து விளங்கும்; ஆதலால், குற்றப்பட ஒழுகற்க,
(என்றவாறு). இது குற்றஞ் செய்தலைத் தவிர வேண்டுமென்றது.
958

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்

If lack of love appear in those who bear some goodly name,
‘Twill make men doubt the ancestry they claim.

ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில்‌ அன்பற்ற தன்மை காணப்பட்டால்‌, அவனை அவனுடைய குடிப்பிறப்புப்‌ பற்றி ஐயப்பட நேரும்‌.

Tf one of a good family betrays want of affection, his descent from it will be called in question.

பரிமேலழகர் உரை நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் - குலநலமுடையனாய் வருகின்றவன்கண்ணே ஈரம் இன்மை உளதாமாயின்; அவனைக் குலத்தின்கண் ஐயப்படும் - அவனை அக்குலப்பிறப்பின் கண்ணே ஐயப்படும் உலகம்.
விளக்கம்:
(நலமும் குலமும், ஆகுபெயர். நாரின்மையால் கொடாமையும் கடுஞ்சொல்லும் முதலிய கூறப்பட்டன. 'தோன்றின்' என்பது தோன்றாமை விளக்கி நின்றது. நலனுடையனாய் வருதலினிடையே இவை தோன்றலின், உள்ளது ஐயமாயிற்று. உலகம் என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயப்படல் என்பது பாடமாயின், ஐயப்படுக என விதியாக்கி உரைக்க. இவை இரண்டு பாட்டானும் வேறுபட்ட வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவன் குடிநலத்தின்கண்ணே நீர்மை யின்மை தோன்றுமா யின், அவனைக் குலத்தின்கண் தப்பினவனென்று ஐயப்படுக,
(என்றவாறு).
959

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்

Of soil the plants that spring thereout will show the worth:
The words they speak declare the men of noble birth.

இன்ன நிலத்தில்‌ இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும்‌; அதுபோல்‌ குடியிற்‌ பிறந்தவரின்‌ வாய்ச்சொல்‌ அவருடைய குடிப்பிறப்பைக்‌ காட்டும்‌.

As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one’sbirth).

பரிமேலழகர் உரை நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் - நிலத்தினியல்பை அதன் கண் முளைத்த முளை காட்டும்; குலத்திற்பிறந்தார் வாய்ச்சொல் காட்டும் - அது போலக் குலத்தின் இயல்பை அதன் கண் பிறந்தார் வாயிற் சொல் காட்டும்.
விளக்கம்:
(கிடந்தமை உள்ளபடி முளைத்தமாத்திரத்தானே நன்மையும் தீமையும் தெரிதலின், இலை முதலிய கூறாராயினார். ஆகவே, பொருளினும் செயல் முதலியன வேண்டாவாயின. குலத்து இயல்பு அறிதற்கருவி கூறுவார் போன்று, இன்சொல் வேண்டுமென்றவாறாயிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வித்து நிலத்தின்கண் மறைந்து கிடப்பினும், அது மறைந்து கிடந்தமையை அதன் முளை யறிவிக்கும்; அதுபோல், உயர்குடிப்பிறந்தாரை அவரவர் வாயிற்சொல் அறிவிக்கும், (எ - று.)
960

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு

Who seek for good the grace of virtuous shame must know;
Who seek for noble name to all must reverence show.

ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால்‌ நாணம்‌ உடையவனாக வேண்டும்‌: குடியின்‌ உயர்வு வேண்டுமானால்‌ எல்லோரிடத்தும்‌ பணிவு வேண்டும்‌.

He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.

பரிமேலழகர் உரை நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் - ஒருவன் தனக்கு நலனுடைமையை வேண்டுவானாயின், தான் நாணுடையன் ஆதலை வேண்டுக; குலம் வேண்டின் யார்க்கும் பணிவு வேண்டுக - குலனுடைமையை வேண்டுவானாயின், பணியப்படுவார் யாவர் மாட்டும் பணிதலை வேண்டுக.
விளக்கம்:
(நலம் - புகழ் புண்ணியங்கள். 'வேண்டும்' என்பது, விதிப் பொருட்டாய் நின்றது. 'வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்" (தொல்.சொல்.கிளவி.33) என்புழிப்போல. "அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர், தந்தைதாய் என்றிவர்" எல்லாரும் அடங்க, 'யார்க்கும்' என்றார். பணிவு - இருக்கை எழலும் எதிர் செலவும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் குடிமைக்கு வேண்டுவன கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவர் தமக்கு நலத்தை வேண்டுவாராயின், நாணுடைமையை விரும்புக; அவ்வண்ணமே, குலத்தை விரும்புவாராயின், யாவர்மாட்டும் தாழ்ந் தொழுகுதலை விரும்புக,
(என்றவாறு). இது பணிந்தொழுக வேண்டு மென்றது.


transliteration

itrpirandhthaar kanallathu illai iyalpaakach
seppamum naanum orungku

olukkamum vaaimaiyum naanumim moonrum
ilukkaar kutippirandh thaar

nakaieekai insol ikalaamai naankum
vakaiyaenpa vaaimaik kutikku

adukkiya koati paerinum kutippirandhthaar
kunruva seithal ilar

valangkuva thulveelndhthak kannum palangkuti
panpil thalaippirithal inru

chalampatrrich saalpila seiyaarmaa chatrra
kulampatrri vaalthumyen paar

kutippirandhthaar kanvilangkum kutrram visumpin
mathikkan maruppol uyarndhthu

nalaththinkan naarinmai thonrin avanaik
kulaththinkan aiyap padum

nilaththil kidandhthamai kaalkaatdum kaatdum
kulaththil pirandhthaarvaaich sol

nalamvaentin naanutaimai vaendum kulamvaentin
vaenduka yaarkkum panivu