Assertion of the Strength of Virtue 4

31

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

It yields distinction, yields prosperity; what gain
Greater than virtue can a living man obtain?

அறம்‌, சிறப்பையும்‌ அளிக்கும்‌; செல்வத்தையும்‌ அளிக்கும்‌; ஆகையால்‌ உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?

Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?

பரிமேலழகர் உரை சிறப்பு ஈனும்-வீடுபேற்றையும் தரும்: செல்வமும் ஈனும்-துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன்-ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது?
விளக்கம்:
(எல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. ஆக்கம் தருவதனை 'ஆக்கம்' என்றார். ஆக்கம்: மேன் மேல் உயர்தல். ஈண்டு 'உயர்' என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனான் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது)
மணக்குடவர் உரை அறன் வலியுறுத்தலாவது அறம் வலிமையுடைத் தென்பதனை யறிவித்தல். இதனானே அறத்துப்பால் முற்றுதற்குக் காரணஞ் சொன்னாருமாம். இது மேற்கூறிய முனிவராற் கொண்டுய்க்கப்படுதலின், பிற்கூறப்பட்டது. (இதன் பொருள்) முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர் கட்கு ஆக்கமாவது பிறிதில்லை, (எ - று ) இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலியுடைத் தென்று கூறிற்று.
32

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு

No greater gain than virtue aught can cause;
No greater loss than life oblivious of her laws.

ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும்‌ இல்லை; அறத்தைப்‌ போற்றாமல்‌ மறப்பதைவிடக்‌ கெடுதியானதும்‌ இல்லை.

There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.

பரிமேலழகர் உரை அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை-ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை;அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை-அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை.
விளக்கம்:
(அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை' என மேற்சொல்லியவதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமுமில்லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை,
(என்றவாறு). இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று.
33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்

To finish virtue’s work with ceaseless effort strive,
What way thou may’st, where’er thou see’st the work may thrive.

செய்யக்கூடிய வகையால்‌, எக்காரணத்தாலும்‌ விடாமல்‌ செல்லுமிடமெல்லாம்‌ அறச்செயலைப்‌ போற்றிச்‌ செய்ய வேண்டும்‌.

As much as possible, in every way, incessantly practise virtue.

பரிமேலழகர் உரை ஒல்லும் வகையான்-தத்தமக்கு இயலுந்திறத்தான்; அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல்-அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க.
விளக்கம்:
(இயலுந்திறம் ஆவது-இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல். ஓவாமை, இடைவிடாமை. எய்தும் இடம் ஆவன: மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள்ஆவன: முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தமக்கியலுந் திறத்தானே , அறவினையை ஒழியாதே செய்யலாம் மிடமெல்லாஞ் செய்க, (எ - று ) இயலுந்திறமென்பது மனமொழி மெய்களும் பொருளும். செல்லும் வாய் என்பது அறஞ்செய்தற் கிடமாக்கிய பல விடங்களும். ஒழியாதென்றது நாடோறு மென்றது. இஃது அறம் வலி தென் றறிந்தவர்கள் இவ்வாறு செய்க வென்றது.
34

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற

Spotless be thou in mind! This only merits virtue’s name;
All else, mere pomp of idle sound, no real worth can claim.

ஒருவன்‌ தன்‌ மனத்தில்‌ குற்றம்‌ இல்லாதவனாக இருக்க வேண்டும்‌; அறம்‌ அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத்‌ தன்மை உடையவை.

Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show.

பரிமேலழகர் உரை மனத்துக்கண் மாசு இலன் ஆதல் - அவ்வாற்றான் அறஞ் செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆக; அனைத்து அறன்-அவ்வளவே அறம் ஆவது; பிற ஆகுலநீர-அஃது ஒழிந்த சொல்லும் வேடமும் அறம் எனப்படா ஆரவார நீர்மைய,
விளக்கம்:
(குற்றம் தீயன சிந்தித்தல், பிறர் அறிதல் வேண்டிச் செய்கின்றன ஆகலின், 'ஆகுல நீர' என்றார். மனத்து மாசுடையன் ஆயவழி அதன்வழியே ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவன் தன் மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின், மேற் செய்வனவெல்லாம் ஆரவார நீர்மைய, (எ-று. பிறரறியவேண்டிச் செய்தானாமென்றவாறாயிற்று மேல் நான்கு பொருளைக் கடிய வேண்டுமென்றார் அவை நான்கும் மனமொன்றுந் தூயதாகப் போமென்று அதன்பின் இது கூறினார்.
35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

‘Tis virtue when, his footsteps sliding not through envy, wrath,
Lust, evil speech-these four, man onwards moves in ordered path.

பொறாமை, ஆசை, சினம்‌, கடுஞ்சொல்‌ ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும்‌ இடங்கொடுக்காமல்‌ அவற்றைக்‌ கடிந்து ஒழுகுவதே அறமாகும்‌.

That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech.

பரிமேலழகர் உரை அழுக்காறு-பிறர் ஆக்கம் பொறாமையும்; அவா புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; வெகுளி-அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; இன்னாச்சொல்-அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; நான்கும் இழுக்கா இயன்றது அறம்-இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது.
விளக்கம்:
(இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ் சொல்லும் என்னும் நான்கினையும் ஒழித்து நடக்குமது யாதொன்று அஃது அறமென்று சொல்லப்படும், (எ - று.)பின்னர்ச் செய்யலாகாதென்று கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்கு மென்று கூறிய அறம் எத்தன்மைதான்றற்கு இது கூறப்பட்டது.
36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

Do deeds of virtue now. Say not, ‘To-morrow we’ll be wise’;
Thus, when thou diest, shalt thou find a help that never dies.

இளைஞராக உள்ளவர்‌ பிற்காலத்தில்‌ பார்த்துக்‌ கொள்ளலாம்‌ என்று எண்ணாமல்‌ அறம்‌ செய்யவேண்டும்‌. அதுவே உடல்‌ அழியும்‌ காலத்தில்‌ அழியாத்‌ துணையாகும்‌.

Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.

பரிமேலழகர் உரை அன்று அறிவாம் என்னாது அறம் செய்க- 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை-அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம்.
விளக்கம்:
('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையினபொழுதே செய்க என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க, அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்குமிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ் செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டுமென்பதும் அது மறு மைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.
37

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

Needs not in words to dwell on virtue’s fruits: compare
The man in litter borne with them that toiling bear!

பல்லக்கைச்‌ சுமப்பவனும்‌ அதன்‌ மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின்‌ பயன்‌ இஃது என்று கூறவேண்டா.

The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein.

பரிமேலழகர் உரை அறுத்து ஆறு இது என வேண்டா-அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை-சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும்.
விளக்கம்:
(பயனை 'ஆறு' என்றார். பின்னது ஆகலின். 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தானோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம். 'உணரப்படும்' என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நீங்கள் அறநெறி யித்தன்மைத்தென் றறிய வேண்டா , சிவி யைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காணலாம்,
(என்றவாறு). இது பொன்றினாலுந் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று.
38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்

If no day passing idly, good to do each day you toil,
A stone it will be to block the way of future days of moil.

ஒருவன்‌ அறம்‌ செய்யத்‌ தவறிய நாள்‌ ஏற்படாதவாறு அறத்தைச்‌ செய்வானானால்‌ அதுவே அவன்‌ உடலோடு வாழும்‌ நாள்‌ வரும்‌ பிறவி வழியை அடைக்கும்‌ கல்லாகும்‌.

If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births.

பரிமேலழகர் உரை வீழ் நாள் படாமை நன்று ஆற்றின்-செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல்-அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்குங் கல்லாம்.
விளக்கம்:
(ஐவகைக் குற்றத்தான் வரும் இரு வகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் 'வாழ்நாள்' எனப்பட்டது. குற்றங்கள் ஐந்து ஆவன: அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன: நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவன் ஒருநா ளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின், அச் செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்ப தொரு கல்லாம், (எ-று) : இது வீடு தருமென்றது.
39

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல

What from virtue floweth, yieldeth dear delight;
All else extern, is void of glory’s light.

அறநெறியில்‌ வாழ்வதன்‌ பயனாக வருவதே இன்பமாகும்‌; அறத்தோடு பொருந்தாமல்‌ வருவன எல்லாம்‌ இன்பம்‌ இல்லாதவை; புகழும்‌ இல்லாதவை.

Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.

பரிமேலழகர் உரை அறத்தான் வருவதே இன்பம்-இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது; மற்று எல்லாம் புறத்த-அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; புகழும் இல-அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல.
விளக்கம்:
(ஆன்' உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, "தூங்கு கையான் ஓங்கு நடைய" (புறநா.22) என்புழிப்போல. இன்பம்-காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின் புறம் எனவே, துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் 'பிறனில் விழைவு' முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின், 'புறத்த' என்றார். அறத்தோடு வாராதன 'புகழும் இல' எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அறத்தால் வருவது யாதொன்றும், அதுவே இன்பமும் புகழுமாம்; அதனாலன்றி வருவன வெல்லாந் துன்பமாம்; புகழுமிலவாம்,
(என்றவாறு). இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.
40

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி

‘Virtue’ sums the things that should be done;
‘Vice’ sums the things that man should shun.

ஒருவன்‌ வாழ்நாளில்‌ முயற்சி மேற்கொண்டு செய்யத்‌ தக்கது அறமே, செய்யாமல்‌ காத்துக்‌ கொள்ளத்‌ தக்கது பழியே.

That is virtue which each ought to do, and that is vice which each should shun.

பரிமேலழகர் உரை ஒருவற்குச் செயற்பாலது அறனே-ஒருவனுக்குச் செய்தற்பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே-ஒழிதற்பான்மையது தீவினையே.
விளக்கம்:
('ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே; தப்பும் பகுதியது பழியே ,
(என்றவாறு). மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார்; அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார்.


transliteration

sirappueenum selvamum eenum araththinooungku
aakkam yevano uyirkku

araththinooungku aakkamum illai athanai
maraththalin oongkillai kaedu

ollum vakaiyaan aravinai oavaathae
sellumvaai yellaanj seyal

manaththukkan maasilan aathal anaiththuaran
aakula neera pira

alukkaaru avaavaekuli innaachsol naankum
ilukkaa iyanrathu aram

anrarivaam yennaathu aranjseika matrrathu
ponrungkaal ponraath thunai

araththaaru ithuvaena vaentaa sivikai
poruththaanodu oorndhthaan itai

veelnaal pataaamai nanraatrrin akhthoruvan
vaalnaal valiyataikkum kal

araththaan varuvathae inpammatr raellaam
puraththa pukalum ila

seyatrpaala thorum aranae oruvatrku
uyatrpaala thorum pali