The Might of Hatred 87

861

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை

With stronger than thyself, turn from the strife away;
With weaker shun not, rather court the fray.

தம்மைவிட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும்‌; தம்மை விட மெலியவர்‌ மேல்‌ பகை கொள்வதை விடாமல்‌ விரும்பி மேற்கொள்ள வேண்டும்‌.

Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.

பரிமேலழகர் உரை வலியார்க்கு மாறு ஏற்றல் ஒப்புக - தம்மின் வலியார்க்குப் பகையாய் எதிர்தலை ஒழிக, மெலியார்மேல் பகை ஓம்பா மேக - ஏனை மெலியார்க்குப் பகையாதலை ஒழியாது விரும்புக.
விளக்கம்:
('வலியார்' என்புழித் துணை வலியும் அடங்கலின், 'மெலியார்' என்புழித் துணை வலியின்மையும் கொள்ளப்படும். அத்துணைதான் படை பொருள் முதலிய வேற்றுமைத் துணையும், நல்லறிவுடைமை நீதிநூல்வழி ஒழுகல் முதலிய ஒற்றுமைத் துணையும் என இரண்டாம். அவ்விரண்டும் இல்லாரை வெல்வார்க்கு வலி தொலையாமையின், அவரோடு பகைத்தல் விதிக்கப்பட்டது. சிங்க நோக்காகிய இதனுள் பகை மாட்சி பொதுவகையால் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை பகை மாட்சியாவது பகை கொள்ளுங்கால் தனக்கு நன்மை பயக்குமாறு கொள்ளுதல். மேல் பகை கொள்ளலாகாதென்றார் பகைகொள்ளுங்கால் நன்மை பயக்குமாயின் கொள்கவென்றமையால், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) தம்மின் வலியார்க்குப் பகையா யெதிர்தலைத் தவிர்க; தம்மைப் போற்றாத எளியார்மாட்டுப் பகைகோடலை மேவுக,
(என்றவாறு). இது தனக்கு எளியாரோடு பகை கோடலாமென்றது.
862

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு

No kinsman’s love, no strength of friends has he;
How can he bear his foeman’s enmity?

ஒருவன்‌ அன்புஇல்லாதவனாய்‌, அமைந்த துணை இல்லாதவனாய்‌, தானும்‌ வலிமை இல்லாதவனாய்‌ இருந்தால்‌, அவன்‌ பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்‌?

How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome themight of his foe ?

பரிமேலழகர் உரை அன்பு இலன் - ஒருவன் தன் சுற்றத்தின்மேல் அன்பிலன், ஆன்ற துணை இலன் - அதுவேயன்றி வலிய துணையிலன்; தான் துவ்வான் - அதன்மேல் தான் வலியிலன்; ஏதிலான் துப்பு என்பரியும் - அப்பெற்றியான்மேல் வந்த பகைவன் வலியினை யாங்ஙனம் தொலைக்கும்?
விளக்கம்:
(சுற்றமும் இருவகைத் துணையும் தன்வலியும் இலனாகலின், அவன்மேற் செல்வார்க்கு வலிவளர்வதன்றித் தொலையாது என்பதாம். துவ்வான் - துவ்வினைச் செய்யான்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) சுற்றத்தார் மாட்டு அன்புறுத்தலும் இலன், வேற்றரசாகிய வலிய துணையும் இலன்; ஆதலான், தான் வலியிலன்; இப் பெற்றிப்பட்டவன் மேல் வந்த பகைவன் வலியை யாங்ஙனம் தொலைப்பன்?
(என்றவாறு).
863

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு

A craven thing! knows nought, accords with none, gives nought away;
To wrath of any foe he falls an easy prey.

ஒருவன்‌ அஞ்சுகின்றவனாய்‌, அறிவு இல்லாதவனாய்‌, பொருந்தும்‌ பண்பு இல்லாதவனாய்‌, பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய்‌ இருந்தால்‌, அவன்‌ பகைவர்க்கு மிக எளியவன்‌.

In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.

பரிமேலழகர் உரை அஞ்சும் - ஒருவன் அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சா நிற்கும்; அறியான் - அறியவேண்டுமவற்றை அறியான்; அமைவு இலன் - பிறரோடு பொருத்தம் இலன்; ஈகலான் - இவற்றின் மேலும் யாவர் மாட்டும் இவறன்மாலையன்; பகைக்குத் தஞ்சம் எளியன் - இப்பெற்றியான் பகைவர்க்கு மிக எளியன்.
விளக்கம்:
('தஞ்சம்', 'எளியன்' ஒரு பொருட்பன்மொழி. இந்நான்கு குற்றமும் உடையான் பகையின்றியும் அழியுமாகலின் 'தஞ்சம்', 'எளியன்' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சுவான், பகைவனது வலிமை அறியான், மத்தியிலன், ஈயமாட்டான்; இப்பெற்றிப்பட்டவன் பகைவர்க்கு மிகவும் எளியன்,
(என்றவாறு). இஃது இவை நான்கு முடையவன் தோற்கும் மென்றது.
864

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது

His wrath still blazes, every secret told; each day
This man’s in every place to every foe an easy prey.

ஒருவன்‌ சினம்‌ நீங்காதவனாய்‌, நெஞ்சத்தை நிறுத்தியாளும்‌ தன்மை இல்லாதவனாய்‌ இருந்தால்‌, அவன்‌ எக்காலத்திலும்‌ எவ்விடத்திலும்‌ எவர்க்கும்‌ எளியவன்‌.

He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all.

பரிமேலழகர் உரை வெகுளி நீங்கான் - ஒருவன் வெகுளியின் நீங்கான்; நிறை இலன் - அதுவேயன்றித் தான் நிறையுடையன்அல்லன், எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது - அவன் மேற் சேறல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிது.
விளக்கம்:
(நிறை - மறை பிறரறியாமை. வெகுள்தல் மாலையன் ஆகலானும் மறை வெளிப்படுத்தலானும், மேற்செல்வார்க்குக் காலமும் இடனும் வலியும் அறிந்து சேறல் வேண்டாதாயிற்று. இனி, 'இனிது' என்று பாடம் ஓதி 'அவன் பகைமை இனிது' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வெகுளியின் நின்று நீங்கானாய், நிறையுடைமை யிலனாயினவனை வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யாவர்க்கும் எளிது,
(என்றவாறு). இஃது இவையிரண்டு முடையவ னெல்லார்க்குந் தோற்குமென்றது.
865

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது

No way of right he scans, no precepts bind, no crimes affright,
No grace of good he owns; such man’s his foes’ delight.

ஒருவன்‌ நல்வழியை நோக்காமல்‌, பொருத்தமானவற்றைச்‌ செய்யாமல்‌, பழியையும்‌ பார்க்காமல்‌, நற்பண்பும்‌ இல்லாமல்‌ இருந்தால்‌, அவன்‌ பகைவர்க்கும்‌ எளியனாவான்‌.

(A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualities.

பரிமேலழகர் உரை வழி நோக்கான் - ஒருவன் நீதிநூலை ஓதான்; வாய்ப்பன செய்யான் - அது விதித்த தொழில்களைச் செய்யான்; பழி நோக்கான் - தனக்கு வரும் பழியைப் பாரான்; பண்பு இலன் - தான் பண்புடையன் அல்லன்; பற்றாற்கு இனிது - அவன் பகைவர்க்கு அப்பகைமை இனிது.
விளக்கம்:
(தொல்லோர் அடிப்பட வழங்கி வந்ததாகலான் 'வழி' என்றும், தப்பாது பயன்படுதலின் 'வாய்ப்பன' என்றும், இக்குற்றங்களுடையான் தானே அழிதலின் 'பற்றார்க்கு இனிது' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவினை செய்யத் தொடங்குங்கால் பின் வருவன பாரான், பயன்படுவனவற்றைச் செய்யான், அதனால் உறும் பழியைப் பாரான், குணமும் மிலன்; இவன் பகைமை பகைவர்க்கு இனிது,
(என்றவாறு).
866

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்

Blind in his rage, his lustful passions rage and swell;
If such a man mislikes you, like it well.

ஒருவன்‌ உண்மை காணாத சினம்‌ உடையவனாய்‌, மிகப்‌ பெரிய ஆசை உடையவனாய்‌ இருந்தால்‌, அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்‌.

Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.

பரிமேலழகர் உரை காணாச் சினத்தான் - தன்மையும் பிறரையும் தான் அறியாமைக்கு ஏதுவாகிய வெகுளியையுடையான் யாவன்; கழி பெருங் காமத்தான் - மேன்மேல் வளராநின்ற மிக்க காமத்தையுடையான் யாவன்; பேணாமை பேணப்படும் - அவரது பகைமை விரும்பிக் கொள்ளப்படும்.
விளக்கம்:
(காணாதசினம் என்பது விகாரமாயிற்று. முன்னேனுக்கு யாவரும் பகையாகலானும், ஏனோனுக்குக் காரியம் தோன்றாமையானும், தாமே அழிவர் என்பது பற்றி, இவர் 'பேணாமை பேணப்படும்' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மீண்டும் பாராத சினத்தனுமாய் மிகப் பெருகிய காமத்தனுமாகிய வன் பகை, விரும்பப்படும்,
(என்றவாறு). இஃது இவையுடையார் நட்டோரிலராதலால், இவரிடத்துப் பகை கொள் ளலா மென்றது.
867

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை

Unseenmly are his deeds, yet proffering aid, the man draws nigh:
His hate- ‘tis cheap at any price- be sure to buy!

தன்னை அடுத்துத்‌ தன்னோடிருந்தும்‌ பொருந்தாதவற்றைச்‌ செய்பவனுடைய பகையைப்‌ பொருள்‌ கொடுத்தாவது கொள்ள வேண்டும்‌.

It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment).

பரிமேலழகர் உரை அடுத்து இருந்து மாணாத செய்வான் பகை - வினையைத் தொடங்கியிருந்து அதற்கு ஏலாதன செய்வான் பகைமையை; கொடுத்தும் கொளல் மன்ற வேண்டும. சில பொருள் அழியக் கொடுத்தாயினும் கோடல் ஒருதலையாக வேண்டும்.
விளக்கம்:
(ஏலாதன - மெலியனாய் வைத்துத் துணிதலும், வலியனாய் வைத்துத் துணிதலும் முதலாயின. அப்பொழுது அதனால் சில பொருள் அழியினும், பின் பல பொருள் எய்தற்கு ஐயம் இன்மையின், 'கொளல் வேண்டும் மன்ற' என்றார். இவை ஆறு பாட்டானும் அது சிறப்பு வகையாற் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பகையை உற்றிருந்தும் மாட்சிமையில்லாதன செய்யுமவன் பகை யினை, துணிந்து ஒன்றனைக் கொடுத்தும் கொள்ளல் வேண்டும்,
(என்றவாறு). மாணாத செய்தலாவது பகைக்காவன செய்யாது பிறிது செயல். இஃது இவன் பகைசெய்யமாட்டானாதலால், அப்பகை கோடலாமென்றது.
868

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து

No gracious gifts he owns, faults many cloud his fame;
His foes rejoice, for none with kindred claim.

ஒருவன்‌ குணம்‌ இல்லாதவனாய்க்‌ குற்றம்‌ பல உடையவனானால்‌, அவன்‌ துணை இல்லாதவன்‌ ஆவான்‌; அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்‌.

He will become friendless who is without (any good) qualities. and whose faults are many; (such a character) is a help to (his) foes.

பரிமேலழகர் உரை குணன் இலனாயக் குற்றம் பலவாயின் இனன் இலனாம் - ஒருவன் குணம் ஒன்றும் இலனாய், உடைய குற்றம் பலவாய வழி அவன் துணையிலனாம்; மாற்றார்க்கு ஏமாப்பு உடைத்து - அவ்விலனாதல்தானே அவன் பகைவர்க்குத் துணையாதலையுடைத்து.
விளக்கம்:
(குணம் - இளைமாட்சியுட் சொல்லியன, குற்றம் - இவ்வதிகாரத்துச் சொல்லியனவும் மற்றும் அத்தன்மையனவும். துணை - சுற்றம், நட்பு, பொருள், படை முதலாயின பகைவர்க்கு இவற்றான் உளதாம் பயன் தானே உளதாமாகலின் 'ஏமாப்புடைத்து' என்றார். 'இலனாய்' என்னும் செய்தெனெச்சம் 'உடைய' என வந்த பெயரெச்சக் குறிப்புக் கொண்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) குணங்களுள் யாதும் இலனாய்க் குற்றங்கள் பல உடையனாயின், அவன் துணையிலனாம்; அது மாற்றார்க்கு ஏமமாதலை உடைத்தாம்,
(என்றவாறு).
869

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்

The joy of victory is never far removed from those
Who’ve luck to meet with ignorant and timid foes.

அறிவு இல்லாத அஞ்சும்‌ இயல்பு உடைய பகைவரைப்‌ பெற்றால்‌, அவரை எதிர்த்துப்‌ பகைகொள்பவர்க்கு இன்பங்கன்‌ தொலைவில்‌ நீங்காமல்‌ நிற்கும்‌.

There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid.

பரிமேலழகர் உரை அஞ்சும் பகைவர்ப் பெறின். br> அறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின் - நீதியை அறிதல் இல்லாத, அஞ்சும் பகைவரைப் பெற்றால்; செறுவார்க்குச் சேண் இன்பம் இகவா- அவரைச் செறுவார்க்கு உயர்ந்த இன்பங்கள் நீங்கா.
விளக்கம்:
(உபாயம் அறிதலும் அறிந்தால் செய்து முடிக்கும் திண்மையும் இல்லாதாரே பகைவராதல் கூடாமையின் 'பெறின்' என்றும், அவரை அறிந்து மேற்சென்ற பொழுதே பகையின்மையும் செல்வமும் ஒருங்கே எய்தலின், 'சேணிடை இன்பங்கள் இகவா' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அறிவில்லாத அச்சமுடைய பகைவரைப் பெறின், அவரைச் செறுவார்க்கு இன்பம் தூரப்போகாது, அணித்தாக வரும்,
(என்றவாறு). அறிவு - காரியவறிவு.
870

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி

The task of angry war with men unlearned in virtue’s lore
Who will not meet, glory shall meet him never more.

கல்வி கற்காதவனைப்‌ பகைத்துக்‌ கொள்ளும்‌ எளிய செயலைச்‌ செய்ய இயலாத ஒருவனிடம்‌, எக்காலத்திலும்‌ புகழ்‌ வந்து பொருந்தாது.

The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe).

பரிமேலழகர் உரை கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை-நீதி நூலைக் கல்லாதானோட பகைத்தலான் வரும் எளிய பொருளை மேவாதானை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது-எஞ்ஞான்றும் புகழ் மேவாது.
விளக்கம்:
(சிறு பொருள்-முயற்சி சிறிதாய பொருள். நீதி அறியாதானை வேறல் எளிதாயிருக்கவும், அது மாட்டாதானை வெற்றியான் வரும் புகழ் கூடாது என்பதாம்; ஆகவே இச்சிறிய முயற்சியாற் பெரிய பயன் எய்துக என்றவாறாயிற்று. இதற்குப் பிறரெல்லாம் அதிகாரத்தோடு மாறாதன் மேலும் ஒரு பொருள் தொடர்பு படாமல் உரைத்தார். இவை மூன்று பாட்டானும் அதனினாய பயன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கல்லாதானுமாய், வெகுளியுடையனுமாய், சிறு பொருளனுமாகிய பகைவனை எல்லா நாளும் ஒளி பொருந்தாது,
(என்றவாறு).


transliteration

valiyaarkku maaraetrral oampuka oampaa
maeliyaarmael maeka pakai

anpilan aanra thunaiyilan thaanthuvvaan
yenpariyum yaethilaan thuppu

anjsum ariyaan amaivilan eekalaan
thanjcham yeliyan pakaikku

neengkaan vaekuli niraiyilan yenjgnyaanrum
yaangkanum yaarkkum yelithu

valinokkaan vaaippana seiyaan palinokkaan
panpilan patrraarkku inithu

kaanaachiinaththaan kalipaerung kaamaththaan paenaamai
paenaamai paenap padum

koduththum kolalvaendum manra aduththirundhthu
maanaatha seivaan pakai

kunanilanaaik kutrram palavaayin maatrraarkku
inanilanaam yaemaap putaiththu

seruvaarkkuch saenikavaa inpam arivilaa
anjsum pakaivarp paerin

kallaan vaekuluchiiruporul yenjgnyaanrum ollaanai
ollaanai ollaa tholi