The Announcement of the Rumour 115

1141

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்

By this same rumour’s rise, my precious life stands fast;
Good fortune grant the many know this not!

(எம்‌ காதலைப்‌ பற்றி) அலர்‌ எழுவதால்‌ அரிய உயிர்‌ போகாமல்‌ நிற்கின்றது; எம்‌ நல்வினைப்‌ பயனால்‌ அதைப்‌ பலரும்‌ அறியாமலிருக்கின்றனர்‌.

My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.

பரிமேலழகர் உரை அல்ல குறிப்பட்ட பிற்றைஞான்று வந்த தலைமகளைத் தோழி அலர் கூறி வரைவு கடாயவழி அவள் சொல்லியது. அலர் எழ ஆர் உயிர் நிற்கும் - மடந்தையொடு எம்மிடை நட்பு ஊரின்கண் அலாராயெழுதலான் அவளைப் பெறாது வருந்தும் என் அரிய உயிர் பெற்றதுபோன்று நிலைபெறும்; அதனைப் பாக்கியத்தால் பலர் அறியார் - அந்நிலை பேற்றைத் தெய்வத்தால் யானை அறிவதல்லது கூறுகின்ற பலரும் அறியார்.
விளக்கம்:
(அல்ல குறிப்பிட்டுத் தலைமகளை எய்தப்பெறாத வருத்தமெல்லாம் தோன்ற, 'அரிய உயிர்' என்றும், அங்ஙனம் அரியாளை எளியளாக்கி எடுக்கின்றமையின், அஃது அவ்வாருயிர்க்குப் பற்றுக்கோடாக நின்றது என்பான், 'அலர் எழ ஆருயிர் நிற்கும்' என்றும், 'பற்றுக்கோடாதலை அவ்வேதிலார் அறியின் தூற்றாது ஒழிவர்; ஒழியவே, ஆருயிர் போம்; ஆகலான், அவரறியா தொழிகின்றது தெய்வத்தான், என்றும் கூறினான். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.)
மணக்குடவர் உரை அலரறிவுறுத்தலாவது இவ்வாறு ஒழுகும் ஒழுக்கத்தினால் வந்த அவரைத் தலைமகள் தோழிக்கு அறிவித்தலும் தோழி தலைமகட்கும் தலைமகற்கும் அறியவித்தலு மாம். நாணுத் துறவுரைத்து இரவுக்குறி யொழுகாநின்ற தலை க னுக்குத் தோழி அம்பலம் அலரும் ஆகாநின்றனவென் றறிவித்தலான், அதன் பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) நமது புணர்ச்சியால் வந்த அலர் எழுதலினானே அவளது ஆருயிர் நிற்கும் ; அவ்வாறு உயிர்நிற்றலை எங்கள் புண்ணியத்தாலே பலரறியா ராயினார்; அறிவராயின், எமக்கு ஏதிலராய் அலர் தூற்றுவார் இவள் இறந்துபடவேண்டும் மென்று தூற்றார்,
(என்றவாறு).
1142

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்

The village hath to us this rumour giv’n, that makes her mine;
Unweeting all the rareness of the maid with flower-like eyne.

மலர்போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல்‌, இந்த ஊரார்‌ எளியவளாகக்‌ கருதி அலர்‌ கூறி எமக்கு உதவி செய்தனர்‌.

Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.

பரிமேலழகர் உரை இதுவும் அது. மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது - மலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை அறியாது; இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது - இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது.
விளக்கம்:
(அருமை: அல்ல குறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது. 'ஈந்தது' என்றான், தனக்குப் பற்றுக் கோடாகலின், அலர் கூறுவாரை அவர் செய்த உதவி பற்றி 'இவ்வூர்' என்றான்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பூவொத்த கண்ணாளது இற்பிறப்பின் அருமையை யறியாதே, இவ்வூரவர் எங்கட்கு அலரைத் தந்தார்,
(என்றவாறு) எளியாரைச் சொல்லுமாறு போலச் சொல்லாநின்றா ரென்றவாறு.
1143

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து

The rumour spread within the town, is it not gain to me?
It is as though that were obtained that may not be.

ஊரார்‌ எல்லாரும்‌ அறிந்துள்ள அலர்‌ நமக்குப்‌ பொருந்தாதோ? (பொருந்தும்‌. அந்த அலர்‌ பெறமுடியாமலிருந்து பெற்றாற்போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.

Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already).

பரிமேலழகர் உரை இதுவும் அது. ஊர் அறிந்த கெளவை உறாஅதோ-எங்கட்குக் கூட்டம் உண்மை இவ்வூர் அறிதலான் விளைந்த அலர் எனக்கு உறுவதொன்றன்றோ; அதனைப் பெறாது பெற்றன்ன நீர்த்து - அது கேட்ட என் மனம் அக்கூட்டத்தைப் பெறாதிருந்தே பெற்றாற்போலும் நீர்மையுடைத்து ஆகலான்.
விளக்கம்:
(பெற்றன்ன நீர்மை: பெற்றவழி உளதாம் இன்பம் போலும் இன்பமுடைமை. 'நீர்த்து' என்பதற்கு ஏற்ற 'மனம்' என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஊரறிந்த அலர் வருவதொன்றன்றோ ? அவ்வலரைத் தீதாகக் கொள்ளாது, பெறாத தொன்றைப் பெற்றாலொத்த நீர்மைத்தாகக் கொள்ளல் வேண்டும்,
(என்றவாறு). இஃது அலரறிவுறுத்த தோழிக்கு அவ்வலரினான் என்றும் தமாாவார் உடன்படுவரென்று தலைமகன் கூறியது.
1144

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து

The rumour rising makes my love to rise;
My love would lose its power and languish otherwise.

எம்‌ காமம்‌ ஊரார்‌ சொல்லுகின்ற அலரால்‌ வளர்வதாயிற்று; அந்த அலர்‌ இல்லையானால்‌ அது தன்‌ தன்மை இழந்து சுருங்கிப்‌ போய்விடும்‌.

Rumour increases the violence of my passion; without it, it would grow weak and waste away.

பரிமேலழகர் உரை இதுவும் அது. காமம் கவ்வையாற கவ்விது - என் காமம் இவ்வூர் எடுக்கின்ற அலரானே அலர்தலை யுடைத்தாயிற்று; அது இன்றேல் தன்மை இழந்து தவ்வென்னும் - அவ்வலர் இல்லையாயின், தன் இயல்பு இழந்து சுருங்கும்.
விளக்கம்:
(அலர்தல்: மேன்மேல் மிகுதல்.செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போலக் கவ்வையுடையதனைக் 'கவ்விது' என்றார். இயல்வு: இன்பம் பயத்தல். 'தவ்வென்னும்' என்பது குறிப்பு மொழி; 'நூல்கால் யாத்த மாலை வெண்குடை, தவ்வென றசைஇத் தாழ்துளி மறைப்ப''
விளக்கம்:
(நெடுநல். 184-185) என்புழியும் அது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அலரினானே அலர்தலை யுடைத்துக் காமம் ; அவ்வலரில்லை யாயின், தனது தன்மை யிழந்து பொலிவழியும்,
(என்றவாறு). செவ்வை யுடையதனைச் செவ்விது என்றாற்போல், கவ்வையுடைய தனைக் கல்விது என்றார்.
1145

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது

The more man drinks, the more he ever drunk would be;
The more my love’s revealed, the sweeter ‘tis to me!

காமம்‌ அலரால்‌ வெளிப்பட வெளிப்பட இனியதாதல்‌, கள்ளுண்பவர்‌ கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளுண்பதையே விரும்பினாற்‌ போன்றது.

As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me wheneverit is the subject of rumour.

பரிமேலழகர் உரை இதுவும் அது. களித் தொறும் கள் உண்டல் வேட்டற்று - கள்ளுண்பார்க்குக் களிக்குந்தோறும் கள்ளுண்டல் இனிதாமாறு போல; காமம் வெளிப்படுந்தோறும் இனிது - எனக்குக் காமம் அலராந்தோறும் இனிதாகா நின்றது.
விளக்கம்:
('வேட்கப்பட்டற்றால்' என்பது 'வேட்டற்றால்' என நின்றது. வேட்கை மிகுதியால் அலரும் இன்பஞ் செய்யாநின்றது என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மயங்குந்தோறும் கள்ளுண்டலை விரும்பினாற்போல, காமமும் அலராகுந்தோறும் இனிதாகும்,
(என்றவாறு). இஃது அலரறிவுறுத்த தோழியை நோக்கி, நுமக்குத் துன்பமாயிற்றே இவ்வலரென்று வினாவிய தலைமகற்குத் தோழி கூறியது.
1146

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று

I saw him but one single day: rumour spreads soon
As darkness, when the dragon seizes on the moon.

காதலரைக்‌ கண்டது ஒருநாள்தான்‌; அதனால்‌ உண்டாகிய அலரோ, திங்களைப்‌ பாம்பு கொண்டசெய்தி போல்‌ எங்கும்‌ பரந்து விட்டது.

It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.

பரிமேலழகர் உரை இடையீடுகளானும் அல்ல குறியானும் தலைமகனை எய்தப் பெறாத தலைமகள், அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ வரைவு கடாயது. கண்டது ஒருநாள் - யான் காதலரைக் கண்ணுறப்பெற்றது ஒரு ஞான்றே; அலர் திங்களைப் பாம்பு கொண்டற்று - அதனினாய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று உலகமெங்கும் பரந்தது.
விளக்கம்:
(காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'பாம்பு கொண்டற்று' என்றாள். இருவழியும் மன்னும், உம்மையும் அசைநிலை. 'காட்சியின்றியும் அலர் பரக்கின்ற இவ்வொழுக்கம் இனியாகாது, வரைந்து கோடல் வேண்டும், என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யான் கண்ணுற்றது. ஒருநாள் ; அக்காட்சி திங்களைப் பாம்பு கொண்டாற்போல், எல்லாரானும் அறியப்பட்டு அலராகாநின்றது,
(என்றவாறு).
1147

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்

My anguish grows apace: the town’s report
Manures it; my mother’s word doth water it.

இந்தக்‌ காமநோய்‌ ஊராரின்‌ அலர்‌ தூற்றலே எருவாகவும்‌ அன்னை கடிந்து சொல்லும்‌ கடுஞ்சொல்லே நீராகவும்‌ கொண்டு செழித்து வளர்கின்றது.

This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.

பரிமேலழகர் உரை வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தலைமகன் சிறைப்புறத்தானாதல் அறிந்த தோழி, 'ஊரவர் அலரும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும்' எனச் சொல்லெடுப்பியவழி அவள் சொல்லியது. இந்நோய் - இக்காமநோயாகிய பயிர்; ஊரவர் கெளவை எருவாக அன்னை சொல் நீராக நீளும் - இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாக அது கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற வெஞ்சொல் நீராக, வளராநின்றது.
விளக்கம்:
('ஊரவர்' என்பது தொழிலான் ஆணொழித்து நின்றது. ஏகதேச உருவகம். சுருங்குதற்கு ஏதுவாவன தாமே விரிதற்கு ஏதுவாக நின்றன என்பதாம். வரைவானாதல் பயன்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஊரார் எடுத்த அலர் எருவாக, அன்னை சொல்லும் சொற்கள் நீராக, இந்நோய் வளராநின்றது,
(என்றவாறு) இஃது அலரின் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. இவை யிரண்டிற்கும் வரைவானாதல் பயன்.
1148

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்

With butter-oil extinguish fire! ‘Twill prove
Harder by scandal to extinguish love.

அலர்‌ கூறுவதால்‌ காமத்தை அடக்குவோம்‌ என்று முயலுதல்‌, நெய்யால்‌ நெருப்பை அவிப்போம்‌ என்று முயல்வதைப்‌ போன்றது.

To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee.

பரிமேலழகர் உரை இதுவும் அது. கெளவையால் காமம் நுதுப்பேமெனல் - ஏதிலார் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்தும் என்று கருதுதல்; நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்று - நெய்யால் எரியை அவித்தும் என்று கருதலோடு ஒக்கும்.
விளக்கம்:
(மூன்றனுருபுகள் கருவிக்கண் வந்தன. கிளர்தற் காரணமாய அலரால் அவித்தல் கூடாது என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எரிகின்ற நெருப்பை நெய்யினாலே அவிப்போமென்று நினைத் தாற்போலும் ; அலரினானே காமத்தை அவிப்போமென்று நினைத்தல்,
(என்றவாறு). இது தலைமகன் பின்னுங் களவொழுக்கம் வேண்டினமைகண்டு தோழி கூறியது.
1149

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை

When he who said ‘Fear not!’ hath left me blamed,
While many shrink, can I from rumour hide ashamed?

அஞ்சவேண்டா என்று அன்று உறுதி கூறியவர்‌ இன்று பலரும்‌ நாணும்படியாக நம்மைவிட்டுப்‌ பிரிந்தால்‌, அதனால்‌ அலருக்கு நாணியிருக்க முடியுமோ?

When the departure of him who said “fear not” has put me to shame before others, why need I be ashamed of scandal.

பரிமேலழகர் உரை வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள், அவன் வந்து சிறைப்புறத்தானாதல் அறிந்து, 'அலரஞ்சி ஆற்றன் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. அஞ்சல் ஓம்பு என்றார் பலர் நாண நீத்தக் கடை - தம்மை எதிர்ப்பட்டஞான்று 'நின்னிற்பிரியேன்; அஞ்சல் ஓம்பு' என்றவர் தாமே இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்த பின்; அலர் நாண ஒல்வதோ - நாம் ஏதிலார் கூறும் அலருக்கு நாணக் கூடுமோ? கூடாது.
விளக்கம்:
('நாண்' என்னும் வினையெச்சம் 'ஒல்வது' என்னும் தொழிற் பெயருள் ஒல்லுதல் தொழிலோடு முடிந்தது. 'கண்டார் நாணும் நிலைமையுமாய யாம் நாணுதல் யாண்டையது?' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அலராகுமென்று நாணுதல் இயல்வதோ? அஞ்சுதலைத் தவிரென்று சொன்னவர் பலரும் நாணுமாறு நம்மை நீங்கினவிடத்து,
(என்றவாறு). பலரென்றது தோழியும் செவிலியும் முதலாயினாரை.
1150

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்

If we desire, who loves will grant what we require;
This town sends forth the rumour we desire!

யாம்‌ விரும்புகின்ற அலரை இவ்வூரார்‌ எடுத்துக்‌ கூறுகின்றனர்‌. அதனால்‌ இனிமேல்‌ காதலர்‌ விரும்பினால்‌ விரும்பியவாறு அதனை உதவுவார்‌.

The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him).

பரிமேலழகர் உரை தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ அவன் உடன்போக்கு நயப்பச்சொல்லியது. யாம் வேண்டும் கெளவை இவ்வூர் எடுக்கும் - உடன் போகற்கு ஏதுவாகல் நோக்கி யாம் பண்டே வரும்புவதாய அலரை இவ்வூர்தானே எடாநின்றது; காதலர் தாம் வேண்டின் நல்குவர் - இனிக் காதலர்தாமும்யாம் வேண்டியக்கால் அதனை இனிதின் நேர்வர்; அதனால் இவ்வலர் நமக்கு நன்றாய் வந்தது.
விளக்கம்:
(எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நம்கண் காதல் உடைமையின் மறார்' என்பது தோன்றக் 'காதலர்' என்றாள். இவ்விருபது பாட்டும் புணர்தல் நிமித்தம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யாம் விரும்ப, அலரையும் இவ்வூரார் எடுத்தார்; ஆதலான், இனித் தாங்களே விரும்பிக் கொடுப்பர் நமது காதலர்க்கு,
(என்றவாறு).


transliteration

alaraela aaruyir nitrkum athanaip
palarariyaar paakkiyath thaal

malaranna kannaal arumai ariyaathu
alaraemakku eendhthathiv voor

uraaatho oorarindhtha kelavai athanaip
paeraaathu paetrranna neerththu

kavvaiyaal kavvithu kaamam athuvinrael
thavvaennum thanmai ilandhthu

kaliththorum kallundal vaetdatrraal kaamam
vaelippadundh thorum inithu

kandathu mannum orunaal alarmannum
thingkalaip paampukon datrru

ooravar kelavai yeruvaaka annaisol
neeraaka neelumindh noi

naeiyaal yerinuthuppaem yenratrraal kelavaiyaal
kaamam nuthuppaem yenal

alarnaana olvatho anjchalompu yenraar
palarnaana neeththak katai

thaamvaentin nalkuvar kaathalar yaamvaendum
kelavai yedukkumiv voor