குறள் 532

பொச்சாவாமை

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு

pochsaappuk kollum pukalai arivinai
nichcha nirappukkon raangku


Shuddhananda Bharati

Unforgetfulness

Negligence kills renown just as
Ceaseless want wisdom destroys.


GU Pope

Unforgetfulness

Perpetual, poverty is death to wisdom of the wise;
When man forgets himself his glory dies!

Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.


Mu. Varadarajan

நாள்தோறும்‌ விடாமல்‌ வரும்‌ வறுமை அறிவைக்‌ கொல்வதுபோல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி கொன்றுவிடும்‌.


Parimelalagar

புகழைப் பொச்சாப்புக் கொல்லும் - ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும்; அறிவினை நிச்சம் நிரப்புக் கொன்றாங்கு - அறிவினை நிச்சம் நிரப்புக் கெடுக்குமாறு போல.
விளக்கம்:
[நிச்ச நிரப்பு: நாள்தோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவு உடையான் கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும் பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து, அவன் நன்கு மதிப்பினை அழிக்கும்; அதுபோல மறவியும் புகழ் உடையான் கண் உண்டாயின், அவற்குத் தற்காவாமையானும், காரியக் கேட்டானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்கு மதிப்பினை அழிக்கும் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் பொச்சாப்பினது குற்றம் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) மறவியாகின்றது புகழைக் கொல்லும் ; நாடோறும் இரவால் வருந்தி வயிற்றை நிறைக்கும் ஊண் அறிவைக் கொல்லுமாறு போல்,
(என்றவாறு). இவை மூன்றினாலும் பொருளின்கண் கடைப்பிடித்தல் கூறினார்.