குறள் 926

கள்ளுண்ணாமை

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

thuchinaar seththaarin vaerallar yenjgnyaanrum
nanjsunpaar kallun pavar


Shuddhananda Bharati

Not drinking liquor

They take poison who take toddy
And doze ev'n like a dead body.


GU Pope

Not Drinking Palm-Wine

Sleepers are as the dead, no otherwise they seem;
Who drink intoxicating draughts, they poison quaff, we deem.

They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters.


Mu. Varadarajan

உறங்கினவர்‌, இறந்தவரைவிட வேறுபட்டவர்‌ அல்லர்‌; அவ்வாறே கள்ளுண்பவரும்‌ அறிவு மயங்குதலால்‌ நஞ்சு உண்பவரே ஆவர்‌.


Parimelalagar

துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர்-உறங்கினார் செத்தாரின் வேறாதல் உடையரேனும், அக்காலத்து அறிவின்மையான் வேறு எனப்படார்; கள் உண்பவர் எஞ்ஞான்றும் நஞ்சு உண்பார்-அவ்வாறே கள்ளுண்பார் நஞ்சுண்பாரின் வேறாதல் உடையரேனும், எக்காலத்தும் அறிவின்மையான் வேறு எனப்பட்டார்; அவர்தாமே யாவர்.
விளக்கம்:
(உறங்கினார்க்கும் கள்உண்பார்க்கும் வேற்றுமை உயிர்ப்பு நிற்றல். வேறாதலும் வேறன்மையும் உடைமை காட்டற்கு உவமை புணர்க்கப்பட்டது. இதனை நிரல்நிரை யாக்கி, 'திரிக்கப்படுதலால் உறங்கினாரும் நஞ்சுண்பாரும் ஒப்பர்; கைவிடப்படுதலான் செத்தாரும் கள்உண்பாரும் ஒப்பர்' என்று உரைப்பாரும் உளர். அதிகாரப்பொருள் பின்னதாயிருக்க, யாதும் இயைபில்லாத நஞ்சுண்பார்க்கு உவமை புணர்த்து ஈண்டுக்கூறல் பயனின்றாகலானும், சொற்கிடக்கை நிரல் நிரைக்கு ஏலாமையானும், அஃது உரையன்மை அறிக. இவை இரண்டு பாட்டானும் அவரது அறிவிழத்தற் குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) உறங்கினார் செத்தாரோடு ஒப்பர்; அறிவிழத்தலான், அது போல், எல்லா நாளும் கள்ளுண்பார் நஞ்சுண்பவரோடு ஒப்பர்; மயங்குதலான், இஃது அறிவிழப்பரென்றது.