Folly 84

831

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்

What one thing merits folly’s special name.
Letting gain go, loss for one’s own to claim!

பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால்‌, தனக்குக்‌ கெடுதியானதைக்‌ கைக்கொண்டு ஊதியமானதைக்‌ கைவிடுதலாகும்‌.

Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain.

பரிமேலழகர் உரை பேதைமை என்பது ஒன்று - பேதைமை என்று சொல்லப்படுவது ஒருவனுக்கு ஏனைய குற்றங்கள் எல்லாவற்றினும் மிக்கதொன்று; யாது எனின் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் - அதுதான் யாதென்று வினவின், தனக்குக் கேடு பயப்பனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கைவிடுதல்.
விளக்கம்:
(கேடு - வறுமை, பழி, பாவங்கள். ஆக்கம் - செல்வம், புகழ், அறங்கள். தானே தன் இருமையும் கெடுத்துக் கோடல் என்பதாம்.)
மணக்குடவர் உரை பேதைமையாவது கேட்டிற்குக் காரணமாகியவற்றை அறியாதாரியல்பு கூறுதல். இறைமாட்சி முதலாகக் கூடாநட்பு ஈறாகப் பொருட்பகுதியாகிய அமைச்சும், நாடும், அரணும், பொருளும், படையும், நட்பும் என்று சொல்லப் பட்ட ஆறு உறுப்புங் கூறினார். இனி அவ்வரசர்க்கும் அவராலாக்கப்பட்ட பொருட் கும் கேடுவரும் நெறியையறிந்து காக்குமாறு வேண்டுமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) அறியாமையென்று சொல்லப்படுவதொன்று யாதெனின், அது குற்றம் பயப்பனவற்றைக் கொண்டு நன்மை பயப்பனவற்றைப் போகவிடல். இது பேதைமையின் இலக்கணம் கூறிற்று.
832

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்

‘Mid follies chiefest folly is to fix your love
On deeds which to your station unbefitting prove.

ஒருவனுக்குப்‌ பேதைமை எல்லாவற்றிலும்‌ மிக்க பேதைமை, தன்‌ ஒழுக்கத்திற்குப்‌ பொருந்தாததில்‌ தன்‌ விருப்பத்தைச்‌ செலுத்துதலாகும்‌.

The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden.

பரிமேலழகர் உரை பேதைமையுள் எல்லாம் பேதைமை - ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது, கையல்லதன்கண் காதன்மை செயல் - தனக்காகாத ஒழுக்கத்தின்கண் காதன்மை செய்தல்.
விளக்கம்:
(இருமைக்கும் ஆகாதென்று நூலோர் கடிந்த செயல்களை விரும்பிச் செய்தல் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பேதைமையது இலக்கணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அறியாமை யெல்லாவற்றுள்ளும் அறியாமையாவது தனக்குக் கைவாராத பொருளின்கண் காதன்மை செய்தல்,
(என்றவாறு) இது வருந்தினாலும் பெறாததற்குக் காதல் செய்தலும் பேதைமையென் றது.
833

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில

Ashamed of nothing, searching nothing out, of loveless heart,
Nought cherishing, ‘tis thus the fool will play his part.

தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல்‌, தக்கவற்றை நாடாமலிருத்தல்‌, அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும்‌ விரும்பாமை அகியவை பேதையின்‌ தொழில்கள்‌.

Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything(that ought to be desired) are the qualities of the fool.

பரிமேலழகர் உரை நாணாமை - நாணவேண்டுமவற்றுக்கு நாணாமையும்; நாடாமை - நாட வேண்டுமவற்றை நாடாமையும்; நார்இன்மை - யாவர் மாட்டும் முறிந்தசொல் செயலுடைமையும்; யாதொன்றும் பேணாமை - பேண வேண்டுமவற்றுள் யாதொன்றனையும் பேணாமையும்; பேதை தொழில் - பேதையது தொழில்.
விளக்கம்:
(நாணவேண்டுபவை - பழி பாவங்கள். நாடவேண்டுமவை - கருமங்களில் செய்வன தவிர்வன முறிதல் : கண்ணுறுதல். பேண வேண்டுமவை: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம் முதலாயின. இவை பேதைமைக்கு எஞ்ஞான்றும் இயல்பாய் வருதலின் 'தொழில்' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நாணமில்லாமையும், தெரிந்துணராமையும், ஈரமின்மையும், யாதொரு பொருளையும் போற்றாமையும் பேதையார் தொழில்,
(என்றவாறு). இது பேதையார்செயல் கூறிற்று.
834

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்

The sacred law he reads and learns, to other men expounds,-
Himself obeys not; where can greater fool be found?

நூல்களை ஓதியும்‌, அவற்றின்‌ பொருளை உணர்ந்தும்‌, பிறர்க்கு எடுத்துச்‌ சொல்லியும்‌ தான்‌ அவற்றின்‌ நெறியில்‌ அடங்கி ஒழுகாத பேதைபோல்‌ வேறு பேதையர்‌ இல்லை.

There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and eventaught it to others, does not walk according to his own teaching.

பரிமேலழகர் உரை ஓதி - மன மொழி மெய்கள் அடங்குதற்கு ஏதுவாய நூல்களை ஓதியும்; உணர்ந்தும் - அவ்வடக்கத்தான் வரும் பயனை உணர்ந்தும்; பிறர்க்கு உரைத்தும் - அதனை அறியலுறப் பிறர்க்கு உரைத்தும்; தான் அடங்காப் பேதையின் - தான் அவையடங்கி ஒழுகாத பேதைபோல; பேதையார் இல் - பேதையார் உலகத்து இல்லை.
விளக்கம்:
(உம்மை முன்னும் கூட்டப்பட்டது. இப்பேதைமை தனக்கு மருந்தாய இவற்றால் தீராமையானும், வேற்று மருந்து இன்மையானும், 'பேதையின் பேதையார் இல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பேதையது தொழில் பொதுவகையான் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நூல்களைக் கற்றறிந்தும், அவற்றைப் பிறர்க்கு இசையச் சொல்லி யும், தான் அடங்குதலைச் செய்யாத பேதையார்போலப் பேதையார் உலகத்தில் இல்லை,
(என்றவாறு)
835

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு

The fool will merit hell in one brief life on earth,
In which he entering sinks through sevenfold round of birth.

எழுபிறப்பிலும்‌ தான்‌ புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத்‌ துன்பத்தைப்‌ பேதை தன்‌ ஒரு பிறவியில்‌ செய்து கொள்ள வல்லவனாவான்‌.

A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births.

பரிமேலழகர் உரை பேதை - பேதையாயினான்; எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு - வரும் பிறவிகள் எல்லாம் தான் புக்கு அழுந்தும் நிரயத்தினை; ஒருமைச் செயல் ஆற்றும் - இவ்வொரு பிறப்பள்ளே செய்து கொள்ள வல்லனாம்.
விளக்கம்:
(எல்லாப் பிறப்பும் ஏழாய் அடங்குதல் அறியப்பட்டமையின், முற்று உம்மை கொடுத்தார். அழுந்துதற்கு இடனாய நிரயம், ஈண்டைப் பிறப்புகளிலும் கொடுவினை வயத்தால் அந் 'நிரயத்' துன்பமே உழந்து வருதலின், 'எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு' என்றார். முடிவில் காலமெல்லாம் தான் நிரயத் துன்பம் ஊழத்தற்கு ஏதுவாம் கொடுவினைகளையே அறிந்து சில காலத்துள்ளே செய்துகோடல் பிறர்க்கு அரிதாகலின், 'ஆற்றும்' என்றார். இதனான் அவன் மறுமைச் செயல் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பேதை ஒரு பிறப்பின்கண் செய்யும் செயலாலே செய்யவல் லன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை ,
(என்றவாறு). புக்கழுந்தல் - ஒருகால் நாகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.
836

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்

When fool some task attempts with uninstructed pains,
It fails; nor that alone, himself he binds with chains.

ஒழுக்கநெறி அறியாத பேதை ஒரு செயலை மேற்‌ கொண்டால்‌ (அந்தச்‌ செயல்‌ முடிவுபெறாமல்‌) பொய்படும்‌; அன்றியும்‌ அவன்‌ குற்றவாளியாகித்‌ தளை பூணுவான்‌.

If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all ? He will even adorn himself with fetters.

பரிமேலழகர் உரை கை அறியாப் பேதை வினைமேற் கொளின் - செய்யும் முறைமை அறியாத பேதை ஒரு கருமத்தை மேற்கொள்வாளுயின்; பொய்படும் ஒன்றோ புனை பூணும் - அதுவும் புரைபடும்; தானும் தளை பூணும்.
விளக்கம்:
(புரைபடுதல் - பின் ஆகாவகை உள்ளழிதல். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். அதனையும் கெடுத்துத் தானும் கெடும் என்பதாம். இதனான் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒழுக்கமறியாதா னொருபேதையான் ஒருகருமத்தை மேற்கொண் டானாயின், அப்பொழுது பொய்யனென்னவும்பட்டு, பிறர்க்குப் புனை பூணும். புனை பூணல் - சிறைபடுதல்.
837

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

When fools are blessed with fortune’s bounteous store,
Their foes feed full, their friends are prey to hunger sore.

பேதை பெருஞ்‌ செல்வம்‌ அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத) அயலார்‌ நிறைய நன்மை பெற. அவனுடைய சுற்றத்தார்‌ பசியால்‌ வருந்துவர்‌.

If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.

பரிமேலழகர் உரை பதை பெருஞ்செல்வம் உற்றக்கடை - பேதையாயினான் பெரிய செல்வத்தைத் தெய்வத்தான் எய்திய வழி; ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் - தன்னோடு ஓர் இயைபும் இல்லாதார் நிறைய, எல்லா இயைபும் உடைய தமராயினார் பசியா நிற்பர்.
விளக்கம்:
(எல்லா நன்மையுஞ் செய்து கோடற் கருவி என்பது தோன்ற 'பெருஞ்செல்வம்' என்றும், அதனைப் படைக்கும் ஆற்றல் இல்லாமை தோன்ற 'உற்றற்கடை' என்றும், எல்லாம் பெறுதல் தோன்ற 'ஆர' என்றும், உணவும் பெறாமை தோன்றப் 'பசிப்பர்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அயலார் உண்ண, உற்றார் பசியாநிற்பர்; பேதையானவன் பெரிய செல்வத்தை உற்றவிடத்து,
(என்றவாறு). இது போதை பொருள் பெற்றால் வழங்குந்திறங் கூறிற்று.
838

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்

When folly’s hand grasps wealth’s increase, ‘twill be
As when a mad man raves in drunken glee.

பேதை தன்‌ கையில்‌ ஒரு பொருள்‌ பெற்றால்‌ (அவன்‌ நிலைமை பித்துப்‌ பிடித்த ஒருவன்‌ கள்‌ குடித்து மயங்கினாற்‌ போலாகும்‌.

A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy.

பரிமேலழகர் உரை பேதை தன் கை ஒன்று உடைமை பெறின் - பேதையாயினான் தன் கைக்கண்ணே ஒன்றனை உடைமையாகப் பெற்றானாயின்; மையல் ஒருவன் களித்தற்று - அவன் மயங்குதல் முன்னே பித்தினை உடையானொருவன் அம்மயக்கத்தின்மேலே மதுவுண்டு மயங்கினாற்போலும்.
விளக்கம்:
('பெறின்' எனவே, தெய்வத்தான் அன்றித் தன்னாற் பெறாமை பெற்றாம். பேதைமையும் செல்வக் களிப்பும் ஒருங்கு உடைமையால் அவன் செய்வன, மையலும் மதுக்களிப்பும் ஒருங்குடையான் செய்வனபோல் தலை தடுமாறும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் செல்வம் எய்தியவழிப் பயன் கொள்ளுமாறு கூறப்பட்டது.
மணக்குடவர் உரை (இதன் பொருள்) முன்னே பித்தாய்மயங்கிய ஒருவன் பின்பு கள்ளினை நுகர்ந்து களித்தாற்போலாவதொன்று; பேதை தன்கையின்கண் ஒன்றுடையனானவிடத்து.
839

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்

Friendship of fools is very pleasant thing,
Parting with them will leave behind no sting.

பேதையரிடமிருந்து பிரிவு நேர்ந்தபோது, அப்பிரிவு துன்பம்‌ ஒன்றும்‌ தருவதில்லை. ஆகையால்‌ பேதையருடன்‌ கொள்ளும்‌ நட்பு மிக இனியதாகும்‌.

The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be nothing to cause them pain.

பரிமேலழகர் உரை பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல்-பிரிவு வந்துழி அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது - ஆகலான் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது.
விளக்கம்:
(நாள்தோறும் தேய்ந்து வருதலின் துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனான் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மகளிர்க்குப் பேதையாரது நட்பு மிகவும் இனிது; பிரிந்தவிடத்து, தருவதொரு துன்பம் இல்லையாதலான்,
(என்றவாறு). இது பேதை காமந் துய்க்குமாறு கூறிற்று.
840

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்

Like him who seeks his couch with unwashed feet,
Is fool whose foot intrudes where wise men meet.

சான்றோரின்‌ கூட்டத்தில்‌ பேதை புகுதல்‌, ஒருவன்‌ தூய்மையில்லாதவற்றை மிதித்துக்‌ கழுவாத காலைப்‌ படுக்கையில்‌ வைத்தாற்‌ போன்றது.

The appearance of a fool in an assembly of the learned is like placing (one’s) unwashed feet on a bed.

பரிமேலழகர் உரை சான்றோர் குழாத்துப் பேதை புகல் - சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல்; கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று - தூய அல்ல மிதித்த காலை இன்பந்தரும அமளிக் கண்ணே வைத்தாற் போலும்.
விளக்கம்:
(கழுவாக்கால் என்பது இடக்கரடக்கு. இதனால் அவ்வமளியும் இழிக்கப்படுமாறு போல, இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம். இதனான், அவன் அவையிடை இருக்குமாறு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கழுவாத காலைப் பள்ளியின் கண் வைத்தாற்போலும்; சான்றோர் அவையின் கண் பேதை புகுந்து கூடியிருத்தல்,
(என்றவாறு). இது பேதை யிருந்த அவை யிகழப்படுமென்றது.


transliteration

paethaimai yenpathonru yaathaenin yaethangkondu
oothiyam poka vidal

paethaimaiyul yellaam paethaimai kaathanmai
kaiyalla thankat seyal

naanaamai naataamai naarinmai yaathonrum
paenaamai paethai tholila

oathi unarndhthum pirarkkuraiththum thaanadangkaap
paethaiyin paethaiyaar il

orumaich seyalaatrrum paethai yelumaiyum
thaanpuk kalundhthum alaru

poipadum onno punaipoonum kaiyariyaap
paethai vinaimaetr kolin

yaethilaar aarath thamachisippar paethai
paerunjselvam utrrak katai

maiyal oruvan kaliththatrraal paethaithan
kaiyonru utaimai paerin

paerithinithu paethaiyaar kaenmai pirivinkan
peelai tharuvathon ril

kalaaakkaal palliyul vaiththatrraal saannor
kulaaaththup paethai pukal