குறள் 1007

நன்றியில்செல்வம்

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று

atrraarkkonru aatrraathaan selvam mikanalam
paetrraal thamiyalmooth thatrru


Shuddhananda Bharati

Futile wealth

Who loaths to help have-nots, his gold
Is like a spinster-belle grown old.


GU Pope

Wealth without Benefaction

Like woman fair in lonelihood who aged grows,
Is wealth of him on needy men who nought bestows.

The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband.


Mu. Varadarajan

பொருள்‌ இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள்‌ கொடுத்து உதவாதவனுடைய செல்வம்‌, மிக்க அழகு பெற்றவள்‌ தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற்‌ போன்றது.


Parimelalagar

அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் - ஒரு பொருளும் இலராயினார்க்கு அவர் வேண்டியதொன்றனைத் கொடாதானது செல்வம் கொன்னே கழிதல்; மிகநலம் பெற்றாள் தமியள் மூத்தற்று - பெண்டிரின் மிக்க நலத்தினைப் பெற்றாளொருத்தி கொடுப்பாரின்மையின் கொழுநன் இன்றித் தமியளாய் மூத்த தன்மைத்து.
விளக்கம்:
(நலம் - வடிவின் நன்மையும் குணத்தின் நன்மையும். இரண்டும் ஒருங்கு பெறுதல் அரிதாகலின், 'பெற்றாள்' என்றார். கொடுப்பாரும் கொழுநனுமேயன்றித் தானும் பயன் இழந்து கழிந்த குமரியோடு உவமை கூறினமையின், தானும் ஏற்பானுமேயன்றிச் செல்வமும் பயனிழந்து கழியும் என்பதாயிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) பொருளற்றார்க்கு யாதானு மொன்றைக் கொடாதவனுடைய செல்வம், மிக்க அழகினைப் பெற்றாளொருத்தி தனியளாய் முதிர்ந்தாற்போலும். இது செல்வம் தானும் ஒரு பயன் பெறாதென்றது.