குறள் 1039

உழவு

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்

sellaan kilavan iruppin nilampulandhthu
illaalin ooti vidum


Shuddhananda Bharati

Farming

If landsmen sit sans moving about
The field like wife will sulk and pout.


GU Pope

Agriculture

When master from the field aloof hath stood;
Then land will sulk, like wife in angry mood.

If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure.


Mu. Varadarajan

நிலத்திற்கு உரியவன்‌ நிலத்தைச்‌ சென்று பார்க்காமல்‌ வாளா இருந்தால்‌, அந்நிலம்‌ அவனுடைய மனைவியைப்‌ போல்‌ வெறுத்து அவனோடு பிணங்கி விடும்‌.


Parimelalagar

கிழவன் செல்லான் இருப்பின் - அந்நிலத்திற்குரியவன் அதன் கண் நாள்தோறும் சென்று பார்த்து அடுத்தன செய்யாது மடிந்திருக்குமாயின்; நிலம் இல்லாளின் புலந்து ஊடிவிடும் - அஃது அவன் இல்லாள் போலத் தன்னுள்ளே வெறுத்துப் பின் அவனோடு ஊடிவிடும்.
விளக்கம்:
(செல்லுதல் - ஆகுபெயர். பிறரை ஏவியிராது தானே சேறல் வேண்டும் என்பது போதர, 'கிழவன்' என்றார். தன்கண் சென்று வேண்டுவன செய்யாது வேறிடத்திருந்தவழி மனையாள் ஊடுமாறுபோல என்றது அவன் போகம் இழத்தல் நோக்கி, இவை மூன்று பாட்டானும் அது செய்யுமாறு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) நிலத்திற்கு உரியவன் நாடோறும் அந்நிலத்தின்பாற் செல்லாது மனையகத்திருப்பனாயின், அது தான் செல்லாமையாற் புலந்த இல்லாளைப் போலப் புலந்துவிடும்,
(என்றவாறு). இது நாடோறுஞ் சென்று பார்க்க வேண்டுமென்றது.