Renown 24

231

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

See that thy life the praise of generous gifts obtain;
Save this for living man exists no real gain.

வறியவர்க்கு ஈதல்‌ வேண்டும்‌. அதனால்‌ புகழ்‌ உண்டாக வாழவேண்டும்‌. அப்புகழ்‌ அல்லாமல்‌ உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும்‌ இல்லை.

Give to the poor and live with praise. There is no greater profit to man than that.

பரிமேலழகர் உரை ஈதல் வறியார்க்கு ஈக; இசைபட வாழ்தல்-அதனால் புகழ் உண்டாக வாழ்க; அது அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை-அப்புகழ் அல்லது மக்கள் உயிர்க்குப் பயன் பிறிது ஒன்று இல்லை ஆகலான்.
விளக்கம்:
(இசைபட வாழ்தற்குக் கல்வி, ஆண்மை முதலிய பிற காரணங்களும் உளவேனும், "உணவின் பிண்டம் உண்டி முதற்று" (புறநா.18) ஆகலின், ஈதல் சிறந்தது என்பதற்கு ஞாபகமாக 'ஈதல்' என்றார். 'உயிர்க்கு என்பது, பொதுபடக் கூறினாரேனும், விலங்கு உயிர்கட்கு ஏலாமையின், மக்கள் உயிர்மேல் நின்றது.)
மணக்குடவர் உரை புகழாவது புகழ்பட வாழ்தல். (இதன் பொருள்) புகழ்பட வாழ்தலாவது கொடுத்தல் ; அக்கொடையானல்லது உயிர்க்கு இலாபம் வேறொன்றில்லை,
(என்றவாறு). இது புகழுண்டாமாறு கூறிற்று.
232

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்

The speech of all that speak agrees to crown
The men that give to those that ask, with fair renown.

புகழ்ந்து சொல்கின்றவர்‌ சொல்பவை எல்லாம்‌ வறுமையால்‌ இரப்பவர்க்கு ஒரு பொருள்‌ கொடுத்து உதவுகின்றவரின்‌ மேல்‌ நிற்கின்ற புகழேயாகும்‌.

Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor.

பரிமேலழகர் உரை உரைப்பார் உரைப்பவை எல்லாம்-உலகத்து ஒன்று உரைப்பார் உரைப்பன எல்லாம்; இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ்-வறுமையான் இரப்பார்க்கு அவர் வேண்டியது ஒன்றை ஈவார் கண் நிற்கும் புகழாம்.
விளக்கம்:
('புகழ்தான் உரையும் பாட்டும் என இருவகைப்படும்.' (புறநா. 27.) அவற்றுள் 'உரைப்பார் உரைப்பவை' என எல்லார்க்கும் உரிய வழக்கினையே எடுத்தாராயினும், இனம் பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளும் கொள்ளுப்படும்; படவே, 'பாடுவார் பாடுவன எல்லாம் புகழாம்' என்பதூஉம் பெற்றாம். ஈதற்காரணம் சிறந்தமை இதனுள்ளும் காண்க இதனைப் 'பிறர்மேலும் நிற்கும்' என்பார், 'தாம் எல்லாம் சொல்லுக; புகழ் ஈவார்மேல் நிற்கும்' என்று உரைப்பாரும் உளர். அது புகழது சிறப்பு நோக்காமை அறிக.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) சொல்லுவார் சொல்லுவனவெல்லாம், இரந்து வந்தார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பார் மேல் நில்லாநின்ற புகழாம்,
(என்றவாறு).
233

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்

Save praise alone that soars on high,
Nought lives on earth that shall not die.

உயர்ந்த புகழ்‌ அல்லாமல்‌ உலகத்தில்‌ ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல்‌ நிலைநிற்க வல்லது வேறொன்றும்‌ இல்லை.

There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness.

பரிமேலழகர் உரை ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால் - தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லது; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்-உலகத்து இறவாது நிற்பது பிறிதொன்று இல்லை.
விளக்கம்:
(இணை இன்றாக ஓங்குதலாவது: கொடுத்தற்கு அரிய உயிர் உறுப்புப் பொருள்களைக் கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி 'ஒன்றா' என்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒரு தலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் புகழது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உயர்ந்த புகழல்லது இணை யின்றாக உலகத்துக் கெடாது நிற்பது பிறிதில்லை,
(என்றவாறு). இது புகழ் மற்றுள்ள பொருள் போலன்றி அழியாது நிற்கு மென்றது.
234

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு

If men do virtuous deeds by world-wide ample glory crowned,
The heavens will cease to laud the sage for other gifts renowned.

நிலவுலகின்‌ எல்லையில்‌ நெடுங்காலம்‌ நிற்கவல்ல புகழைச்‌ செய்தால்‌, வானுலகம்‌ (அவ்வாறு புகழ்‌ செய்தாரைப்‌ போற்றுமே அல்லாமல்‌) தேவரைப்‌ போற்றாது.

If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world.

பரிமேலழகர் உரை நிலவரை நீள் புகழ் ஆற்றின்-ஒருவன் நில எல்லைக் கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச் செய்யுமாயின்; புத்தேள் உலகு புதல்வரைப் போற்றாது-புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது.
விளக்கம்:
(புகழ் உடம்பான் இவ்வுலகும், புத்தேள் உடம்பான். அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், 'புலவரைப் போற்றாது' என்றார். அவன் இரண்டு உலகும் ஒருங்கு எய்துதல், ''புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவாவான ஊர்தி, எய்துப என்பதம் செய்வினை முடித்து" (புறநா. 27)எனப் பிறராலும் சொல்லப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவன் நிலத்தெல்லையின்கண்ணே நெடிய புகழைச் செய்வ னாயின், தேலருலகம் புலவரைப் போற்றாது இவனைப் போற்றும்,
(என்றவாறு). புலவரென்றார் தேவரை; அவர் புலனுடையாராதலான். இது புகழ் செய்தால் ரைத் தேவருலகம் போற்று மென்றது.
235

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது

Loss that is gain, and death of life’s true bliss fulfilled,
Are fruits which only wisdom rare can yield.

புகழுடம்பு மேம்படுதலாகும்‌ வாழ்வில்‌ கேடும்‌, புகழ்‌ நிலை நிற்பதாகும்‌ சாவும்‌, அறிவில்‌ சிறந்தவர்க்கு அல்லாமல்‌ மற்றவர்க்கு இல்லை.

Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise.

பரிமேலழகர் உரை நத்தம் (ஆகும்) கேடும் - புகழுடம்பிற்கு ஆக்கமாகுங் கேடும்; உளது ஆகும் சாக்காடும் - புகழுடம்பு உளதாகும் சாக்காடும்; வித்தகர்க்கு அல்லால் அரிது - சதுரப்பாடுடையார்க்கு அல்லது இல்லை.
விளக்கம்:
('நந்து' என்னும் தொழிற்பெயர் விகாரத்துடன் 'நத்து' என்றாய், பின் 'அம்' என்னும் பகுதிப் பொருள் விகுதிபெற்று, 'நத்தம்' என்று ஆயிற்று. 'போல்' என்பது ஈண்டு உரையசை. 'ஆகும்' என்பதனை முன்னும் கூட்டி, 'அரிது' என்பதனைத் தனித்தனி கூட்டி உரைக்க. ஆக்கமாகும் கேடாவது, புகழ் உடம்பு செல்வம் எய்தப் பூத உடம்பு நல்கூர்தல். உளதாகும் சாக்காடாவது, புகழ் உடம்பு நிற்கப் பூத உடம்பு இறத்தல். நிலையாதனவற்றான் நிலையின் எய்துவார் வித்தகர் ஆகலின், 'வித்தகர்க்கு அல்லால் அரிது' என்றார். இவை இரண்டு பாட்டானும் புகழ் உடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஆக்கம் போலக் கேடும் உள தானாற்போலச் சாதலும் வல்லவர் கல்லது அரிது,
(என்றவாறு). இது புகழ்பட வாழ்தல் மக்களெல்லார்க்கும் அரிதென்றது.
236

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

If man you walk the stage, appear adorned with glory’s grace;
Save glorious you can shine, ‘twere better hide your face.

ஒரு துறையில்‌ முற்பட்டுத்‌ தோன்றுவதானால்‌ புகழோடு தோன்ற வேண்டும்‌; அத்தகைய சிறப்பு இல்லாதவர்‌ அங்குத்‌ தோன்றுவதைவிடத்‌ தோன்றாமலிருப்பது நல்லது.

If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born.

பரிமேலழகர் உரை தோன்றின் புகழொடு தோன்றுக-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; அஃது இலார் தோன்றலின் தோன்றாமை நன்று - அக்குணம் இல்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று.
விளக்கம்:
(புகழ்; ஈண்டு ஆகுபெயர். 'அஃது இலார்' என்றமையின் மக்களாய் என்பதூஉம், 'மக்களாய்ப் பிறவாமை' என்ற அருத்தாபத்தியான் 'விலங்காய்ப் பிறத்தல்' என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க ; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று,
(என்றவாறு) இது புகழ்பட வாழவேண்டு மென்றது.
237

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்

If you your days will spend devoid of goodly fame,
When men despise, why blame them? You’ve yourself to blame.

தமக்குப்‌ புகழ்‌ உண்டாகுமாறு வாழமுடியாதவர்‌ தம்மைத்‌ தாம்‌ நொந்துகொள்ளாமல்‌ தம்மை இகழ்கின்றவரை நொந்துக்கொள்ளக்‌ காரணம்‌ என்ன?

Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.

பரிமேலழகர் உரை புகழ்பட வாழாதார் - தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார்; தம் நோவார்-அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி 'இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது' என்று தம்மை நோவாதே; தம்மை இகழ்வாரை நோவது எவன்-தம்மை இகழ்வாரை நோவது என் கருதி?
விளக்கம்:
(புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின், 'இகழ்வாரை' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) புகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது தம்மை யிகழ் வாரை நோகின்றது யாதினுக்கு?
(என்றவாறு). இது புகழ்பட வாழமாட்டாதார் இகழப்படுவரென்றது.
238

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்

Fame is virtue’s child, they say; if, then,
You childless live, you live the scorn of men.

தமக்குப்‌ பின்‌ எஞ்சி நிற்பதாகிய புகழைக்‌ பெறாவிட்டால்‌ உலகத்தார்‌ எல்லார்க்கும்‌ அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்‌.

Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.

பரிமேலழகர் உரை இசை என்னும் எச்சம் பெறாவிடின்-புகழ் என்னும் எச்சம் பெறலாயிருக்க, அது பெறாது ஒழிவராயின்; வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப - வையகத்தோர்க்கு எல்லாம் அதுதானே வசை என்று சொல்லுவர் நல்லோர்.
விளக்கம்:
('எச்சம்' என்றார். செய்தவர் இறந்து போகத்தான் இறவாது நிற்றலின். இகழப்படுதற்குப் பிறிதொரு குற்றம் வேண்டா என்பது கருத்து.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உலகத்தார்க்கெல்லாம் புகழாகிய ஒழிபு பெறாவிடின், அப் பெறாமைதானே வசையாமென்று சொல்லுவா, (எ - று ) மேல் புகழில்லாதாரை யிகழ்ப் வென்றார் அவர் குற்றமில்லாராயின் இகழப் படுவரோவென்றார்க்கு வேறு குற்றம் வேண்டா; புகழின்மைதானே யமையும் மென்றார்.
239

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்

The blameless fruits of fields’ increase will dwindle down,
If earth the burthen bear of men without renown.

புகழ்‌ பெறாமல்‌ வாழ்வைக்‌ கழித்தவருடைய உடம்பைச்‌ சுமந்த நிலம்‌, வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல்‌ குன்றிவிடும்‌.

The ground which supports a body without fame will diminish in its rich produce.

பரிமேலழகர் உரை இசைஇலா யாக்கை பொறுத்த நிலம்-புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த நிலம்; வசை இலா வண்பயன் குன்றும்-பழிப்பு இல்லாத வளப்பத்தை உடைய விளையுள் குன்றும்.
விளக்கம்:
(உயிர் உண்டாயினும் அதனால் பயன் கொள்ளாமையின் 'யாக்கை' எனவும், அது நிலத்திற்குப் பொறையாகலின், 'பொறுத்த' எனவும் கூறினார். விளையுள் குன்றுதற்கேது. பாவ யாக்கையைப் பொறுக்கின்ற வெறுப்பு. 'குன்றும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. இவை நான்கு பாட்டானும் புகழ் இல்லாதாரது தாழ்வு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) புகழில்லாத வுடம்பைப் பொறுத்த நிலம் பழியற்ற நல்விளைவு குறையும்,
(என்றவாறு). இது புகழில்லாதானிருந்தவிடம் விளைவு குன்று மென்றது.
240

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

Who live without reproach, them living men we deem;
Who live without renown, live not, though living men they seem.

தாம்‌ வாழும்‌ வாழ்க்கையில்‌ பழி உண்டாகாமல்‌ வாழ்கின்றவரே உயிர்‌ வாழ்கின்றவர்‌; புகழ்‌ உண்டாகாமல்‌ வாழ்கின்றவரே உயிர்‌ வாழாதவர்‌.

Those live who live without disgrace. Those who live without fame live not.

பரிமேலழகர் உரை வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் - தம்மாட்டு வசை உண்டாகாமல் வாழ்வாரே உயிர் வாழ்வாராவார்; இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் - புகழ் உண்டாகாமல் வாழ்வாரே இறந்தார் ஆவார்.
விளக்கம்:
(வசையொழிதலாவது இசை என்னும் எச்சம் பெறுதல் ஆயினமையின்; இசையொழிதலாவது வசை பெறுதலாயிற்று. மேல், 'இசை இலாயாக்கை' என்றதனை விளக்கியவாறு. இதனான் இவ்விரண்டும் உடன் கூறப்பட்டன. மறுமைப்பயன் 'வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' (குறள் 50) என மேலே கூறப்பட்டது. படவே இல்லறத்திற்கு இவ்வுலகில் புகழும், தேவர் உலகில் போகமும் பயன் என்பது பெற்றாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வசையொழிய வாழு மவர்களே உயிர் வாழ்வாராவர்; புகழொழிய வாழ்வாரே உயிர் வாழாதார், (எ - று ). இது புகழில்லார் பிணத்தோ டொப்ப ரென்றது.


transliteration

eethal isaipada vaalthal athuvallathu
oothiyam illai uyirkku

uraippaar uraippavai yellaam irappaarkkonru
eevaarmael nitrkum pukal

onraa ulakaththu uyarndhtha pukalallaal
ponraathu nitrpathon ril

nilavarai neelpukal aatrrin pulavaraip
potrraathu puththael ulaku

naththampol kaedum ulathaakum saakkaadum
viththakark kallaal arithu

thonrin pukalodu thonruka akhthilaar
thonralin thonraamai nanru

pukalpada vaalaathaar thandhnovaar thammai
ikalvaarai novathu yevan

vasaiyaenpa vaiyaththaark kellaam isaiyaennum
yechcham paeraaa vitin

vasaiyilaa vanpayan kunrum isaiyilaa
yaakkai poruththa nilam

vasaiyoliya vaalvaarae vaalvaar isaiyoliya
vaalvaarae vaalaa thavar