The Method of Acting 68

671

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது

Resolve is counsel’s end. If resolutions halt
In weak delays, still unfulfilled, ’tis grievous fault.

ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும்‌. அவ்வாறு கொண்ட துணிவு காலந்‌ தாழ்த்து நிற்பது குற்றமாகும்‌.

Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil.

பரிமேலழகர் உரை சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் - விசாரத்திற்கு எல்லையாவது விசாரிக்கின்றான் 'இனி இது தப்பாது' என்னும் துணிவினைப் பெறுதல்; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது - அங்ஙனம் துணிவுபெற்ற வினை, பின் நீட்டிப்பின்கண் தங்குமாயின், அது குற்றமுடைத்து.
விளக்கம்:
['சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் எனவே, துணிவு எய்தும் அளவும் சூழ வேண்டும் என்பது பெற்றாம். பின்னர்த் 'துணிவு' ஆகு பெயர். நீட்டிப்பு; செய்யுங்காலத்துச் செய்யாமை. அஃதுள்வழிக் காலக்கழி வாகலானும், பகைவர் அறிந்து அழித்தலானும் முடியாமையின் அதனைத் 'தீது' என்றார்.]
மணக்குடவர் உரை வினைசெயல்வகையாவது வினை செய்யுமாறு கூறுதல். மேல் வினை செய் யுங்கால் திண்ணியராக வேண்டு மென்று கூறினார் திண்ணியார் வினை செய் யும் வண்ணம் கூறுகின்றாராதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) சூழ்ச்சிக்கு எல்லை துணிவு பெறுதல்; அவ்வாறு துணிந்த வினை நீட்டித்தலின்கண்ணே கிடக்குமாயின், அது தீதாம்,
(என்றவாறு). இது வினைசெயத் துணிந்த காலத்து நீட்டிக்குமாயின், அதனையறிந்து பகை வர் தம்மைக் காப்பார்; ஆதலால், நீட்டியாது விரைந்து வினை செய்யவேண்டும் மென்றது.
672

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை

Slumber when sleepy work’s in hand: beware
Thou slumber not when action calls for sleepless care

காலந்தாழ்த்துச்‌ செய்யத்‌ தக்கவற்றைக்‌ காலந்தாழ்த்தே செய்யவேண்டும்‌; காலந்தாழ்க்காமல்‌ விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச்‌ செய்யக்‌ காலந்தாழ்த்தக்கூடாது.

Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over.

பரிமேலழகர் உரை தூங்கிச் செயற்பால தூங்குக - நீட்டித்துச் செய்யும் பகுதியவாய வினைகளுள் நீட்டிக்க; தூங்காது செய்யும் வினை தூங்கற்க - நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டிக்க; தூங்காது செய்யும் வினை தூங்கற்க - நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டியாது ஒழிக.
விளக்கம்:
[இரு வழியும் இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்கப்பட்டது. இருவதை வினைகளும் வலியானும் காலத்தானும் அறியப்படும். மாறிச்செய்யின், அவை வாயா என்பது கருத்து. மேல் 'தூங்காமை' என்றார் (குறள் 383); ஈண்டதனைப் பகுத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் பொதுவகையால் வினை செய்யும் திறம் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்)தாழ்த்துச் செய்யவேண்டும் வினையைத் தாழ்த்துச் செய்க; தாழாமற் செய்யவேண்டும் வினையைத் தாழாமற் செய்க,
(என்றவாறு).
673

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்

When way is clear, prompt let your action be;
When not, watch till some open path you see.

இயலுமிடத்திலெல்லாம்‌ செயலைச்‌ செய்து முடித்தல்‌ நல்லது; இயலவில்லையானால்‌ பயன்படும்‌ இடம்‌ நோக்கியாவது செய்யவேண்டும்‌.

Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method.

பரிமேலழகர் உரை ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்று - வினை செய்யுங்கால் இயலுமிடத்தெல்லாம் போராற் செய்தல் நன்று; ஒல்லாக்கால் செல்லும் வாய் நோக்கிச் செயல் - அஃது இயலாவிடத்து ஏனை மூன்று உபாயத்துள்ளும் அது முடிவதோர் உபாயம் நோக்கிச் செய்க.
விளக்கம்:
[இயலுமிடம்: பகையின் தான் வலியனாகிய காலம். அக்காலத்துத் தண்டமே நன்று என்றார், அஞ்சுவது அதற்கேயாகலின். இயலா இடம் - ஒத்த காலமும் மெலிய காலமும் அவ்விரண்டு காலத்தும் சாமபேத தானங்களுள் அது முடியும் உபாயத்தாற் செய்க என்றார், அவை ஒன்றற்கொன்று வேறுபாடுடையவேனும் உடம்படுத்தற் பயத்தான் தம்முள் ஒக்கும் ஆகலின். இதனான், வலியான், ஒப்பான், மெலியான் என நிலை மூவகைத்து என்பதூஉம், அவற்றுள் வலியது சிறப்பும் கூறப்பட்டன.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இயலும் இடமெல்லாம் வினை செய்தல் நன்று; இயலாத காலத்து அதனை நினைந்திருந்து, இயலும் இடம் பார்த்துச் செய்க,
(என்றவாறு). இது வினை செய்து முடிந்ததில்லை யென்று இகழாது பின்பு காலம் பார்த் துச் செய்கவென்றது,
674

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்

With work or foe, when you neglect some little thing,
If you reflect, like smouldering fire, ’twill ruin bring.

செய்யத்‌ தொடங்கிய செயல்‌, கொண்ட பகை என்று இவ்விரண்டின்‌ குறை, ஆராய்ந்து பார்த்தால்‌, தீயின்‌ குறைபோல்‌ தெரியாமல்‌ வளர்ந்து கெடுக்கும்‌.

When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire.

பரிமேலழகர் உரை வினை பகை என்ற இரண்டின் எச்சம் - செய்யத் தொடங்கிய வினையும் களையத்தொடங்கிய பகையும் என்று சொல்லப்பட்ட இரண்டனது ஒழிவும்; நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் - ஆராயுங்கால் தீயினது ஒழிவு போலப் பின் வளர்ந்து கெடுக்கும்.
விளக்கம்:
[இனி, இக்குறை என் செய்வது'? என்று இகழ்ந்தொழியற்க, முடியச் செய்க என்பதாம். பின் வளர்தல் ஒப்புமைபற்றிப் பகையெச்சமும் உடன் கூறினார். இதனான் வலியான் செய்யுந் திறம் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வினையும் பகைமையு மென்னும் இரண்டினது ஒழிப்பு, விசாரிக் குங்காலத்து, தீயின் ஒழிவுபோலக் கெடுக்கும்,
(என்றவாறு) எச்சம் - சேஷம் இது வினை செய்யுங்கால் சிறி தொழியச் செய்தோமென்று விடலாகாதென்றது.
675

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்

Treasure and instrument and time and deed and place of act :
These five, till every doubt remove, think o’er with care exact.

வேண்டிய பொருள்‌, ஏற்ற கருவி, தக்க காலம்‌, மேற்கொண்ட தொழில்‌, உரிய இடம்‌ ஆகிய ஐந்தினையும்‌ மயக்கம்‌ தீர எண்ணிச்‌ செய்ய வேண்டும்‌.

Do an act after a due consideration of the (following) five, viz. money, means, time, execution and place.

பரிமேலழகர் உரை பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் - வினை செய்யுமிடத்துப் பொருளும் கருவியும் காலமும் வினையும் இடனுமாகிய இவ்வைந்தனையும்; இருள் தீர எண்ணிச் செயல் - மயக்கம் அற எண்ணிச் செய்க.
விளக்கம்:
[எண்ணொடு, பிறவழியும் கூட்டப்பட்டது. பொருள் - அழியும் பொருளும் ஆகும் பொருளும் கருவி - தன் தானையும் மாற்றார்தானையும். காலம் - தனக்கு ஆகுங் காலமும் அவர்க்கு ஆகுங் காலமும். வினை - தான் வல்ல வினையும் அவர் வல்லவினையும். இடம் - தான் வெல்லும் இடமும் அவர் வெல்லும் இடமும். இவற்றைத் தான் வெற்றியெய்தும் திறத்தில் பிழையாமல் எண்ணிச் செய்க என்பதாம்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பொருளும், கருவியும், காலமும், வினையும், வினை செய்யும் இடமும் மென்னும் ஐந்தினையும் மயக்கந்தீர எண்ணி, பின்பு வினைசெயத் தொடங் குக,
(என்றவாறு). இவற்றுள், ஒவ்வொன்றும் இரண்டு இரண்டு வகைப்படும் :- (1) பொருளா வது கெடும்பொருளும் பெறும் பொருளும்; (2) கருவியாவது தனக்கு உள்ள படை யும் மாற்றரசர்க்கு உள்ள படையும் ;(2) காலமாவது தனக்காங்காலமும் மாற்றரசர்க் காங்காலமும்; (4) வினையாவது தான் செய்யும் வினையும் பகைவர் செய்யும் வினை யும்; (5) இடமாவது தனக்கா மிடமும் பகைவர்க்கா மிடமும் ஆம். இவை செய் யும் வினைக்கு முற்பட வேண்டுதலின், முற்கூறப்பட்டன.
676

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்

Accomplishment, the hindrances, large profits won
By effort: these compare,—then let the work be done!

செயலை முடிக்கும்‌ வகையும்‌, வரக்கூடிய இடையூறும்‌, முடிந்தபோது கிடைக்கும்‌ பெரும்பயனும்‌ ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்‌.

An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion).

பரிமேலழகர் உரை முடிவும் - வினை செய்யுங்கால் அது முடிவதற்குளதாம் முயற்சியும்; இடையூறும் - அதற்கு வரும் இடையூறும்; முற்றியாங்கு எய்தும் படுபயனும் - அது நீங்கி முடிந்தால் தான் எய்தும் பெரும்பயனும்; பார்த்துச் செயல் - சீர் தூக்கிச் செய்க.
விளக்கம்:
[முடிவு, ஆகுபெயர். 'முயற்சி இடையூறுகளது அளவின் பயனது அளவு பெரியதாயின் செய்க' என்பதாம்]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வினை தொடங்கினால் அது முடியும் வண்ண மும், அதற்கு வரும் இடையூறும், முடிந்தா லுண்டாகும் பெரும் பயனும் முன்பே கண்டு, பின்பு வினைசெய்க,
(என்றவாறு).
677

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்

Who would succeed must thus begin: first let him ask
The thoughts of them who throughly know the task.

செயலைச்‌ செய்கின்றவன்‌ செய்யவேண்டியமுறை, அந்தச்‌ செயலின்‌ உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தைத்‌ தான்‌ ஏற்றுக்‌ கொள்வதாகும்‌.

The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof.

பரிமேலழகர் உரை செய்வினை செய்வான் செயன் முறை - அவ்வாற்றால் செய்யப்படும் வினையைத் தொடங்கினான் செய்யும் முறைமையாவது; அவ்வினை உள் அறிவான் உள்ளம் கொளல் - அவனது உளப்பாட்டினை அறிவான் கருத்தினைத் தான் அறிதல்.
விளக்கம்:
['அவ்வாறு' என்றது, பொருள் முதலிய எண்ணலையும் முடிவு முதலிய தூக்கலையும். உள் அறிவான் - முன் செய்து போந்தவன். அவன் கருத்து; அவன் செய்து போந்த உபாயம். அதனை யறியவே, தானும் அதனால் செய்து பயன் எய்தும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஒப்பான் செய்யுந் திறம் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) செய்யத்தகும் வினையைச் செய்யுமவன் செய்யும் முறைமை யாவது அவ்வினையின் து உளப்பாடு அறிவானது உள்ளத்தைக் கூட்டிக்கோடல்.
678

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று

By one thing done you reach a second work’s accomplishment;
So furious elephant to snare its fellow brute is sent

ஒரு செயலைச்‌ செய்யும்போது அச்செயலால்‌ மற்றொரு செயலையும்‌ செய்து முடித்துக்கொள்ளல்‌, ஒரு யானையால்‌ மற்றொரு யானையைப்‌ பிடித்தலைப்‌ போன்றது.

To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another.

பரிமேலழகர் உரை வினையான் வினை ஆக்கிக்கோடல் - செய்கின்ற வினையாலே அன்னது பிறிதும் ஓர் வினையை முடித்துக் கொள்க; நனைகவுள் யானையால் யானை யாத்தற்று - அது மதத்தான் நனைந்த கபோலத்தினையுடைய யானையாலே அன்னது பிறிது மோர் யானையைப் பிணித்தனோடு ஒக்கும்.
விளக்கம்:
[பிணித்தற்கு அருமை தோன்ற 'நனைகவுள்' என்பது பின்னும் கூறப்பட்டது. தொடங்கிய வினையானே பிறிதும் ஓர் வினையை முடித்தற்கு உபாயம் ஆமாறு எண்ணிச் செய்க. செய்யவே, அம்முறையான் எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒரு வினையால் பிறிதொரு வினையைச் செய்து கொள்வது, ஒரு மதயானையால் பிறிதொரு மதயானையைப் பிணித்தாற்போலும், (எ-று), இது தமக்கு ஒரு பகைவர் தோன்றினால் அவர்க்குப் பகையாயினாரை அவ ரோடு பகைக்குமாறு பண்ணுவார்பக்கல் பகையாய் வருவாரில்லை யென்றது.
679

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்

Than kindly acts to friends more urgent thing to do,
Is making foes to cling as friends attached to you.

பகைவராக உள்ளவரைப்‌ பொருந்துமாறு சேர்த்துக்‌ கொள்ளல்‌, நண்பர்க்கு உதவியானவற்றைச்‌ செய்தலை விட விரைந்து செய்யத்தக்கதாகும்‌.

One should rather hasten to secure the alliance of the foes (of one’s foes) than perform good offices to one’s friends.

பரிமேலழகர் உரை நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே - வினை செய்வானால் தன் நட்டார்க்கு இனியவற்றைச் செய்தலினும் விரைந்து செய்யப்படும்; ஒட்டாரை ஒட்டிக் கொளல் - தன் பகைவரோடு ஒட்டாரைத் தனக்கு நட்பாக்கிக்கோடல்.
விளக்கம்:
[அவ்வினை வாய்த்தற்பயத்தவாய இவ்விரண்டும் பகைவர்க்குத் தன் மெலிவு புலனாவதன் முன்னே செய்க என்பர், 'விரைந்தது' என்றார். 'விரைந்து செய்யப்படுவது' என்றவாறு வினைசெய்யும் திறமாகலின் பகைவரோடு ஒட்டாராயிற்று. தன் ஒட்டார் பிறருட்கூடாமல் மாற்றி வைத்தல் எனினும் அமையும்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தஞ் சுற்றத்திற்கு நல்லவை செய்தலினும், பகைவரைப் பொருந்தி நட்பாகக் கொள்ளுதலை விரைந்து செய்யவேண்டும்,
(என்றவாறு). இஃது அரசர்க்கும் ஒக்கக கொள்ள வேண்டுமாயினும், அமைச்சர் தம் தொழிலாக ஈண்டுக் கூறப்பட்டது
680

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து

The men of lesser realm, fearing the people’s inward dread,
Accepting granted terms, to mightier ruler bow the head.

வலிமை குறைந்தவர்‌, தம்மைச்‌ சார்ந்துள்ளவர்‌ நடுங்குவதற்காகத்‌ தாம்‌ அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால்‌ வலிமை மிக்கவரைப்‌ பணிந்து ஏற்றுக்‌ கொள்வார்‌.

Ministers of small states, afraid of their people being frightened, will yield to and acknowledge their superior foes, if the latter offer them a chance of reconciliation.

பரிமேலழகர் உரை உறை சிறியார் - ஆளும் இடஞ்சிறியராய அமைச்சர்; உள் நடுங்கல் அஞ்சி - தம்மின் வலியரால் எதிர்ந்தவழித் தம் பகுதி நடுங்கலை அஞ்சி; குறைபெறின் பெரியார்ப் பணிந்து கொள்வார். அந்நிலைக்கு வேண்டுவதாய சந்து கூடுமாயின், அவரைத் தாழ்ந்து அதனை ஏற்றுக் கொள்வர்.
விளக்கம்:
[இடம்:நாடும் அரணும். அவற்றது சிறுமை ஆள்வார்மேற் ஏற்றப்பட்டது. மெலியாரோடு சந்திக்கு வலியார் இயைதல் அரிதாகலின், 'பெறின்' என்றார். அடியிலே மெலியாராயினார் தம் பகுதியும் அஞ்சி நீங்கின் முதலொடும் கெடுவராகலின், அது வாராமல் சிறிது கொடுத்தும் சந்தியை ஏற்றுக் கொள்க என்பதாம். பணிதல் மானமுடையார்க்குக் கருத்து அன்மையின், 'கொள்வர்' என உலகியலால் கூறினார். இவை மூன்று பாட்டானும் மெலியான் செய்யும் திறம் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உறையும் இடம். சிறியார் தமது இடம் நடுங்குதற்கு அஞ்சித் தமது குறைதீரப் பெறின், தம்மின் பெரியாரைத் தாழ்ந்து . நட்பாகக் கொள்வர்.) இது சிறையானால் இவ்வாறு செய்தல் வேண்டுமென்றது.


transliteration

koolchi mutivu thunivaeithal aththunivu
thaalchiyul thangkuthal theethu

thoongkuka thoongkich seyatrpaala thoongkatrka
thoongkaathu seiyum vinai

ollumvaa yaellaam vinainanrae ollaakkaal
sellumvaai nokkich seyal

vinaipakai yenrirantin yechcham ninaiyungkaal
theeyaechcham polath thaerum

porulkaruvi kaalam vinaiyidanodu aindhthum
irultheera yennich seyal

mutivum itaiyoorum mutrriyaangku yeithum
padupayanum paarththuch seyal

seivinai seivaan seyanmurai avvinai
ullarivaan ullam kolal

vinaiyaan vinaiyaakkik koadal nanaikavul
yaanaiyaal yaanaiyaath thatrru

nattaarkku nalla seyalin viraindhthathae
ottaarai ottik kolal

uraisiriyaar ulnadungkal achik kuraipaerin
kolvar paeriyaarp panindhthu