The Excellence of Rain 2

11

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

The world its course maintains through life that rain unfailing gives;
Thus rain is known the true ambrosial food of all that lives.

மழை பெய்ய உலகம்‌ வாழ்ந்துவருவதால்‌, மழையானது உலகத்து வாழும்‌ உயிர்களுக்கு அமிழ்தம்‌ என்று உணரத்‌ தக்கதாகும்‌.

By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.

பரிமேலழகர் உரை வான் நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று-அம்மழைதான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து
விளக்கம்:
('நிற்ப' என்பது 'நின்று' எனத் திரிந்து நின்றது. 'உலகம்' என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை' 'அமிழ்தம்' என்று உணர்க' என்றார்.)
மணக்குடவர் உரை வான் சிறப்பாவது மழையினது தலைமை கூறுதல். இது கடவுட் செய்கைத்தாதலான் அதன் பிற் கூறப்பட்டது. இஃதிண்டுக் கூறியதென்னையெனின், பின்னுரைக்கப் படுகின்ற இல்லறமுந் துறவறமும் மினிது நடப்பது மழையுண்டாயி னென்றற்குப் போலும்; அன்றியும், காலத்தின் பொருட்டுக் கூறினாரெனினும் அமையும். (இதன் பொருள்) மழைவளம் நிலை நிற்றலானே உலகநடை தப்பாது வருதலான், அம் மழைதான் உலகத்தார் அமுதமென்றுணரும் பகுதியது,
(என்றவாறு). இஃது அறம் பொரு ளின்பங்களை யுண்டாக்குதலானும், பலவகைப்பட்ட வுணவுகளை நிலை நிறுத்தலானும், இம் மழையினை மற்றுள்ள பூத மாத்திரமாக நினைக்கப் படாதென்ற நிலைமை கூறிற்று.
12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

The rain makes pleasant food for eaters rise;
As food itself, thirst-quenching draught supplies.

உண்பவர்க்குத்‌ தக்க உணவுப்‌ பொருள்களை விளைவித்துத்‌ தருவதோடு, பருகுவார்க்குத்‌ தானும்‌ ஓர்‌ உணவாக இருப்பது மழையாகும்‌.

Rain produces good food, and is itself food.

பரிமேலழகர் உரை துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி - உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி; துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை-அவற்றை உணர்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை
விளக்கம்:
(தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்பு உடைய உயர்திணைமேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின், அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவுகளையு முண் டாக்கித், தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே,
(என்றவாறு). இது பசியைக் கெடுக்கு மென்றது.
13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி

If clouds, that promised rain, deceive, and in the sky remain,
Famine, sore torment, stalks o’er earth’s vast ocean-girdled plain.

மழை பெய்யாமல்‌ பொய்படுமானால்‌, கடல்‌ சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும்‌ பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்‌.

If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world.

பரிமேலழகர் உரை விண் இன்று பொய்ப்பின் மழை வேண்டுங்காலத்துப் பெய்யாது பொய்க்கும் ஆயின்; விரி நீர் வியன் உலகத்துள் கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்; நின்று உடற்றும் பசி-நிலை பெற்று உயிர்களை வருத்தும் பசி.
விளக்கம்:
(கடலுடைத்தாயினும் அதனால் பயன் இல்லை யென்பார், 'விரி நீர் வியன் உலகத்து' என்றார். உணவு இன்மையின், பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின், விரிந்த நீரினை யுடைய அகன்ற வுலகத்திடத்தே பசியானது நின்று வருத்தாநிற்கும்; எல்லாவுயிர் களையும்,
(என்றவாறு). பொய்த்தல் - தன்றொழில் மறுத்தல். இது 'பசி' என்று பொதுப்படக் கூறிய வதனான் மக்களும் விலங்கும், பொருளுங் காமமுந் துய்க்கலாற்றாது துன்ப முறுமென்று கூறிற்று.
14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

If clouds their wealth of waters fail on earth to pour,
The ploughers plough with oxen’s sturdy team no more.

மழை என்னும்‌ வருவாய்‌ வளம்‌ குன்றிவிட்டால்‌, (உணவுப்‌ பொருள்களை உண்டாக்கும்‌) உழவரும்‌ ஏர்கொண்டு உழ மாட்டார்‌.

If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.

பரிமேலழகர் உரை உழவர் ஏரின் உழார் - உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின.
விளக்கம்:
('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.) --
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஏரினுழுதலைத் தவிர்வாருழவர் ; புயலாகிய வாரியினுடைய வளங் குறைந்த காலத்து,
(என்றவாறு) இஃது உழவரில்லை யென்றது.
15

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

‘Tis rain works all: it ruin spreads, then timely aid supplies;
As, in the happy days before, it bids the ruined rise.

பெய்யாமல்‌ வாழ்வைக்‌ கெடுக்க வல்லதும்‌ மழை; மழையில்லாமல்‌ வளம்‌ கெட்டு நொந்தவர்க்குத்‌ துணையாய்‌ அவ்வாறே காக்க வல்லதும்‌ மழையாகும்‌.

Rain by its absence ruins men; and by its existence restores them to fortune.

பரிமேலழகர் உரை கெடுப்பதூஉம் - பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்; கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம்-அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற்போல எடுப்பதூஉம்; எல்லாம் மழை-இவை எல்லாம் வல்லது மழை.
விளக்கம்:
('மற்று' வினை மாற்றின்கண் வந்தது, 'ஆங்கு என்பது மறுதலைத் தொழிலுவ மத்தின்கண் வந்த உவமச்சொல். கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், 'கெட்டார்க்கு' என்றார். 'எல்லாம்' என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளால் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி. 'வல்லது' என்பது அவாய் நிலையான் வந்தது. மழையினது ஆற்றல் கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பெய்யாது நின்று எல்லாப் பொருளையுங் கெடுப்பதும், அவை கெடப் பட்டார்க்குத் துணையாய்த் தான் பெய்து பொருள்களெல்லாவற்றையும் அவ் விடத்தே யுண்டாக்குவதும், மழை,
(என்றவாறு). இஃது இரண்டினையுஞ் செய்ய வற்றென்றவாறு.
16

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

If from the clouds no drops of rain are shed.
‘Tis rare to see green herb lift up its head.

வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால்‌ அல்லாமல்‌, உலகத்தில்‌ ஓரறிவுயிராகிய பசும்புல்லின்‌ தலையையும்‌ காண முடியாது.

If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen.

பரிமேலழகர் உரை விசும்பின் துளி வீழின் அல்லால் - மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது-வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது. தலையையும் காண்டல் அரிது.
விளக்கம்:
('விசும்பு ஆகு பெயர். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வானின்று துளிவீழினல்லது அவ்விடத்துப் பசுத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது,
(என்றவாறு) ஆங்கென்பதனை அசையாக்கினு மமையும். இஃது ஓரறிவுயிருங் கெடு மென்றது.
17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

If clouds restrain their gifts and grant no rain,
The treasures fail in ocean’s wide domain.

மேகம்‌ கடலிலிருந்து நீரைக்‌ கொண்டு அதனிடத்திலே பெய்யாமல்‌ விடுமானால்‌, பெரிய கடலும்‌ தன்‌ வளம்‌ குன்றிப்‌ போகும்‌.

Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).

பரிமேலழகர் உரை நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும்-அளவில்லாத கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தான் தடிந்து நல்காது ஆகிவிடின்-மேகம் தான் அதனைக் குறைத்து அதன்கண் பெய்யாது விடுமாயின்.
விளக்கம்:
(உம்மை சிறப்பு உம்மை. தன்இயல்பு குறைதலாவது நீர்வாழ் உயிர்கள் பிறவாமையும், மணி முதலாயின படாமையும் ஆம். ஈண்டுக் 'குறைத்தல்' என்றது முகத்தலை. அது "கடல்குறை படுத்தநீர் கல் குறைபட எறிந்து" (பரி.பா.20) என்பதனாலும் அறிக. மழைக்கு முதலாய கடற்கும் மழை வேண்டும் என்பதாம். இவை ஏழு பாட்டானும் உலகம் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நிலமேயன்றி நெடியகடலும் தனது தன்மை குறையும்; மின்னி மழையானது பெய்யாவிடின்,
(என்றவாறு).. தடிந்தென்பதற்கு, கூறு படுத்து என்று பொருளுரைப்பாரு முளர். இது நீருள் வாழ்வனவும் படுவனவுங் கெடுமென்றது. இவை நான்கினானும் பொருட் கேடு கூறினார் ; பொருள்கெட இன்பங்கெடு மென்பதனால் இன்பக்கேடு கூறிற் றிலர்.
18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

If heaven grow dry, with feast and offering never more,
Will men on earth the heavenly ones adore.

மழை பெய்யாமல்‌ போகுமானால்‌ இவ்வுலகத்தில்‌ வானோர்க்காக நடக்கும்‌ திருவிழாவும்‌ நடைபெறாது; நாள்‌ வழிபாடும்‌ நடைபெறாது.

If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials.

பரிமேலழகர் உரை வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது - தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல்-மழை பெய்யாதாயின.
விளக்கம்:
(நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார்ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற் கூறினார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது; வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண்,
(என்றவாறு) மழை பெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்கு வகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்.
19

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

If heaven its watery treasures ceases to dispense,
Through the wide world cease gifts, and deeds of ‘penitence’.

மழை பெய்யவில்லையானால்‌, இந்தப்‌ பெரிய உலகத்தில்‌ பிறர்பொருட்டுச்‌ செய்யும்‌ தானமும்‌, தம்‌ பொருட்டுச்‌ செய்யும்‌ தவமும்‌ இல்லையாகும்‌.

If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world.

பரிமேலழகர் உரை வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் - மழை பெய்யாது ஆயின்
விளக்கம்:
(தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தானமுந் தவமுமாகிய விரண்டறமு முளவாகா; அகன்ற வுலகத் துக்கண் மழை பெய்யாதாயின்,
(என்றவாறு) இது தானமும் தவமுங் கெடுமென்றது.
20

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

When water fails, functions of nature cease, you say;
Thus when rain fails, no men can walk in ‘duty’s ordered way’.

எப்படிப்பட்டவர்க்கும்‌ நீர்‌ இல்லாமல்‌ உலக வாழ்க்கை நடைபெறாது என்றால்‌, மழை இல்லையானால்‌ ஒழுக்கமும்‌ நிலைபெறாமல்‌ போகும்‌.

If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water.

பரிமேலழகர் உரை யார் யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின்-எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது - அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது.
விளக்கம்:
(பொருள் இன்பங்களை 'உலகியல்' என்றார். அவை இம்மைக்கண்ண ஆகலின். இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல். நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின், அதுபோல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், 'நீர் இன்று அமையாது உலகு எனின்' என்றார். இதனை, 'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நீரையின்றி யுலகம் அமையாதாயின், யாவர்க்கும் மழையை யின்றி ஒழுக்கம் உண்டாகாது,
(என்றவாறு). ஒழுக்கம் - விரதம். இஃது ஆசாரங்கெடுமென்றது. இவை மூன்றினானும் நான்கறமுங் கெடுமென்று கூறினார்.


transliteration

vaanninru ulakam valangki varuthalaal
thaanamiltham yenrunaratr paatrru

thuppaarkkuth thuppaaya thuppaakkith thuppaarkkuth
thuppaaya thooum malai

vininru poippin virineer viyanulakaththu
viyanulakaththu ulninru udatrruchiasi

yaerin ulaaar ulavar puyalyennum
vaari valangkunrik kaal

keduppathooum kettaarkkuch saarvaaimatr raangkae
yeduppathooum yellaam malai

visumpin thuliveelin allaalmatr raangkae
pasumpul thalaikaanpu arithu

naedungkadalum thanneermai kunrum thatindhthaelili
thaannalkaa thaaki vitin

sirappodu poochanai sellaathu vaanam
varakkumael vaanorkkum eendu

thaanam thavamirandum thangkaa viyanulakam
vaanam valangkaa thaenin

neerinru amaiyaathu ulakenin yaaryaarkkum
vaaninru amaiyaathu olukku