Learning 40

391

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

So learn that you may full and faultless learning gain,
Then in obedience meet to lessons learnt remain.

கற்கத்‌ தகுந்த நூல்களைக்‌ குற்றமறக்‌ கற்க வேண்டும்‌; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத்‌ தக்கவாறு நெறியில்‌ நிற்க வேண்டும்‌.

Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning.

பரிமேலழகர் உரை கற்பவை கசடு அறக் கற்க - ஒருவன் கற்கப்படும் நூல்களைப் பழுதறக் கற்க; கற்றபின் அதற்குத் தக நிற்க - அங்ஙனம் கற்றால், அக்கல்விக்கத் தக அவை சொல்லுகின்ற நெறிக் கண்ணே நிற்க.
விளக்கம்:
('கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிறபொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக் "கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே செய்" தலினும், (நாலடி. 250) துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை சிறப்புடை மகற்காயின் கற்றல் வேண்டும் என்பதூஉம், அவனால் கற்கப்படும் நூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனால் பயனும் இதனாற் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை கல்வியாவது கல்வியாமாறும் அதனானாகிய பயனுங் கூறுதல். இது முதல் லாகப் பொருள் வரவு இயற்றுந் திறங் கூறுகின்றாராதலின், அஃதியற்றுங்கால் கல்வி முந்துற வேண்டும்; அதனால், இது முன் கூறப்பட்டது. (இதன் பொருள்) கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க; கற்றபின்பு அக்கல்விக் குத் தக வொழுக,
(என்றவாறு) இது கற்கவும் வேண்டும்; அதனைக் கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.
392

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

The twain that lore of numbers and of letters give
Are eyes, the wise declare, to all on earth that live.

எண்‌ என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக்‌ கலைகளையும்‌ வாழும்‌ மக்களுக்குக்‌ கண்கள்‌ என்று கூறுவர்‌.

Letters and numbers are the two eyes of man.

பரிமேலழகர் உரை எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் - அறியாதார் எண் என்று சொல்லுவனவும் மற்றை எழுத்து என்று சொல்லுவனவம் ஆகிய கலைகள் இரண்டினையும்; வாழும் உயிர்க்குக் கண் என்ப - அறிந்தார் சிறப்புடை உயிர்கட்குக் கண் என்று சொல்லுவர்.
விளக்கம்:
(எண் என்பது கணிதம் அது கருவியும் செய்கையும் என இருவகைப்படும்; அவை ஏரம்பம் முதலிய நூல்களுள் காண்க. எழுத்து எனவே, அதனோடு ஒற்றுமையுடைய சொல்லும் அடங்கிற்று. இவ்விருதிறமும், அறமுதற்பொருள்களைக் காண்டற்குக் கருவியாகலின், 'கண்' எனப்பட்டன. அவை கருவியாதல் ''ஆதி முதலொழிய அல்லாதன எண்ணி, நீதி வழுவா நிலைமையவால் - மாதே, அறமார் பொருள் இன்பம் வீடு என்று இவற்றின், திறமாமோ எண்ணிறத்தால் செப்பு." "எழுத்தறியத் தீரும் இழிதகைமை, தீர்ந்தான், மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும், மொழித்திறத்தின், முட்டறுத்த நல்லோன் முதல் நூல் பொருள் உணர்ந்து, கட்டறுத்து வீடு பெறும்." இவற்றான் அறிக. 'என்ப' என்பவற்று, முன்னைய இரண்டும் அஃறிணைப் பன்மைப் பெயர்; பின்னது உயர்திணைப் பன்மை வினை. அறியாதார், அறிந்தார் என்பன வருவிக்கப்பட்டன. சிறப்புடைய உயிர் என்றது மக்கள் உயிருள்ளும் உணர்வு மிகுதி உடையதனை. இதனால் கற்கப்படும் நூல்கட்குக் கருவியாவனவும் அவற்றது இன்றியமையாமையும் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எண்ணென்று சொல்லப்படுவனவும் மற்றை எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டு பொருளையும் உலகின்கண் வாழுமுயிர் களுக்குக் கண்ணென்று சொல்லுவர் அறிவோர்,
(என்றவாறு).
393

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்

Men who learning gain have eyes, men say;
Blockheads’ faces pairs of sores display.

கண்ணுடையவர்‌ என்று உயர்வாகக்‌ கூறப்படுகின்றவர்‌ கற்றவரே; கல்லாதவர்‌ முகத்தில்‌ இரண்டு புண்‌ உடையவர்‌ ஆவர்‌.

The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.

பரிமேலழகர் உரை கண் உடையர் என்பவர் கற்றோர் - கண்ணுடையர் என்று உயர்த்துச் சொல்லப்படுவார் கற்றவரே; கல்லாதவர் முகத்து இரண்டு புண் உடையர் - மற்றைக் கல்லாதவர் முகத்தின்கண் இரண்டு புண்ணுடையர்; கண்ணிலர்.
விளக்கம்:
(தேயம் இடையிட்டவற்றையும் காலம் இடையிட்டவற்றையும் காணும் ஞானக்கண் உடைமையின், கற்றாரைக் 'கண்ணுடையர்' என்றும், அஃதின்றி நோய் முதலியவற்றால் துன்பம் செய்யும் ஊன்கண்ணே உடைமையின், கல்லாதவரைப் 'புண்ணுடையர்' என்றும் கூறினார். மேல் கண்ணன்மை உணரநின்ற ஊனக்கண்ணின் மெய்ம்மை கூறியவாற்றான், பொருள் நூல்களையும் கருவிநூல்களையும் கற்றாரது உயர்வும், கல்லாதாரது இழிவும் இதனான் தொகுத்துக் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்; கல்லாதார் முகத்தின் கண்ணே இரண்டு புண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்,
(என்றவாறு). அறிவு கல்வியின் கண்ண தாகலான், அக்கல்வியில்லாதார் கண் புண்ணா யிற்று.
394

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

You meet with joy, with pleasant thought you part;
Such is the learned scholar’s wonderous art!

மகிழும்படியாகக்‌ கூடிப்‌ பழகி. (இனி இவரை எப்போது காண்போம்‌ என்று) வருந்தி நினைக்கும்‌ படியாகப்‌ பிரிதல்‌ புலவரின்‌ தொழிலாகும்‌.

It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think(Oh! when shall we meet them again.)

பரிமேலழகர் உரை
விளக்கம்:
உவப்பத் தலைக்கடி உள்ளப் பிரிதல் அனைத்தே - யாவரையும் அவர் உவக்குமாறு தலைப்பெய்து, 'இனி இவரை யாம் எங்ஙனம் கூடுதும்? என நினையுமாறு நீங்குதலாகிய அத்தன்மைத்து; புலவர் தொழில் - கற்றறிந்தாரது தொழில்.
விளக்கம்:
(தாம் நல்வழி ஒழுகல் பிறர்க்கு உறுதி கூறல் என்பன இரண்டும் தொழில் என ஒன்றாய் அடங்குதலின், 'அத்தன்மைத்து' என்றார். அத்தன்மை: அப்பயனைத் தரும் தன்மை. நல்லொழுக்கம் காண்டலானும், தமக்கு மதுரமும் உறுதியுமாய கூற்றுக்கள் நிகழ்வு எதிர்வுகளின் இன்பம் பயத்தலானும் கற்றார்மாட்டு எல்லாரும் அன்புடையராவர் என்பதாம். இதனால் கற்றாரது உயர்வு வகுத்துக் கூறப்பட்டது.
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மக்களிருவர் உவக்குமாறு கூடி அவர் நினைக்குமாறு பிரிதல் போலும்; கற்றோர் செய்யுந்தொழில்,
(என்றவாறு). இஃது இன்பம் நுகரினும் வினை செய்யினும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியாலாமென்றது.
395

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்

With soul submiss they stand, as paupers front a rich man’s face;
Yet learned men are first; th’unlearned stand in lowest place.

செல்வர்முன்‌ வறியவர்‌ நிற்பதுபோல்‌ (கற்றவர்முன்‌) ஏங்கித்‌ தாழ்ந்து நின்றும்‌ கல்வி கற்றவரே உயர்ந்தவர்‌; கல்லாதவர்‌ இழிந்தவர்‌.

The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute beforethe wealthy.

பரிமேலழகர் உரை உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் - 'பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்று' (புறநா. 183) ஆதலான், செல்வர்முன் நல்கூர்ந்தார் நிற்குமாறு போலத் தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று நின்றும் கற்றார் தலையாயினார்; கல்லாதவர் கடையரே - அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தாரேயாவர்.
விளக்கம்:
('உடையார், இல்லார்' என்பன உலகவழக்கு. ஏக்கறுதல்; ஆசையால் தாழ்தல். கடையர்' என்றதனான், அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது. பொய்யாய மானம் நோக்க மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு ஞான்றும் அறிவுடைய ராகாமையின், 'கடையரே' என்றார். இதனால், கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல், அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார்,
(என்றவாறு) இது கற்றார் எல்லாரினுந் தலையாவாரென்றது.
396

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு

In sandy soil, when deep you delve, you reach the springs below;
The more you learn, the freer streams of wisdom flow.

மணலில்‌ உள்ள கேணியில்‌ தோண்டிய அளவிற்கு நீர்‌ ஊறும்‌; அதுபோல்‌, மக்களுக்குக்‌ கற்ற கல்வியின்‌ அளவிற்கு அறிவு ஊறும்‌.

Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledgewill flow from a man in proportion to his learning.

பரிமேலழகர் உரை மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் - மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும்; மாந்தர்க்கு அறிவு கற்றனைத்து ஊறும் - அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும்.
விளக்கம்:
(ஈண்டுக் 'கேணி' என்றது, அதற்கண் நீரை. 'அளவிற்றாக' என்றது, அதன் அளவும் செல்ல என்றவாறு. சிறிது கற்ற துணையான் அமையாது, மேன்மேல் கற்றல் வேண்டும் என்பதாம். இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின் மேல் 'உண்மை அறிவே மிகும்' (குறள். 373) என்றதனோடு மலையாமை அறிக.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்; அதுபோல், மாந்தர்க் குக் கற்ற அளவும் அறிவுண்டாம், (எ - று.) இஃது அறிவுண்டாமென்றது.
397

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு

The learned make each land their own, in every city find a home;
Who, till they die; learn nought, along what weary ways they roam!

கற்றவனுக்குத்‌ தன்‌ நாடும்‌ ஊரும்போலவே வேறு எதுவாயினும்‌ நாடாகும்‌; ஊராகும்‌; ஆகையால்‌ ஒருவன்‌ சாகும்வரையில்‌ கல்லாமல்‌ காலங்கழிப்பது ஏன்‌?

How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man)every country is his own (country), and every town his own (town) ?

பரிமேலழகர் உரை யாதானும் நாடுஆம் ஊர்ஆம் - கற்றவனுக்குத் தன்னோடும் தன்னூருமேயன்றி, யாதானும் ஒரு நாடும் நாடாம்; யாதானும் ஓர் ஊரும் ஊர் ஆம்; ஒருவன் சாம் துணையும் கல்லாதவாறு என் - இங்ஙனமாயின், ஒருவன் தான் இறக்கும் அளவும் கல்லாது கழிகின்றது என் கருதி?
விளக்கம்:
(உயிரோடு சேறலின், 'சாம் துணையும்' என்றார். பிறர் நாடுகளும் ஊர்களும் தம்போல உற்றுப் பொருட்கொடையும் பூசையும் உவந்து செய்தற்கு ஏதுவாகலின் கல்வி போலச் சிறந்தது பிறிதில்லை; அதனையே எப்பொழுதும் செய்க என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யாதோரிடத்தே செல்லினும் அதுவே தனது நாடும் ஊரும் போலாம்; ஆதலால், ஒருவன் சாந்தனையுங் கல்லாதொழுகுதல் யானைக்கருதி? இது கல்வி எல்லாரானுங் கைக்கொள்ளப்படு மென்றது.
398

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து

The man who store of learning gains,
In one, through seven worlds, bliss attains.

ஒரு பிறப்பில்‌ தான்‌ கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும்‌ அல்லாமல்‌ ஒருவனுக்கு எழுபிறப்பிலும்‌ உதவும்‌ தன்மையுடையதாகும்‌.

The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births.

பரிமேலழகர் உரை ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து.
விளக்கம்:
(வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்றார். எழுமை மேலே கூறப்பட்டது (குறள் 62.) உதவுதல் - நன்னெறிக் கண் உய்த்தல்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்வி தானே எழு பிறப் பினும் ஏமமாதலை யுடைத்து,
(என்றவாறு) கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.
399

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்

Their joy is joy of all the world, they see; thus more
The learners learn to love their cherished lore.

தாம்‌ இன்புறுவதற்குக்‌ காரணமான கல்வியால்‌ உலகமும்‌ இன்புறுவதைக்‌ கண்டு, கற்றறிந்த அறிஞர்‌ மேன்மேலும்‌ (அக்கல்வியையே, விரும்புவர்‌.

The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves,the world also derives pleasure from it.

பரிமேலழகர் உரை தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு - தாம் இன்புறுதற்கு ஏதுவாகிய கல்விக்கு உலகம் இன்புறுதலால் அச்சிறப்பு நோக்கி; கற்றறிந்தார் காமுறுவர் - கற்றறிந்தார் பின்னும் அதனையே விரும்புவர்.
விளக்கம்:
(தாம் இன்புறுதலானது, நிகழ்வின் கண் சொற்பொருள்களின் சுவை நுகர்வானும், புகழ் பொருள் பூசை பெறுதலானும், எதிர்வின்கண் அறம் வீடு பயத்தலானும், அதனான் இடையறாத இன்பம் எய்துதல். உலகு இன்புறுதலாவது: 'இம்மிக்காரோடு தலைப்பெய்து அறியாதன எல்லாம் அறியப்பெற்றோம்' என்றும், "யாண்டு பலவாக நரையில் மாயினேம்" (புறநா. 191) என்றும் உவத்தல். செல்வமாயின், ஈட்டல் காத்தல் இழத்தல் என்ற இவற்றான் துன்புறுதலும், பலரையும் பகையாக்கலும் உடைத்து என அறிந்து, அதனைக் காமுறாமையின் 'கற்றறிந்தார்' என்றும், கரும்பு அயிறற்குக் கூலிபோலத் தாம் இன்புறுதற்கு உலகு இன்புறுதல் பிறவாற்றான் இன்மையின் அதனையே காமுறுவர் என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தாம் இனிதாக நுகர்வதொன்றை உலகத்தார் நுகர்ந்து இன்புறு வாராகக் கண்டால், அதற்கு இன்புறுவர் கற்றறிந்தவர்,
(என்றவாறு) இஃது அழுக்காறு செய்யாது இன்புறுதல் அறமாதலின், அது கல்வியானே வருமென்றது.
400

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை

Learning is excellence of wealth that none destroy;
To man nought else affords reality of joy.

ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம்‌ கல்வியே ஆகும்‌; கல்வி தவிர மற்றப்‌ பொருள்கள்‌ (அத்தகைய சிறப்புடைய ) செல்வம்‌ அல்ல.

Learning is the true imperishable riches; all other things are not riches.

பரிமேலழகர் உரை ஒருவற்குக் கேடு இல் விழுச்செல்வம் கல்வி ஒருவனுக்கு அழிவு இல்லாத சீரிய செல்வமாவது கல்வி; மற்றையவை மாடு அல்ல - அஃது ஒழிந்த மணியும் பொன்னும், முதலாயின செல்வமல்ல.
விளக்கம்:
(அழிவின்மையாவது: தாயத்தார், கள்வர், வலியர், அரசர் என்ற இவரால் கொள்ளப்படாமையும், வழிப்பட்டார்க்குக் கொடுத்துழிக் குறையாமையும் ஆம். சீர்மை: தக்கார்கண்ணே நிற்றல். மணி, பொன் முதலியவற்றிற்கு இவ்விரண்டும் இன்மையின், அவற்றை 'மாடு அல்ல' என்றார். இவை ஐந்து பாட்டானும் கல்வியது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி; மற்றவை யெல்லாம் பொருளல்ல,
(என்றவாறு) இது கல்வி அழியாத செல்வமென்றது.


transliteration

katrka kachadarak katrpavai katrrapin
nitrka athatrkuth thaka

yennaenpa yaenai yeluththaenpa ivvirandum
kannaenpa vaalum uyirkku

kannutaiyar yenpavar katrnor mukaththirandu
punnutaiyar kallaa thavar

uvappath thalaikkooti ullap pirithal
anaiththae pulavar tholil

utaiyaarmun illaarpol yaekkatrrung katrraar
kataiyarae kallaa thavar

thotdanaith thoorum manatrkaeni maandhtharkkuk
katrranaith thoorum arivu

yaathaanum naataamaal ooraamaal yennoruvan
saandhthunaiyung kallaatha vaaru

orumaikkan thaankatrra kalvi oruvatrku
yelumaiyum yaemaap putaiththu

thaamin puruvathu ulakin purakkandu
kaamuruvar katrrarindh thaar

kaetil viluchselvam kalvi yoruvatrku
maadalla matrrai yavai