குறள் 2

கடவுள் வாழ்த்து

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

katrrathanaal aaya payanaenkol vaalarivan
natrraal tholaaar yenin


Shuddhananda Bharati

The praise of God

That lore is vain which does not fall
At His good feet who knoweth all.


GU Pope

The Praise of God

No fruit have men of all their studied lore,
Save they the 'Purely Wise One's' feet adore.

What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?


Mu. Varadarajan

தூய அறிவு வடிவாக விளங்கும்‌ இறைவனுடைய நல்ல திருவடிகளைத்‌ தொழாமல்‌ இருப்பாரானால்‌, அவர்‌ கற்ற கல்வியினால்‌ ஆகிய பயன்‌ என்ன?


Parimelalagar

கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?
விளக்கம்:
('எவன்' என்னும் வினாப்பெயர் 'என்' என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனா னாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின்,
(என்றவாறு). சொல்லினானே பொரு ளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய் யுணர்ந்து வீடு பெறலாகும் , மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறு வேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. "கற்பக் கழிமட மஃகும்'' என்றாரு முளர்.