Knowledge of the True 36

351

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு

Of things devoid of truth as real things men deem;-
Cause of degraded birth the fond delusive dream!

மெய்ப்பொருள்‌ அல்லாதவைகளை மெய்ப்பொருள்‌ என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால்‌ சிறப்பில்லாத துன்பப்பிறவி உண்டாகும்‌.

Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real.

பரிமேலழகர் உரை பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம் - மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே உளதாம்; மாணாப் பிறப்பு - இன்பம் இல்லாத பிறப்பு.
விளக்கம்:
(அவ் விபரீத உணர்வாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை எனவும், மெய்ந்நூல் வழக்கு எனத் துணிதல். குற்றியை மகன் என்றும் இப்பியை வெள்ளி என்றும் இவ்வாறே ஒன்றனைப் பிறிதொன்றாகத் துணிதலும் அது. 'மருள், மயக்கம், விபரீத உணர்வு, அவிச்சை' என்பன ஒருபொருட் கிளவி. நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறப்பினும் உள்ளது துன்பமே ஆகலின், 'மாணாப் பிறப்பு' என்றார். இதனால், பிறப்புத் துன்பம் என்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சை என்பதூஉம் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை மெய்யுணர்தலாவது எக்காலத்தினும் எவ்விடத்திலும் அழியாது நிற்கும் பொருள் இதுவென வுணர்தல். இது பற்றறத் துறந்தாரது உள்ள நிகழ்ச்சியாத லான், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத் தினாலே உண்டாம்; மாட்சிமையில்லாத பிறப்பு,
(என்றவாறு). இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பனாயின், பிறப்புண்டாமென்றது.
352

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு

Darkness departs, and rapture springs to men who see,
The mystic vision pure, from all delusion free.

மயக்கம்‌ நீங்கிக்‌ குற்றம்‌ அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம்‌ மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்‌ கொடுக்கும்‌.

A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven).

பரிமேலழகர் உரை மருள் நீங்கி மாசு அறு காட்சியவர்க்கு - அவிச்சையின் நீங்கி மெய்யுணர்வுடையர் ஆயினார்க்கு; இருள் நீங்கி இன்பம் பயக்கும் - அம்மெய்யுணர்வு பிறப்பினை நீங்கி வீட்டினைக் கொடுக்கும்.
விளக்கம்:
(இருள்: நரகம்; அஃது ஆகுபெயராய்க் காரணத்தின்மேல் நின்றது. 'நீக்கி' எனத் தொடை நோக்கி மெலிந்து நின்றது; நீங்க என்பதன் திரிபு எனினும் அமையும். 'மருள் நீங்கி' என்னும் வினையெச்சம், 'காட்சியவரென்னும்' குறிப்பு வினைப்பெயர் கொண்டது. 'மாசு அறுகாட்சி' என்றது கேவல உணர்வினை. இதனான் வீடாவது 'நிரதிசய இன்பம்' என்பதூஉம், அதற்கு நிமித்த காரணம் கேவலப் பொருள் என்பதூஉம் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, அறி யாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம்,
(என்றவாறு) இது மெய்யுணர்ந்தார்க்கு வினை விட்டு முத்தியின்ப முண்டாமென்றது.
353

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து

When doubts disperse, and mists of error roll
Away, nearer is heav’n than earth to sage’s soul.

ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகைவிட. அடையவேண்டிய மேலுலகம்‌ அண்மையில்‌ உள்ளதாகும்‌.

Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt.

பரிமேலழகர் உரை ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு - ஐயத்தினின்று நீங்கி உணர்ந்தார்க்கு; வையத்தின் வானம் நணியது உடைத்து - எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து.
விளக்கம்:
(ஐயமாவது, பல தலையாய உணர்வு. அஃதாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் உளவோ இலவோ என ஒன்றில் துணிவு பிறவாது நிற்றல்; 'பேய்த்தேரோ புனலோ? கயிறோ அரவோ?' எனத் துணியாது நிற்பதும் அது. ஒருவாற்றான் பிறர் மதம் களைந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பு ஆகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோகமுதிர்ச்சி உடையார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வார் ஆகலின், அவரை 'ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்' என்றும், அவர்க்கு அவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியல் உணர்வு தூர்ந்துவரும் ஆகலின், அதனைப் பயன் மேலிட்டு 'வையத்தின் வானம் நணியதுடைத்து' என்றும் கூறினார்; கூறவே, ஐய உணர்வும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு, இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மை யுடைத்து,
(என்றவாறு). துணிந்த அறிவின்கண்ண து எல்லாவுலகுமாதலின், அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்கு தோற்றுதலின், நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ் விடமும் அறியுமென்றது.
354

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு

Five-fold perception gained, what benefits accrue
To them whose spirits lack perception of the true?

மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஜந்து புலன்களின்‌ வேறுபாட்டால்‌ வளர்ந்த ஐந்துவகை உணர்வும்‌ முற்றப்பெற்ற போதிலும்‌ பயன்‌ இல்லை.

Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things.

பரிமேலழகர் உரை ஐ உணர்வு எய்தியக்கண்ணும் பயம் இன்றே - சொல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றைவிட்டுத் தம் வயத்ததாய வழியும், அதனால் பயனில்லையேயாம்; மெய்யுணர்வு இல்லாதவர்க்கு - மெய்யினையுணர்தல் இல்லாதார்க்கு.
விளக்கம்:
(ஐந்தாகிய உணர்வு: மனம். அஃது எய்துதலாவது, மடங்கி ஒரு தலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல். அங்ஙனம் நின்ற வழியும் வீடு பயவாமையின், 'பயம் இன்று' என்றார். சிறப்பு உம்மை எய்துதற்கு அருமை விளக்கி நின்றது. இவை இரண்டு பாட்டானம் மெய்யுணர்வு உடையார்க்கே வீடு உளது என மெய் உணர்வின் சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப்படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும், அதனான் ஒருபய னுண்டாகாது; உண்மையை யறியும் அறிய விலாதார்க்கு ,
(என்றவாறு).
355

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

Whatever thing, of whatsoever kind it be,
‘Tis wisdom’s part in each the very thing to see.

எப்பொருள்‌ எத்தன்மையதாய்த்‌ தோன்றினாலும்‌ (அத்‌ தோற்றத்தை மட்டும்‌ கண்டு மயங்காமல்‌) அப்பொருளின்‌ உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்‌.

(True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing.

பரிமேலழகர் உரை எப்பொருள் எத்தன்மையத்து ஆயினும் - யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும்; அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு . அத்தோன்றிய ஆற்றைக் கண்டொழியாது, அப்பொருளின்கண் நின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய் உணர்வாவது.
விளக்கம்:
(பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக் கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்ற உண்மையைக் காண்பது என்றவாறாயிற்று. அஃதாவது, 'கோச்சேரமான் யானைக் கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை' என்றவழி, அரசன் என்பதோர் சாதியும், சேரமான் என்பதொரு குடியும் , வேழ நோக்கினையுடையான் என்பதோர் வடிவும், சேய் என்பதோர் இயற்பெயரும், மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பதோர் சிறப்புப் பெயரும், ஒரு பொருளின் கண் கற்பனை ஆகலின், அவ்வாறு உணராது, நிலம் முதல் உயிர் ஈறாகிய தத்துவங்களின் தொகுதி என உணர்ந்து, அவற்றை நிலம் முதலாகத் தத்தம் காரணங்களுள் ஒடுக்கிக் கொண்டு சென்றால், காரணகாரியங்கள் இரண்டும் இன்றி முடிவாய் நிற்பதனை உணர்தலாம். 'எப்பொருள்' என்ற பொதுமையான், இயங்குதினையும நிலைத்திணையும் ஆகிய பொருள்கள் எல்லாம் இவ்வாறே உணரப்படும். இதனான், மெய் உணர்வினது இலக்கணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யாதொரு பொருள் யாதொரு தன்மைத்தாயினும், அப்பொருளி னுடைய வுண்மையைத் தான் உண்மையாகக் காண்பது யாதொன்று அஃது அறிவாம்,
(என்றவாறு). மெய்யென்பதூஉம் அறிவென்பதாஉம் ஒன்று ; என்னை? எக்காலத்தும் எவ் விடத்தும் ஒரு தன்மையாக அழியாது நிற்றலின், மெய்யாயிற்று; எல்லாப் பொருளையுங் காண்டலால், அறிவாயிற்று.
356

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி

Who learn, and here the knowledge of the true obtain,
Shall find the path that hither cometh not again.

கற்க வேண்டியவற்றைக்‌ கற்று, இங்கு மெய்ப்‌ பொருளை உணர்ந்தவர்‌; மீண்டும்‌ இப்‌ பிறப்பிற்கு வாராத வழியை அடைவர்‌.

They, who in this birth have learned to know the True Being, enter the road which returns not into this world.

பரிமேலழகர் உரை ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடையதேசிகர்பால் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர்; மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர்.
விளக்கம்:
('கற்று' என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும் பெற்றாம். ஈண்டுவாரா நெறி வீட்டு நெறி. வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று; அவை, கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள் கேள்வி இதனால் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்து தெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை,
(என்றவாறு). கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.
357

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

The mind that knows with certitude what is, and ponders well,
Its thoughts on birth again to other life need not to dwell.

ஒருவனுடைய உள்ளம்‌ உண்மைப்‌ பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால்‌, அவனுக்கு மீண்டும்‌ பிறப்பு உள்ளதென எண்ண வேண்டா.

Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being.

பரிமேலழகர் உரை உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின் - அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை, ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய ஆராய்ந்து அதனான் முதற்பொருளை உணருமாயின்; பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா - அவனுக்கு மாறிப் பிறப்புளதாக நினைக்க வேண்டா.
விளக்கம்:
('ஒருதலையா ஓர்த்து' என இயையும். அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே உரைத்தாம். இதனான் விமரிசம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உள்ளமானது உள்ள பொருளை யாராய்ந்து ஒருதலையாக வுணரு மாயின், பின்னைப் பிறப்புண்டென்று நினையாதொழிக,
(என்றவாறு) மெய்யுணர்ந்தவர் பிறப்புண்டென்று நினையாதொழிக வென்றவாறு.
358

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு

When folly, cause of births, departs; and soul can view
The truth of things, man’s dignity- ‘tis wisdom true.

பிறவித்‌ துன்பத்திற்குக்‌ காரணமான அறியாமை நீங்குமாறு, முத்தி என்னும்‌ சிறந்த நிலைக்குக்‌ காரணமான செம்பொருளைக்‌ காண்பதே மெய்யுணர்வு.

True knowledge consists in the removal of ignorance; which is (the cause of) births, and the perception of the True Being who is (the bestower of) heaven.

பரிமேலழகர் உரை பிறப்பு என்னும் பேதைமை நீங்க - பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை கெட; சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு - வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய் உணர்வாவது.
விளக்கம்:
(பிறப்பென்னும் பேதைமை' எனவும், 'சிறப்பு என்னும் செம்பொருள்' எனவும் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். ஐவகைக் குற்றங்களுள்அவிச்சை ஏனைய நான்கிற்கும் காரணமாதல் உடைமையின், அச் சிறப்புப் பற்றி அதனையே பிறப்பிற்குக் காரணமாகக் கூறினார். எல்லாப் பொருளினும் சிறந்ததாகலான், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. தோற்றக் கேடுகள் இன்மையின் நித்தமாய், நோன்மையால் தன்னையொன்றும் கலத்தல் இன்மையின் தூய்தாய், தான் எல்லாவற்றையும் கலந்து நிற்கின்ற முதற் பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி, அதனைச் 'செம்பொருள்' என்றார். மேல் 'மெய்ப்பொருள்' எனவும், 'உள்ளது' எனவும் கூறியதூஉம் இது பற்றி என உணர்க. அதனைக் காண்கையாவது உயிர் தன் அவிச்சை கெட்டு அதனோடு, ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல்; இதனைச் 'சமாதி' எனவும், 'சுக்கிலத்தியானம்' எனவும் கூறுப. உயிர் உடம்பின் நீங்கும் காலத்து அதனான் யாதொன்று பாவிக்கப்பட்டது. அஃது அதுவாய்த் தோன்றும் என்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபு ஆகலின், வீடு எய்துவார்க்கு அக்காரத்துப் பிறப்பிற்கு ஏதுவாய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப் பொருளையே பாவித்தல் வேண்டுதலான், அதனை முன்னே பயில்தலாய இதனின் மிக்க உபாயம் இல்லை என்பது அறிக. இதனான் பாவனை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்), பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் , பிறவாமையாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம்,
(என்றவாறு). பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாக வும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத், தனக்குச் சாவில்லை யாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டு மென்றவா-றாயிற்று.
359

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்

The true ‘support’ who knows- rejects ‘supports’ he sought before-
Sorrow that clings all destroys, shall cling to him no more.

எல்லாப்‌ பொருளுக்கும்‌ சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக்‌ கெடுமாறு ஒழுகினால்‌, சார்வதற்கு உரிய துன்பங்கள்‌ திரும்ப வந்து அடையா.

He who so lives as to know Him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption).

பரிமேலழகர் உரை சார்பு உணர்ந்து சார்புகெட ஒழுகின் - ஒருவன் எல்லாப் பொருட்கும் சார்பாய அச்செம்பொருளை உணர்ந்து, இருவகைப் பற்றும் அற ஒழுகவல்லனாயின்; சார்தரும் நோய் அழித்து மற்றுச் சார்தரா - அவனை முன் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வுணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் சாரமாட்டா.
விளக்கம்:
(ஆகுபெயரால் சாரும் இடத்தையும் சார்வனவற்றையும் 'சார்பு' என்றார். 'ஈண்டு' ஒழுக்கம் என்றது யோகநெறி யொழுகுதலை. அஃது இயமம், நியமம், இருப்பு, உயிர் நிலை, மன ஒடுக்கம், தாரணை, தியானம், சமாதி என எண்வகைப்படும். அவற்றின் பரப்பெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும்; யோக நூல்களுள் காண்க. 'மற்றுச் சார்தரா' என இயையும். சாரக்கடவனவாய் நின்ற துன்பங்களாவன - பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் பிறந்த உடம்பான் முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் அனுபவிக்கக் கடவனவாய்க் கிடந்தன.அவை விளக்கின்முன் இருள்போல ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான், 'அழித்துச் சார்தரா' என்றார். இதனை ஆருகதர் 'உவர்ப்பு' என்ப. பிறப்பிற்குக் காரணம் ஆகலான், நல்வினைப் பயனும் 'நோய்' எனப்பட்டது. மேல் மூன்று உபாயத்தானும் பரம்பொருளை உணரப் பிறப்பு அறும் என்றார். அஃது அறும்வழிக் கிடந்த துன்பங்கள் எல்லாம் என் செய்யும் என்னும் கடாவை ஆசங்கித்து, அவை ஞான யோகங்களின் முதிர்ச்சி உடைய உயிரைச் சாராமாட்டாமையானும், வேறு சார்பு இன்மையானும் 'கெட்டு விடும்' என்பது, இதனால் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தன்னைச் சார்வனவற்றையறிந்து அவையிற்றின் சார்வுகெட் ஒழுகுவனாயின், அவ்வொழுக்கத்தினையழித்துச் சார்தலைச் செய்யா; சாரக்கடவன வாய துன்பங்கள்,
(என்றவாறு). சார்பு - வினைச் சார்பு; கெட ஒழுகல் - காமம் வெகுளி மயக்கமின்றி மெய் யுணர்ச்சியானொழுகுதல். இஃது உண்மையைக் கண்டு அக்காட்சியைத் தப்பா மல் முடிய நிற்பனாயின், சாரக்கடவதாய் நிற்கின்ற வினை சாராதே விட்டுப்போ மென்றது.
360

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்

When lust and wrath and error’s triple tyranny is o’er,
Their very names for aye extinct, then pain shall be no more.

விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக்குற்றங்கள்‌ மூன்றனுடைய பெயரும்‌ கெடுமாறு ஒழுகினால்‌ துன்பங்கள்‌ வாராமற்‌ கெடும்‌.

If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish the evils (which flow from them).

பரிமேலழகர் உரை காமம் வெகுளி மயக்கம் இவை முன்றன் நாமம் கெட ஞான யோகங்களின் முதிர்ச்சியுடையார்க்கு விழைவு, வெறுப்பு, அவிச்சை என்னும் இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயருங்கூடக் கெடுதலான்; நோய் கெடும் - அவற்றின் காரியமாய வினைப்பயன்கள் உளவாகா.
விளக்கம்:
(அநாதியாய அவிச்சையும், அதுபற்றி 'யான்' என மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி, 'எனக்கு இது வேண்டும்' என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கண் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கண் செல்லும் கோபமும், எண வடநூலார் குற்றம் ஐந்து என்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவுதல் ஆசைக்கண்ணும் அடங்குதலான், 'மூன்று' என்றார். இடையறாத ஞானயோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத் தீ முன்னர்ப் பஞ்சுத் துய்போலும் ஆகலின், அம் மிகுதிதோன்ற 'இவை மூன்றின் நாமங்கெட' என்றார். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'கெட' என்பது எச்சத் திரிபு. 'நோய்' என்பது சாதியொருமை. காரணமாய அக்குற்றங்களைக் கெடுத்தார் காரியமாகிய வினைகளைச் செய்யாமையின், அவர்க்கு வரக்கடவ துன்பங்களும் இலவாதல் மெய்உணர்வின்பயன் ஆகலின், இவை இரண்டு பாட்டும் இவ்வதிகாரத்த வாயின. இவ்வாற்றானே மெய்யுணர்ந்தார்க்கு நிற்பன எடுத்த உடம்பும் அதுகொண்ட வினைப்பயன்களுமே என்பது பெற்றாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஆசையும் வெகுளியும் மயக்கமு மென்னும் இவை மூன்றினது நாமம்போக, வினைபோம், (எ - ற) வினைகெடுதற்கு வழி இதுவென்று கூறுதலான், இது மெய்யுணர்த லாயிற்று.


transliteration

porulalla vatrraip porulaenru unarum
marulaanaam maanaap pirappu

irulneengki inpam payakkum marulneengki
maacharu kaachi yavarkku

aiyaththin neengkith thaelindhthaarkku vaiyaththin
vaanam naniya thutaiththu

aiyunarvu yeithiyak kannum payaminrae
maeiyunarvu illaa thavarkku

yepporul yeththanmaith thaayinum apporul
maeipporul kaanpathu arivu

katrreendu maeipporul kantaar thalaippaduvar
matrreendu vaaraa naeri

oarththullam ullathu unarin oruthalaiyaap
paerththulla vaentaa pirappu

pirappaennum paethaimai neengkachiirappaennum semporul
semporul kaanpathu arivu

saarpunarndhthu saarpu kedaolukin matrraliththuch
saartharaa saartharu noi

kaamam vaekuli mayakkam ivaimoonran
naamam kedakkedum noi