Not doing Evil 32

311

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்

Though ill to neighbour wrought should glorious pride of wealth secure,
No ill to do is fixed decree of men in spirit pure.

சிறப்பைத்‌ தருகின்ற பெருஞ்‌ செல்வத்தைப்‌ பெறுவதாக இருந்தாலும்‌, பிறர்க்குத்‌ துன்பம்‌ செய்யாதிருத்தலே மாசற்றவரின்‌ கொள்கையாம்‌.

It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.

பரிமேலழகர் உரை சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் - யோகமாகிய சிறப்புத் தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கு இன்னா செய்து பெறலாமாயினும்; பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - அதனைச் செய்யாமை ஆகமங்கள் கூறிய ஆற்றான் மனந்தூயாரது துணிவு.
விளக்கம்:
(உம்மை பெறாமை மேற்று. சிறப்பு உடையதனைச் சிறப்பு' என்றும், அதன் பயிற்சியான் வாயுவை வென்று எய்தப்படுதலின் எட்டுச் சித்திகளையும் 'சிறப்பு ஈனும் செல்வம்' என்றும், காமம் வெகுளி மயக்கம் என்னும் குற்றங்கள் அற்றாமையான் 'மாசு அற்றார்' என்றும் கூறினார். இதனான் தமக்கொரு பயன் நோக்கிச் செய்தல் விலக்கப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும், பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு,
(என்றவாறு). இது பழி வாராத செல்வம் பெறினும் தவிர வேண்டு மென்றது.
312

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்

Though malice work its worst, planning no ill return, to endure,
And work no ill, is fixed decree of men in spirit pure.

ஒருவன்‌ கறுவுகொண்டு துன்பம்‌ செய்த போதிலும்‌ அவனுக்குத்‌ திரும்பத்‌ துன்பம்‌ செய்யாதிருத்தலே மாசற்றவரின்‌ கொள்கையாம்‌.

It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.

பரிமேலழகர் உரை கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் - தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும், மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - மீண்டுதாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு.
விளக்கம்:
(இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன் மாட்டும், தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு,
(என்றவாறு).
313

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்

Though unprovoked thy soul malicious foes should sting,
Retaliation wrought inevitable woes will bring.

தான்‌ ஒன்றும்‌ செய்யாதிருக்கத்‌ தனக்குத்‌ தீங்கு செய்தவர்க்கும்‌ துன்பமானவற்றைச்‌ செய்தால்‌, செய்த பிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்‌.

In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow.

பரிமேலழகர் உரை செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் - தான் முன்பு ஓர் இன்னாமை செய்யாதிருக்கத் தன்மேல் செற்றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின்; உய்யா விழுமம் தரும் - அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத இடும்பையைக் கொடுக்கும்.
விளக்கம்:
(அவ்விடும்பையாவது தவம் இழந்து பழியும் பாவமும் எய்துதல்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தானொரு குற்றஞ் செய்யாதிருக்க, தனக்கு இன்னாதவற்றைச் செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின், அஃது உய்வில்லாத நோயைத்தரும். இது காரணமின்றி இன்னாதன் செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிர வேண்டுமென்றது.
314

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

To punish wrong, with kindly benefits the doers ply;
Thus shame their souls; but pass the ill unheeded by.

இன்னா செய்தவரைத்‌ தண்டித்தல்‌, அவரே நாணும்‌ படியாக அவர்க்கு நல்லுதவி செய்து, அவருடைய தீமையையும்‌ நன்மையயும்‌ மறந்துவிடுதலாகும்‌.

The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.

பரிமேலழகர் உரை இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறத்தலாவது; அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்த அவ்விரண்டனையும் மறத்தல்.
விளக்கம்:
(மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின், மறக்கற்பா ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இன்னாதன் செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின். அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக,
(என்றவாறு) இஃது ஒறுக்கும் நெறி கூறியது.
315

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை

From wisdom’s vaunted lore what doth the learner gain,
If as his own he guard not others’ souls from pain?

மற்ற உயிரின்‌ துன்பத்தைத்‌ தன்‌ துன்பம்போல்‌ கருதிக்‌ காப்பாற்றாவிட்டால்‌, பெற்றுள்ள அறிவினால்‌ ஆகும்‌ பயன்‌ உண்டோ?

What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?

பரிமேலழகர் உரை அறிவினான் ஆகுவது உண்டோ - துறந்தார்க்கு உயிர் முதலியவற்றை உள்ளவாறறிந்த அறிவினான் ஆவதொரு பயன் உண்டோ; பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக்கடை - பிறிதோர் உயிர்க்கு வரும் இன்னாதவற்றைத் தம் உயிர்க்கு வந்தன போலக் குறிக்கொண்டு காவா இடத்து ?
விளக்கம்:
(குறிக்கொண்டு காத்தலாவது: நடத்தல், இருத்தல், நிற்றல், உண்டல் முதலிய தம் தொழில்களானும், பிறவாற்றானும் உயிர்கள் உறுவனவற்றை முன்னே அறிந்து உறாமல் காத்தல். இது பெரும்பான்மையும் அஃறினைக்கண் நுண்ணிய உடம்பு உடையவற்றைப் பற்றி வருதலின் பொதுப்படப் 'பிறிதின் நோய்' என்றும், 'மறப்பான் அது துன்புறினும் நமக்கு இன்னா செய்தலாம்' என்று அறிந்து காத்தல் வேண்டும் ஆகலின், 'அது செய்யாவழி அறிவினான் ஆகுவது உண்டோ' என்றும் கூறினார். இதனான் செய்தல் விலக்கப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிறிதோருயிர்க்கு உறும் நோயைத் தனக்கு உறும் நோய் போலக் காவாதவிடத்து, அறிவுடையனாகிய வதனால் ஆகுவதொரு பயன் உண்டாகாது.) இஃது அறிவுடையார் செய்யார் என்றது.
316

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்

What his own soul has felt as bitter pain,
From making others feel should man abstain.

ஒருவன்‌ துன்பமானவை என்று தன்‌ வாழ்க்கையில்‌ கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில்‌ செய்யாமல்‌ தவிர்க்க வேண்டும்‌.

Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow.

பரிமேலழகர் உரை இன்னா எனத் தான் உணர்ந்தவை-இவை மக்கட்கு இன்னாதன என அனுமானத்தால் தான் அறிந்தவற்றை; பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும் - பிறன் மாட்டுச் செய்தலை மேவாமை துறந்தவனுக்கு வேண்டும்.
விளக்கம்:
(இன்பத் துன்பங்கள் உயிர்க்குணம் ஆகலின், அவை காட்சி அளவையான் அறியப்படாமை அறிக. அறமும் பாவமும் உளவாவது மனம் உளனாயவழி ஆகலான், 'உணர்ந்தவை' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தான் இன்னாதன இவையென்று அறிந்தவற்றைப் பிறற்குச் செய் தலை மேவாமை வேண்டும்,
(என்றவாறு). இஃது இன்னா செய்யாமை வேண்டு மென்றது.
317

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை

To work no wilful woe, in any wise, through all the days,
To any living soul, is virtue’s highest praise.

எவ்வளவு சிறியதாயினும்‌ எக்காலத்திலும்‌ எவரிடத்திலும்‌ மனத்தால்‌ எண்ணி உண்டாகின்ற துன்பச்‌ செயல்களைச்‌ செய்யாதிருத்தலே சிறந்தது.

It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time.

பரிமேலழகர் உரை மனத்தான் ஆம் மாணா - மனத்தோடு உளவாகின்ற இன்னாத செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை - எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும் செய்யாமை தலையாய அறம்.
விளக்கம்:
(ஈண்டு, மனத்தான் ஆகாத வழிப் பாவம் இல்லை என்பது பெற்றாம். ஆற்றலுண்டாய காலத்தும் ஆகாமையின். 'எஞ்ஞான்றும்' என்றும், எளியார்க்கும் ஆகாமையின், 'யார்க்கும்' என்றும், செயல் சிறிதாயினும் பாவம் பெரிதாகலின், 'எனைத்தானும்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யாதொன்றாயினும், எல்லா நாளும் யாவர்மாட்டும் இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று,
(என்றவாறு).
318

தன்னயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்

Whose soul has felt the bitter smart of wrong, how can
He wrongs inflict on ever-living soul of man?

தன்‌ உயிர்க்குத்‌ துன்ப மானவை இவை என்று உணர்ந்தவன்‌, மற்ற உயிர்களுக்கு அத்துன்பங்களைச்‌ செய்தல்‌ என்ன காரணத்தாலோ?

Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?

பரிமேலழகர் உரை தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் - பிறர் செய்யும் இன்னாதன தன்னுயிர்க்கு இன்னாவாம் தன்மையை அனுபவித்து அறிகின்றவன்; மன் உயிர்க்கு இன்னா செயல் என்கொல் - நிலைபேறுடைய பிற உயிர்கட்குத் தான் அவற்றைச் செய்தல் என்ன காரணத்தான்?
விளக்கம்:
(இவ்வாறே இவை பிற உயிர்க்கும் இன்னா என்பது அனுமானத்தான் அறிந்து வைத்துச் செய்கின்ற இப் பாவம் கழுவப்படாமையின் 'இன்னாதன யான் வருந்தப் பின்னே வந்து வருத்தும்' என்பது ஆகமத்தானும் அறிந்து ஒழியற்பாலன என்பது தோன்றத் 'தான்' என்றும், அத்தன்மையான் ஒழியாமைக்குக் காரணம் மயக்கம் என்பதுபோன்ற 'என்கொலோ' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் பொதுவகையான் விலக்கப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தன்னுயிர்க்கு உற்ற இன்னாயையை உயிரில்லாப் பொருள்கள் போல் அறியாது கிடத்தலன்றித் தான் அறியுமவன், பின்னைப் பிறவுயிர்க்கு இன்னாதவற்றைச் செய்கின்றது யாதினைக் கருதியோ?
(என்றவாறு).
319

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்

If, ere the noontide, you to others evil do,
Before the eventide will evil visit you.

முற்பகலில்‌ மற்றவர்க்குத்‌ துன்பமானவற்றைச்‌ செய்தால்‌ அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள்‌ தாமாகவே வந்து சேரும்‌.

If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening.

பரிமேலழகர் உரை பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் - துறந்தவர் பிறர்க்கு இன்னாதனவற்றை ஒரு பகலது முற்கூற்றின்கண் செய்வராயின; தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும் - தமக்கு இன்னாதன அதன் பிற்கூற்றின்கண் அவர் செய்யாமல் தாமே வரும்.
விளக்கம்:
('முற்பகல், 'பிற்பகல்' என்பன பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. தவம் அழிதலின், அங்ஙனம் கடிதினும் எளிதினும் வரும்; அதனால், அவை செய்யற்க என்பதாம். இனி 'தானே வரும்' என்பது பாடமாயின், அச்செயல் தானே தமக்கு இன்னாதன வாய் வரும் என உபசார வழக்காக்கி, ஆக்கம் வருவித்து உரைக்க.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிறர்க்கு இன்னாதவற்றை முற்பொழுது செய்யின், தாமே பிற் பொழுது தமக்கு இன்னாதனவாய் வரும் ; மற்றொருவன் செய்யாமல்,
(என்றவாறு) இன்னாதன் செய்ததனால் வருங் குற்றமென்னை யென்றார்க்கு , இது கூறப் பட்டது.
320

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்

O’er every evil-doer evil broodeth still;
He evil shuns who freedom seeks from ill.

துன்பம்‌ எல்லாம்‌ துன்பம்‌ செய்தவரையே சார்வன. ஆகையால்‌ துன்பம்‌ இல்லாமல்‌ வாழ்தலை விரும்புகின்றவர்‌, பிறர்க்குத்‌ துன்பம்‌ செய்யார்‌.

Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others.

பரிமேலழகர் உரை நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் - இன்னா தன எல்லாம் பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்தார் மேல் ஆம்; நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார் - அதனால் தம் உயிர்க்கு இன்னாதன வேண்டாதார், பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்யார்.
விளக்கம்:
("உயிர்நிலத்து வினைவித்து இட்டார்க்கு விளைவும் அதுவே,' '(சீவக. முத்தி. 164) ஆகலின், "நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்" என்றார். இது சொற்பொருள் பின்வருநிலை. இவை இரண்டு பாட்டானும் அது செய்தார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இக் காலத்து நுகர்கின்ற துன்பமெல்லாம் முற்காலத்துப் பிறர்க் குத் துன்பம் செய்தார் மாட்டே யுளவாம் ; ஆதலால், இக் காலத்துப் பிறர்க்குத் துன்பத்தைச் செய்யார் வருங்காலத்துத் தமக்குத் துன்பம் வாராமையைவேண்டு பவர்,
(என்றவாறு).


transliteration

sirappeenum selvam paerinum pirarkkuinnaa
seiyaamai maachatrraar koal

karuththuinnaa seithavak kannum maruththinnaa
seiyaamai maachatrraar koal

seiyaamal setrraarkkum innaatha seithapin
uiyaa vilumandh tharum

innaasei thaarai oruththal avarnaana
nannayanj seithu vidal

arivinaan aakuva thuntoh pirithinnoi
thandhnoipol potrraak katai

innaa yenaththaan unarndhthavai thunnaamai
vaendum pirankan seyal

yenaiththaanum yenjgnyaanrum yaarkkum manaththaanaam
maanaasei yaamai thalai

thannayirkku innaamai thaanarivaan yenkolo
mannuyirkku innaa seyal

pirarkkinnaa mutrpakal seiyin thamakkuinnaa
pitrpakal thaamae varum

noyaellaam noiseithaar maelavaam noiseiyaar
noyinmai vaendu pavar