Familiarity 81

801

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு

Familiarity is friendship’s silent pact,
That puts restraint on no familiar act.

பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினவினால்‌ அது பழகியவர்‌ உரிமைபற்றிச்‌ செய்யும்‌ செயலைக்‌ கீழ்ப்படுத்தாமல்‌ ஏற்கும்‌ நட்பாகும்‌.

Intimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (oflongstanding intimacy).

பரிமேலழகர் உரை பழைமை எனப்படுவது யாது எனின் - பழைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு - அது பழைமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவற்றிற்கு உடம்படும் நட்பு.
விளக்கம்:
('கிழமை' ஆகுபெயர். 'கெழுதகைமை' என வருவனவும் அது. உரிமையால் செய்வனவாவன, கருமமாயின செய்யுங்கால் கேளாது செய்தல், கெடும்வகை செய்தல், தமக்கு வேண்டியன தாமே கோடல், பணிவு அச்சங்கள் இன்மை என்றிவை முதலாயின, சிதைத்தல் - விலக்கல், இதனான், 'பழைமையாவது காலஞ்சென்றதன்று, இப்பெற்றித்தாய நட்பு,' என்பது கூறப்பட்டது..)
மணக்குடவர் உரை பழைமையாவது நட்டோரது உரிமை கூறுதல். இஃது அவருரியையால் செய்தனவற்றிற்குப் பொறுக்கவேண்டுமென்று அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) பழைமையென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாதொன் றிலும் உரிமையை அறுத்தலில்லாத நட்பு,
(என்றவாறு). இது பழையவன் செய்த உரிமையைச் சிறிதுஞ் சிதையாது உடன்படுதல் நட்பாவதென்றது.
802

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்

Familiar freedom friendship’s very frame supplies;
To be its savour sweet is duty of the wise.

நட்பிற்கு உறுப்பாவது நண்பருடைய உரிமைச்‌ செயலாகும்‌; அந்த உரிமைச்‌ செயலுக்கு உடன்பட்டவராதல்‌ சான்றோரின்‌ கடமையாகும்‌.

The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased withsuch a right is the duty of the wise.

பரிமேலழகர் உரை நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை - நட்பிற்கு அவயவமாவன நட்டார் உரிமையால் செய்வன; அதற்கு உப்பாதல் சான்றோர் கடன் - அதனால் அவ்வுரிமைக்கு இனியராதல் அமைந்தார்க்கு முறைமை.
விளக்கம்:
(வேறன்மை தோன்ற 'உறுப்பு' என்றார். உறுப்பு என்பது ஈண்டு இலக்கணையடியாக வந்த குறிப்புச் சொல். அவயவமாதல் அறிந்தே இனியவராவர் என்பது தோன்றச் சான்றோர்மேல் வைத்தார்..)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நட்பிற்கு அங்கமாவது உரிமை ; அவ் வுரிமையால் செய்யுமதற்கு உடன்படுதல் சான்றோர்க்கு இயல்பு,
(என்றவாறு). இது பேய்ச்சுரைக்காய்க்குப் பல காயம் அமைத்தாலும் இனிமையுண்டா காது போல, உடன்படாராயின் இனிமை உண்டாகாதாதலான் உடன்படல் வேண்டு மென்றது.
803

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை

When to familiar acts men kind response refuse,
What fruit from ancient friendship’s use?

பழகியவர்‌ உரிமைபற்றிச்‌ செய்யும்‌ செயலைத்‌ தாம்‌ செய்தது போலவே கருதி உடன்படாவிட்டால்‌ அவரோடு தாம்‌ பழகிய நட்பு என்ன பயன்‌ தரும்‌?

Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done throughthe right of intimacy ?

பரிமேலழகர் உரை கெழுதகைமை செய்தாங்கு அமையாக்கடை - தாம் உடம்படாதனவேனும் நட்டார் உரிமையாற் செய்தனவற்றிக்குத் தாம் செய்தாற் போல உடம்படாராயின்; பழகிய நட்பு எவன் செய்யும் - அவரோடு பழையதாய் வந்த நட்பு என்ன பயனைச் செய்யும்?
விளக்கம்:
(செய்தார் போல உடம்படுதலாவது, தாமும் அவரிடத்து உரிமையால் உடம்படுதல். இவை இரண்டு பாட்டானும் பழைமையான் வரும் உரிமையது சிறப்புக் கூறப்பட்டது..)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவன் தனது உரிமையாலே இசைவில்லாதவற்றைச் செய்த விடத்து, தான் அமையானாயின், பின் அவனோடு பழகிய நட்பு யாதினைச் செய்யும்? இது மறுமையிற் பயன் படானென்றது.
804

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்

When friends unbidden do familiar acts with loving heart,
Friends take the kindly deed in friendly part.

உரிமையால்‌ கேளாமலே நண்பர்‌ ஒன்றைச்‌ செய்தால்‌, அந்த உரிமையைப்‌ போற்றி விரும்பும்‌ தன்மையோடு அச்செயலையும்‌ விரும்பி உடன்பட்டிருப்பர்‌ அறிஞர்‌.

If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will bepleased with them on account of its desirability.

பரிமேலழகர் உரை நட்டார் கெழுதகையான் கேளாது செயின் - தம் கருமத்தை நட்டார் உரிமையாற் கேளாது செய்தாராயின்; விழைதகையான் வேண்டி இருப்பர் - அச் செயலது விழையப்படுந்தன்மை பற்றி அதனை விரும்புவர் அறிவுடையார்.
விளக்கம்:
(ஒருவர்க்குத் தம் கருமம் தாம் அறியாமல் முடிந்திருத்தலின் ஊங்கு நன்மை யின்மையின், அச்செயல் விழையத்தக்கதாயிற்று. அதனை அவ்வாறு அறிந்து விரும்புதல் அறிவுடையார்க்கல்லது இன்மையின், அவர்மேல் வைத்துக் கூறினார். 'வேண்டியிருப்பார்' என்பது எழுந்திருப்பார் என்பது போல ஒரு சொல் நீர்மைத்து. இதனான் கேளாது செய்துழி அதனை விரும்புக என்பது கூறப்பட்டது..)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நட்டோர் தமது உரிமையாலே கேளாது இசைவில்லாதவற்றைச் செய்வாராயின், அதற்கு முனியாது அதனையுந் தாம் விரும்பும் தன்மையோடே கூட விரும்பத் தப்பாதிருப்பர் மிக்கார், (எ - று. இஃது உடன்படுதலன்றி விரும்பவும் வேண்டு மென்றது.
805

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்

Not folly merely, but familiar carelessness,
Esteem it, when your friends cause you distress.

வருந்தத்தக்க செயல்களை நண்பர்‌ செய்தால்‌ அதற்குக்‌ காரணம்‌, அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்‌.

If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but alsoto the strong claims of intimacy.

பரிமேலழகர் உரை நோதக்க நட்டார் செயின் - தாம் வெறுக்கத் தக்கவனற்றை நட்டார் செய்தாராயின்; பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்று உணர்க - அதற்குக் காரணம் ஒன்றில் பேதைமை என்றாதல் ஒன்றின் மிக்க உரிமை என்றாதல் கொள்க.
விளக்கம்:
('ஒன்றோ' என்பது எண்ணிடைச்சொல். 'செயின்' எனவே, தம் இயல்பால் செய்யாமை பெற்றாம். இது வருகின்றவற்றுள்ளும் ஒக்கும் இழவூழான் வரும் பேதைமை யாவர்க்கும் உண்மையின் தமக்கு ஏதங்கொண்டாரென்றாதல், ஊழ்வகையான் எம்மின் வரற்பாலது ஒற்றுமை மிகுதி பற்றி அவரின் வந்ததென்றாதல் கொள்வதல்லது, அன்பின்மையென்று கொள்ளப்படாது என்பதாம். கெடும் வகை செய்யின் அதற்குக் காரணம் இதனான் கூறப்பட்டது..)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தாம் நோவத்தக்கனவற்றை நட்டோர் செய்வாராயின், அதற்கு முனியாது ஒன்றில் அறியாமையாலே செய்தாரென்று கொள்க; ஒன்றில் பெரிய உரிமையாலே செய்தாரென்று கொள்க,
(என்றவாறு).
806

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு

Who stand within the bounds quit not, though loss impends,
Association with the old familiar friends.

உரிமைவாழ்வின்‌ எல்லையில்‌ நின்றவர்‌, தமக்கு அழிவு நேர்ந்தவிடத்திலும்‌ பழைமையாய்‌ உறவுகொண்டு நின்றவரின்‌ தொடர்பைக்‌ கைவிடமாட்டார்‌.

Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacyof long-standing friends.

பரிமேலழகர் உரை எல்லைக்கண் நின்றார் - நட்பு வரம்பு இகவாது அதன்கண்ணே நின்றவர்; தொல்லைக்கண் நின்றார்தொடர்பு தொலைவிடத்தும் துறவார் - தம்மொடு பழைமையின் திரியாது நின்றாரது நட்பினை அவரால் தொலைவு வந்தவிடத்தும் விடார்.
விளக்கம்:
(பழைமையின் திரியாமை - உரிமையொழியாமை. தொலைவு - பொருட்கேடும் போர்க்கேடும்.
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒழுக்கத்தின்கண்ணே நின்றார் பழைமையின்கண்ணே நின்றா ரது நட்பை அவராலே தமக்கு அழிவு வந்தவிடத்தும் விடார், (எ - று. எல்லை - வரம்பு.
807

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்

True friends, well versed in loving ways,
Cease not to love, when friend their love betrays.

அன்புடன்‌ தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர்‌, அழிவு தரும்‌ செயல்களைப்‌ பழகியவர்‌ செய்த போதிலும்‌ தம்‌ அன்பு நீங்காமலிருப்பார்‌.

Those who have (long) stood in the path of affection will not give it up even if their friends cause(them) their ruin.

பரிமேலழகர் உரை அழிவந்த செய்யினும் அன்பு அறார் - நட்டார் தமக்கு அழிவு வந்தவற்றைச் செய்தாராயினும் அவர் மாட்டு அன்பு ஒழியார்; அன்பின் வழிவந்த கேண்மையவர் - அன்புடனே பழையதாய் வந்த நட்பினை உடையார்.
விளக்கம்:
('அழி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். அழிவு - மேற்சொல்லிய கேடுகள். இவை இரண்டு பாட்டானும் கேடு செய்தக்கண்ணும் நட்பு விடற்பாற்றன்று என்பது கூறப்பட்டது..)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தமக்கு அழிவு வரும் கருமங்களைப் பழைய நட்டோர் செய்தா ராயினும், அவரோடு உள்ள அன்புவிடார் ; முற்காலத்து அன்பின் வழியாக வந்த நட்பையுடையவர்,
(என்றவாறு). இது கேடுவருவன் செய்யினும் அமைய வேண்டு மென்றது.
808

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்

In strength of friendship rare of friend’s disgrace who will not hear,
The day his friend offends will day of grace to him appear.

பழகிய நண்பர்‌ செய்த தவறு பற்றிப்‌ பிறர்‌ சொன்னாலும்‌ கேளாமலிருக்கும்‌ உரிமை வல்லவர்க்கு, அந்‌ நண்பர்‌ தவறு செய்வாரானால்‌ அது பயனுள்ள நாளாகும்‌.

To those who understand that by which they should not listen to (tales about) the faults of theirfriends, that is a (profitable) day on which the latter may commit a fault.

பரிமேலழகர் உரை கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நட்டார் செய்த பிழையைத் தாமாகவே யன்றிப் பிறர் சொன்னாலும் கொள்ளாத உரிமை அறியவல்லார்க்கு, நட்டார் இழுக்கம் செயின் நாள் - அவர் பிழை செய்வாராயின் அது பயன்பட்ட நாளாம்.
விளக்கம்:
(பிழையாவன: சொல்லாது நற்பொகுள் வௌவல், பணியாமை, அஞ்சாமை முதலாயின. கேட்டல் - உட்கோடல். 'கெழுதகைமை வல்லார்' என்பது ஒரு பெயராய், 'கேளாத' என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று. செய்து போந்துழியல்லது அவ்வுரிமை வெளிப்படாமையின், செய்யாதன நாளல்லவாயின. இதனான் பிழை பொறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது..)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையை யறியவல்லார்க்கு நட்டோர் தப்புச் செய்யின், அந்த நாள் நல்ல நாளாம், (எ-று) இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டும் மென்றது
809

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு

Friendship of old and faithful friends,
Who ne’er forsake, the world commends.

உரிமை கெடாமல்‌ தொன்றுதொட்டு வந்த உறவு உடையவரின்‌ தொடர்பைக்‌ கைவிடாதவரை உலகம்‌ விரும்பிப்‌ போற்றும்‌.

They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they havekept up an unbroken long-standing intimacy.

பரிமேலழகர் உரை கெடா வழிவந்த கேண்மையார் கேண்மை - உரிமை அறாது பழையதாய் வந்த நட்பினை உடையாரது நட்பினை, விடார் உலகு விழையும் - அவர் பிழை நோக்கி விடுதல் செய்யாதாரை உலகம் நட்புக் குறித்து விரும்பும்.
விளக்கம்:
('கெடாது' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. விடாதாரை எனவே, விடுதற்காரணம் கூறப்பட்டது. 'நம்மாட்டும் இவர் இத்தன்மையராவர்' என்று யாவரும் தாமே வந்து நட்பாவர் என்பதாம். 'கெடார்' என்று பாடம் ஓதி, 'நட்புத் தன்மையில் கெடாராகி' என்று உரைப்பாரும் உளர்..)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) குற்றம் உண்டாயின் அவ்விடத்து நட்பினிற் கெடாராய்க் குலத் தின் வழி வந்த நட்புடையாரது நட்பை விடுதலின்றி உலகத்தார் விரும்புவர். 9
810

விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்

Ill-wishers even wish them well, who guard.
For ancient friends, their wonted kind regard.

(தவறு செய்தபோதிலும்‌) பழகிய நண்பரிடத்தில்‌ தம்‌ உரிமைப்‌ பண்பிலிருந்து மாறாதவர்‌, தம்‌ பகைவராலும்‌ விரும்பப்படுதற்குரிய சிறப்பை அடைவர்‌.

Even enemies will love those who have never changed in their affection to their long-standingfriends.

பரிமேலழகர் உரை பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் - பழைய நட்டார் பிழை செய்தாராயினும் அவர்மாட்டுத் தம் பண்பின் நீங்காதார்; விழையார் விழையப்படுப - பகைவரானும் விரும்பப்படுவர்.
விளக்கம்:
(தம் பண்பாவது செய்யாத முன்போல அன்புடையராதல். மூன்றன் உருபும் சிறப்பு உம்மையம் விகாரத்தால் தொக்கன. அத் திரிபின்மை நோக்கிப் பகைவரும் நட்டாராவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பழைமையறிவார் எய்தும் பயன் கூறப்பட்டது..)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பழைய நட்டோர்மாட்டுக் குணத்தினின்று நீங்காதார் விரும்பா தாராலும் விரும்பப் படுவர்,
(என்றவாறு) இது பகைவரும் விரும்புவாரென்றது.


transliteration

palaimai yenappaduvathu yaathaenin yaathum
kilamaiyaik keelndhthitaa natpu

natpitr kuruppuk keluthakaimai matrrathatrku
uppaathal saannor kadan

palakiya natpaevan seiyung keluthakaimai
seithaangku amaiyaak katai

vilaithakaiyaan vaenti iruppar keluthakaiyaatr
kaelaathu nattaar seyin

paethaimai onno paerungkilamai yenrunarka
nothakka nattaar seyin

yellaikkan ninraar thuravaar tholaividaththum
thollaikkan ninraar thodarpu

alivandhtha seiyinum anparaar anpin
valivandhtha kaenmai yavar

kaelilukkam kaelaak keluthakaimai vallaarkku
naalilukkam nattaar seyin

ketaaa valivandhtha kaenmaiyaar kaenmai
vitaaar vilaiyum ulaku

vilaiyaar vilaiyap padupa palaiyaarkan
panpin thalaippiriyaa thaar