Unforgetfulness 54

531

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு

‘Tis greater ill, it rapture of o’erweening gladness to the soul
Bring self-forgetfulness than if transcendent wrath control.

பெரிய உவகையால்‌ மகிழ்ந்திருக்கும்போது மறதியால்‌ வரும்‌ சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம்‌ வருவதைவிடத்‌ தீமையானதாகும்‌.

More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.

பரிமேலழகர் உரை சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு-மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி; இறந்த வெகுளியின் தீது-அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது.
விளக்கம்:
[மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும்; இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று.]
மணக்குடவர் உரை பொச்சாவாமையாவது மறவியின்றி யொழுகுதல். அது தனது சோர்வு பார்த்துப் பிறர் வஞ்சகஞ் செய்யுமிடங்களினும், அறம் பொருளின்பங்கள் செய்ய வேண்டுமிடங்களிலும் மறத்தலின்மை. பொச்சாப்பு எனினும் மறவி எனினும் இகழ்ச்சி எனினும் ஒக்கும். (இதன் பொருள்) மிகுத்த வெகுளியினும் தனக்குத் தீமையைச் செய்யும் ; மிக்க உவகைக்களிப்பினால் வரும் மறப்பு,
(என்றவாறு). தனக்குச் சிறந்த உவகை தன் மகிழ்ச்சியாற் சோருஞ் சோர்வு என்றும், உய்க்க வேண்டுமவரிடத்து உய்க்கும் உவகை என்றுமாம்.
532

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு

Perpetual, poverty is death to wisdom of the wise;
When man forgets himself his glory dies!

நாள்தோறும்‌ விடாமல்‌ வரும்‌ வறுமை அறிவைக்‌ கொல்வதுபோல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி கொன்றுவிடும்‌.

Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.

பரிமேலழகர் உரை புகழைப் பொச்சாப்புக் கொல்லும் - ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும்; அறிவினை நிச்சம் நிரப்புக் கொன்றாங்கு - அறிவினை நிச்சம் நிரப்புக் கெடுக்குமாறு போல.
விளக்கம்:
[நிச்ச நிரப்பு: நாள்தோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவு உடையான் கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும் பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து, அவன் நன்கு மதிப்பினை அழிக்கும்; அதுபோல மறவியும் புகழ் உடையான் கண் உண்டாயின், அவற்குத் தற்காவாமையானும், காரியக் கேட்டானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்கு மதிப்பினை அழிக்கும் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் பொச்சாப்பினது குற்றம் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மறவியாகின்றது புகழைக் கொல்லும் ; நாடோறும் இரவால் வருந்தி வயிற்றை நிறைக்கும் ஊண் அறிவைக் கொல்லுமாறு போல்,
(என்றவாறு). இவை மூன்றினாலும் பொருளின்கண் கடைப்பிடித்தல் கூறினார்.
533

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு

‘To self-oblivious men no praise’; this rule
Decisive wisdom sums of every school.

மறதியால்‌ சோர்ந்து நடப்பவர்க்குப்‌ புகழுடன்‌ வாழும்‌ தன்மையில்லை; அஃது உலகத்தில்‌ எப்படிப்பட்ட நூலோர்க்கும்‌ ஒப்பமுடிந்த முடிபாகும்‌.

Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

பரிமேலழகர் உரை பொச்சாப்பார்க்கும் புகழ்மை இல்லை-பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை; அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு-அவ்வின்மை இந்நீதி நூலுடை யார்க்கேயன்றி உலகத்து எவ்வகைபட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது.
விளக்கம்:
[அரசர்க்கேயன்றி அறம் முதலியன நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, 'எப்பால் நூலோர்க்கும் துணிவு' என்றார்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லையாம்; அஃது உலகத்து வழங்குகின்ற எவ்வகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு,
(என்றவாறு) இது பொச்சாப்பார்க்குப் புகழாகாதென்றது.
534

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு

‘To cowards is no fort’s defence’; e’en so
The self-oblivious men no blessing know.

உள்ளத்தில்‌ அச்சம்‌ உடையவர்க்குப்‌ புறத்திலே அரண்‌ இருந்தும்‌ பயன்‌ இல்லை; அதுபோல்‌ மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும்‌ பயன்‌ இல்லை.

Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so thethoughtless has no good (whatever advantages he may possess).

பரிமேலழகர் உரை அரண் அச்சம் உடையார்க்கு இல்லை - காடு மலை முதலிய அரண்களுள்ளே நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றால் பயன் இல்லை; ஆங்கு நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை - அதுபோலச் செல்வமெல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றால் பயன் இல்லை.
விளக்கம்:
[நன்மைக்கு ஏதுவாகலின் 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறு போல, மறவி உடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அச்சமுடையார்க்கு ஆவதொரு அரணில்லை; அதுபோல், பொச்சாப்புடையார்க்கு வருவதொரு நன்மை இல்லை ,
(என்றவாறு). இது பொச்சாப்புடையார்க்குக் காவலில்லை என்றது.
535

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்

To him who nought foresees, recks not of anything,
The after woe shall sure repentance bring.

வரும்‌ இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல்‌ மறந்து சோர்ந்தவன்‌, பின்பு அவை வந்துற்றபோது தன்‌ பிழையை நினைந்து இரங்குவான்‌.

The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwardsrepent for his fault.

பரிமேலழகர் உரை முன்னுறக் காவாது இழுக்கியான் - தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான்; பின் ஊறு தன்பிழை இரங்கிவிடும் - பின் வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும்.
விளக்கம்:
[காக்கப்படும் துன்பங்களாவன; சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. 'ஊற்றின்கண்' என்புழி உருவும் சாரியையும் உடன் தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், 'இரங்கிவிடும்' என்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தன்னாற் காக்கப்படுந் துன்பங்களை அவை வருதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் வந்துற்ற காலத்துக் காக்கலாகாமையின், அப் பிழைப்பினை நினைந்திரங்கிவிடும்,
(என்றவாறு).
536

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்

Towards all unswerving, ever watchfulness of soul retain,
Where this is found there is no greater gain.

யாரிடத்திலும்‌ எக்காலத்திலும்‌ மறந்தும்‌ சோர்ந்திருக்காத தன்மை தவறாமல்‌ பொருந்தியிருக்குமானால்‌, அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும்‌ இல்லை.

There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; andtowards all persons.

பரிமேலழகர் உரை இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் - அரசர்க்கு மறவாமைக் குணம் யாவர் மாட்டும் எக்காலத்தும் ஒழிவின்றி வாய்க்குமாயின்; அஃது ஒப்பது இல் - அதனை ஒக்கும் நன்மை பிறிது இல்லை.
விளக்கம்:
[வினை செய்வார் சுற்றத்தார் என்னும் தம்பாலார் கண்ணும் ஒப்ப வேண்டுதலின், 'யார் மாட்டும்' என்றும், தாம் பெருகியஞான்றும் சுருங்கிய ஞான்றும் ஒப்ப வேண்டுதலின் 'என்றும்' என்றும், எல்லாக் காரியங்களினும் ஒப்ப வேண்டுதலின் 'வழுக்காமை' என்றும் கூறினார். வாயின் என்பது முதனிலைத் தொழிற் பெயராக வந்த வினை எச்சம். வாய்த்தல்:நேர்படுதல்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யாவர்மாட்டும் எல்லா நாளும் தப்புச் செய்யாமை தப்பாமல் வாய்க்குமாயின், அதனை யொக்க நன்மை பயப்பது பிறிதொன்று இல்லை, (எ-று). இது முறைமை செய்யுங்கால் கடைப்பிடித்துச் செய்யவேண்டு மென்றது.
537

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்

Though things are arduous deemed, there’s nought may not be won,
When work with mind’s unslumbering energy and thought is done.

மறவாமை என்னும்‌ கருவிகொண்டு (கடமைகளைப்‌) போற்றிச்‌ செய்தால்‌, செய்வதற்கு அரியவை என்று ஒருவனால்‌ முடியாத செயல்கள்‌ இல்லை.

There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinchingendeavour.

பரிமேலழகர் உரை அரிய என்று ஆகாத இல்லை - இவை செய்தற்கரியன என்று சொல்லப்பட்டு ஒருவற்கு முடியாத காரியங்கள் இல்லை; பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின் - மறவாத மனத்தானே எண்ணிச் செய்யப் பெறின்.
விளக்கம்:
['பொச்சாவாத' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. அந்தக் கரணமாகலின் 'கருவி' என்றார். இடைவிடாத நினைவும் தப்பாத சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதில் முடியும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமையது சிறப்புக் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) செயற்கு அரியனவென்று செய்யலாகாதன வில்லை ; மறவாமை யாகிய கருவியாலே பாதுகாத்துச் செய்வானாயின்,
(என்றவாறு) இது வினை செய்யுங்கால் மறவாமை வேண்டுமென்றது.
538

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்

Let things that merit praise thy watchful soul employ;
Who these despise attain through sevenfold births no joy.

சான்றோர்‌ புகழ்ந்து சொல்லிய செயல்களைப்‌ போற்றிச்‌ செய்ய வேண்டும்‌; அவ்வாறு செய்யாமல்‌ மறந்து சோர்ந்தவருக்கு ஏழு பிறப்பிலும்‌ நன்மை இல்லை.

Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects andfails to perform them, for him there will be no (happiness) throughout the seven births.

பரிமேலழகர் உரை புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் - நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக் கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க; செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்-அங்ஙனம் செய்யாது மறந்தவர்க்கு எழுமையினும் நன்மை இல்லை ஆகலான்.
விளக்கம்:
[அச்செயல்களாவன: மூவகை ஆற்றலும், நால்வகை உபாயமும், ஐவகைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள், சாதி தருமமாகிய இவற்றின் வழீஇயோர்க்கும் உள்ளது நிரயத் துன்பமே ஆகலின், 'எழுமையும் இல்' என்றார். 'எழுமை' ஆகு பெயர். இதனான் பொச்சாவாது செய்ய வேண்டுவன கூறப்பட்டன.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உயாந்தாரால் புகழப்பட்டவையிற்றைக் கடைப்பிடித்துச் செய் தல் வேண்டும்; இவையிற்றைச் செய்யாது இகழ்ந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மையில்லையாமாதலான்,
(என்றவாறு). இஃது அறத்தின்கண் இகழாமற் செய்வது கூறிற்று.
539

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

Think on the men whom scornful mind hath brought to nought,
When exultation overwhelms thy wildered thought.

தாம்‌ தம்‌ மகிழ்ச்சியால்‌ செருக்குக்‌ கொண்டு கடமையை மறந்திருக்கும்‌ போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால்‌ முற்காலத்தில்‌ அழிந்தவரை நினைக்கவேண்டும்‌.

Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.

பரிமேலழகர் உரை தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து-அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது; இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக-முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க,
விளக்கம்:
[காரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் 'தம் மகிழ்ச்சியின்' என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும் ஆகலின், 'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்றும், கூறினார். கெட்டாரை உள்ளவே, 'நாமும் அவ்வாறே கெடுதும்' என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து 'எண்ணுக' என்று பாடம் ஓதுவாரும் உளர்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அரசர் குறித்துணரும் உணர்ச்சியின்மையாலே முன்பு கெட்ட அரசரை நினைக்க ; தாமும் தம்முடைய மகிழ்ச்சியாலே வலியராயிருக்கும் பொழுது,
(என்றவாறு) இஃது உண்பவை, உடுப்பவை, பூசுபவை சோதித்துக் கொள்க என்றது.
540

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்

‘Tis easy what thou hast in mind to gain,
If what thou hast in mind thy mind retain.

ஒருவன்‌ எண்ணியதை விடாமல்‌ எண்ணி, (சோர்வில்லாமல்‌) இருக்கப்‌ பெற்றால்‌, அவன்‌ கருதியதை அடைதல்‌ எளிதாகும்‌.

It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it.

பரிமேலழகர் உரை தான் உள்ளியது எய்தல் எளிது மன் - அரசனுக்குத்தான் எய்த நினைத்த பொருளை அந்நினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம்; மற்றும் உள்ளியது உள்ளப் பெறின் - பின்னும் அதனையே நினைக்கக் கூடுமாயின்.
விளக்கம்:
[அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழி இசைக்கண் வந்தது. அதனையே நினைத்தலாவது; மறவி இன்றி அதன் கண்ணே முயறல். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தான் நினைந்த பொருளைப் பெறுதல் எளிது; பின்பும், அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின்,
(என்றவாறு). இனிப் பொருளின் கண் மறவாமை கூறுவார் முற்பட நினைத்ததனை மற வாமை வேண்டுமென்றார்.


transliteration

irandhtha vaekuliyin theethae sirandhtha
uvakai makilchiyitr chorvu

pochsaappuk kollum pukalai arivinai
nichcha nirappukkon raangku

pochsaappaark killai pukalmai athuulakaththu
yeppaalnoo lorkkum thunivu

achcha mutaiyaarkku aranillai aangkillai
pochsaap putaiyaarkku nanku

munnurak kaavaathu ilukkiyaan thanpilai
pinnooru irangki vidum

ilukkaamai yaarmaatdum yenrum valukkaamai
vaayin athuvoppathu il

ariyayenru aakaatha illaipoch saavaak
karuviyaal potrrich seyin

pukalndhthavai potrrich seyalvaendum seiyaathu
ikalndhthaarkku yelumaiyum il

ikalchiyin kettaarai ulluka thaandhtham
makilchiyin maindhthurum polthu

ulliyathu yeithal yelithuman matrrundhthaan
ulliyathu ullap paerin