Courtesy 100

991

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு

Who easy access give to every man, they say,
Of kindly courtesy will learn with ease the way.

பண்பு உடையவராக வாழும்‌ நல்வழியை, யாரிடத்திலும்‌ எளிய செல்வியுடன்‌ இருப்பதால்‌ அடைவது எளியது என்று கூறுவர்‌.

If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness.

பரிமேலழகர் உரை யார் மாட்டும் எண்பதத்தால் - யாவர் மாட்டும் எளிய செவ்வியராதலால்; பண்புடைமை என்னும் வழக்கு எய்தல் எளிது என்ப - அரிதாய பண்புடைமை என்னும் நன்னெறியினை எய்துதல் எளிது என்று சொல்லுவர் நூலோர்.
விளக்கம்:
(குணங்களால் நிறைந்து செவ்வி எளியரும் ஆயக்கால் பண்புடைமை தானே உளதாம் ஆகலின், 'எண்பதத்தால் எய்தல் எளிது' என்றும், அஃது உலகத்தையெல்லாம் வசீகரித்தற் பயத்ததாகலின், அதனைத் தொல்லோர் சென்ற நன்னெறி யாக்கியும், அதனை எளிதின் எய்துதற்கு இது நூலோர் ஓதிய உபாயம் என்பார், அவர் மேல் வைத்தும் கூறினார்.) --
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யாவர் மாட்டு மெளிய செவ்வியராதலால் அரிதாய பண்புடை மையென்னும் நன்னெறியினை யெய்துதல் எளிதென்று சொல்லுவர் நூலோர்.
992

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு

Benevolence and high born dignity,
These two are beaten paths of courtesy.

அன்புடையவராக இருத்தல்‌, உயர்ந்த குடியில்‌ பிறந்த தன்மை அமைந்திருத்தல்‌ ஆகிய இவ்விரண்டும்‌ பண்பு உடையவராக வாழும்‌ நல்வழியாகும்‌.

Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all.

பரிமேலழகர் உரை அன்பு உடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் - பிறர் மேல் அன்பு உடையனாதலும் உலகத்தோடு அமைந்த குடியின்கண் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும்; பண்பு உடைமை என்னும் வழக்கு - ஒருவனுக்குப் பண்பு உடைமை என்று உலகத்தார் சொல்லும் நன்னெறி.
விளக்கம்:
(அமைதல் - ஒத்து வருதல். 'குடிப்பிறத்தல்' என்றது பிறந்தார் செயலை. தனித்த வழி ஆகாது இரண்டும் கூடிய வழியே ஆவதென்பது தோன்ற, முற்றும்மை கொடுத்தார். காரணங்கள் காரியமாக உபசரிக்கப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் பண்பு உடையார் ஆதற் காரணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிறர்மேலன்புடையனாதலும் உலகத்தோடமைந்த குடியின் கட் பிறத்தலுமாகிய இவ்விரண்டும், ஒருவனுக்குப் பண்புடைமையென்று உலகத் தார் சொல்லும் நன்னெறி,
(என்றவாறு).
993

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு

Men are not one because their members seem alike to outward view;
Similitude of kindred quality makes likeness true.

உடம்பால்‌ ஒத்திருத்தல்‌ மக்களோடு ஒப்புமை அன்று; பொருந்தத்தக்க பண்பால்‌ ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்‌.

Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract.

பரிமேலழகர் உரை உறுப்பு ஒத்தல் மக்கல் ஒப்பு அன்று - செறியத்தகாத உடம்பால் ஒத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடு ஒப்பாகாமையின் அது பொருந்துவதன்று; ஒப்பதாம் ஒப்பு வெறுத்தக்க பண்பு ஒத்தல் - இனிப் பொருந்துவதாய ஒப்பாவது செறியத்தக்க பண்பால் ஒத்தல்.
விளக்கம்:
(வடநூலார் 'அங்கம்' என்றமையின் 'உறுப்பு' என்றார். ஒருவனுக்கு நன் மக்களோடு பெறப்படும் ஒப்பாவது, உயிரின் வேறாய் நிலையுதல் இல்லா உடம்பு ஒத்தல் அன்று; வேறன்றி நிலையுதலுடைய பண்பு ஒத்தலாகலான், அப்பெற்றித்தாய அவர் பண்பினையுடையன் ஆக என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) செறியத்தகாத உடம்பாலொத்தல் ஒருவனுக்கு நன்மக்களோ டொப்பாகாமையின், அது பொருந்துவதன்று; இனிப் பொருந்துவதாய வொப் பாவது செறியத்தக்க பண்பாலொத்தல்,
(என்றவாறு).
994

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு

Of men of fruitful life, who kindly benefits dispense,
The world unites to praise the ‘noble excellence.’

நீதியையும்‌ நன்மையையும்‌ விரும்பிப்‌ பிறர்க்குப்‌ பயன்‌ பட வாழும்‌ பெரியோரின்‌ நல்ல பண்பை உலகத்தார்‌ போற்றிக்‌ கொண்டாடுவர்‌.

The world applauds the character of those whose usefulness results from their equity and charity.

பரிமேலழகர் உரை நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் பண்பு - நீதியையும் அறத்தையும் விரும்புதலால் பிறர்க்கும் தமக்கும் பயன்படுதல் உடையாரது பண்பினை; உலகு பாராட்டும் - உலகத்தார் கொண்டாடா நிற்பர்.
விளக்கம்:
('புரிந்த' என்னும் பெயரெச்சம் ஈண்டுக் காரணப் பொருட்டு, நயனொடு நன்றி புரிதலும் பயனுடைமையும் பண்பு காரணமாக வந்தமையின், 'அதனைப் பாராட்டும்' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நீதியையும் அறத்தையும் விரும்புதலாற் பிறர்க்குந் தமக்கும் பயன்படுதலுடையாரது பண்பினை உலகத்தார் கொண்டாடா நிற்பர்,
(என்றவாறு).
995

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு

Contempt is evil though in sport. They who man’s nature know,
E’en in their wrath, a courteous mind will show.

ஒருவனை இகழ்ந்து பேசுதல்‌ விளையாட்டிலும்‌ துன்பம்‌ தருவதாகும்‌; பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில்‌ பகைமையிலும்‌ நல்ல பண்புகள்‌ உள்ளன.

Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit(pleasing) qualities even when they are hated.

பரிமேலழகர் உரை இகழ்ச்சி நகையுள்ளும் இன்னாது - தன்னையிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின் கண்ணும் இன்னாது; பாடு அறிவார் மாட்டுப் பகையுள்ளும் பண்பு உள - ஆகலான், பிறர் பாடு அறிந்தொழுகுவார் மாட்டுப் பகைமை உள் வழியும் அஃது உளதாகாது இனியவாய பண்புகளே உளவாவன.
விளக்கம்:
('பாடறிவார்' எனவே, அவ்வின்னாமையறிதலும் பெற்றாம். அதனை அறிந்தவர் பின் அது செய்யார்; இனியவே செய்வார் என்பது கருத்து. இதற்குப் பிறரெல்லாம் இரண்டு தொடரும் தம்முள் இயையாமல் உரைப்பாரும், 'இன்னாது' என்னும் சொற்குப் பிறவாது என்று உரைப்பாரு மாயினார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தன்னை யிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின்கண்ணும் இன்னாது; ஆகலாம் பிறர் பாடறிந் தொழுகுவார் மாட்டுப் பகைமையுள்வழியும் அஃதுளதா காது இனிய வாய பண்புகளே உளவாவன.
996

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்

The world abides; for ‘worthy’ men its weight sustain.
Were it not so, ‘twould fall to dust again.

பண்பு உடையவரிடத்தில்‌ பொருந்தியிருப்பதால்‌ உலகம்‌ உள்ளதாய்‌ இயங்குகின்றது; அஃது இல்லையானால்‌ மண்ணில்‌ புகுந்து அழிந்துபோகும்‌.

The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish.

பரிமேலழகர் உரை பண்பு உடையார்ப் பட்டு உலகம் உண்டு - பண்புடையார் கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்றும் உண்டாய் வாரா நின்றது; இன்றேல் அது மண்புக்கு மாய்வது - ஆண்டுப் படுதலில்லையாயின், அது மண்ணின்கண் புக்கு மாய்ந்து போவதாம்.
விளக்கம்:
('பட' என்பது திரிந்து நின்றது. உலகம் - ஆகுபெயர். மற்றைப் பண்பில்லார் சார்பன்மையின், ஓர் சார்புமின்றி மண்ணின்கண் புக்கு மாயுமது வேண்டாவாயிற்று என்பது பட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. இவை நான்கு பாட்டானும், அதனையுடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பண்புடையார்கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்று முண்டாய் வாராநின்றது; ஆண்டுப் படுதலில்லையாயின், அது மண்ணின் கட் புக்கு மாய்ந்து போவதாம்,
(என்றவாறு).
997

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்

Though sharp their wit as file, as blocks they must remain,
Whose souls are void of ‘courtesy humane’.

மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர்‌, அரம்போல்‌ கூர்மையான அறிவு உடையவராயினும்‌, ஓரறிவுயிராகிய மரத்தைப்‌ போன்றவரே ஆவர்‌.

He who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file.

பரிமேலழகர் உரை மக்கட்பண்பு இல்லாதவர் - நன்மக்கட்கே உரிய பண்பில்லாதவர்; அரம் போலும் கூர்மையரேனும் - அரத்தின் கூர்மைபோலும் கூர்மையை உடையரேயாயினும்; மரம் போல்வர் - ஓர் அறிவிற்றாய மரத்தினை ஒப்பர்.
விளக்கம்:
(அரம் - ஆகுபெயர். ஓர் அறிவு - ஊற்றினை யறிதல். உவமை இரண்டனுள் முன்னது, தான் மடிவின்றித் தன்னையுற்ற பொருள்களை மடிவித்தலாகிய தொழில் பற்றி வந்தது; ஏனையது, விசேட அறிவின்மையாகிய பண்பு பற்றி வந்தது. அவ்விசேட அறிவிற்குப் பயனாய மக்கட்பண்பு இன்மையின், அதுதானும் இல்லை என்பதாயிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நன்மக்கட்கேயுரிய பண்பில்லாதவர் அரத்தின் கூர்மை போலுங் கூர்மையுடையரே யாயினும், ஓரறி விற்றாய் மாத்தினை யொப்பர்,
(என்றவாறு)
998

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை

Though men with all unfriendly acts and wrongs assail,
‘Tis uttermost disgrace in ‘courtesy’ to fail.

நட்புக்‌ கொள்ள முடியாதவராய்த்‌ தீயவை செய்கின்றவரிடத்திலும்‌ பண்பு உடையவராய்‌ நடக்க முடியாமை இழிவானதாகும்‌.

It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing nofriendship (for them) do only what is hateful.

பரிமேலழகர் உரை நண்பு ஆற்றாராகி நயம் இல செய்வார்க்கும் - தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய்தொழுகுவார் மாட்டும்; பண்பு ஆற்றராதல் கடை - தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவு உடையார்க்கு இழுக்காம்.
விளக்கம்:
(நயம் - ஈரம். சிறப்பு உம்மை அவர் பண்பாற்றாமைக் கிடனாதல் தோன்ற நின்றது. அதனைச் செய்யின், தாமும் அவர் தன்மையராவர் என்பார், 'கடை' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய்தொழுகு வார்மாட்டும் தாம் பண்புடையரா யொழுகாமை அறிவுடையார்க் கிழுக்காம்.
999

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்

To him who knows not how to smile in kindly mirth,
Darkness in daytime broods o’er all the vast and mighty earth.

பிறரோடு கலந்து பழகி மகிழ முடியதவர்க்கு, மிகப்‌ பெரிய இந்த உலகம்‌ ஒளியுள்ள பகற்‌ காலத்திலும்‌ இருளில்‌ கிடப்பதாம்‌.

To those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day light.

பரிமேலழகர் உரை நகல் வல்லர் அல்லார்க்கு - பண்பின்மையான் ஒருவரோடு கலந்து உள்மகிழ்தல் மாட்டாதார்க்கு; மாயிரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்று - மிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதினும் இருளின்கண் கிடந்ததாம்.
விளக்கம்:
(எல்லாரோடும் கலந்தறியப் பெறாமையின் பண்பில்லார்க்கு உலகியல் தெரியாது என்பார், 'உலகம் இருளின்கண் பட்டது' என்றார். 'பாழ்பட்டன்று இருள்' என்று பாடம் ஓதி, 'இருள் நீங்கிற்றன்று' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பண்பின்மையான் ஒருவரோடு கலந்து உண்மகிழ்தன்மாட்டா தார்க்கு மிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதினும் இருளின் கட் கிடந்ததாம்,
(என்றவாறு).
1000

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று

Like sweet milk soured because in filthy vessel poured,
Is ample wealth in churlish man’s unopened coffers stored.

பண்பு இல்லாதவன்‌ பெற்ற பெரிய செல்வம்‌, வைத்த கலத்தின்‌ தீமையால்‌ நல்ல பால்‌ தன்‌ சுவை முதலியன கெட்டாற்‌ போன்றதாகும்‌.

The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel.

பரிமேலழகர் உரை பண்பு இலான் பெற்ற பெருஞ்செல்வம் - பண்பில்லாதவன் முன்னை நல்வினையான் எய்திய பெரிய செல்வம், அக்குற்றத்தால் ஒருவற்கும் பயன்படாது கெடுதல்; நன்பால் கலந்தீமையால் திரிந்தற்று - நல்ல ஆன் பால் ஏற்ற கலத்தின் குற்றத்தால் இன் சுவைத்தாகாது கெட்டாற்போலும்.
விளக்கம்:
('கலத்தீமை' என்பது மெலிந்து நின்றது. தொழிலுவம் மாகலின் பொருளின்கண் ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. படைக்கும் ஆற்றல் இலனாதல் தோன்ற 'பெற்ற' என்றும், எல்லாப் பயனும் கொள்ளற்கு ஏற்ற இடனுடைமை தோன்ற, 'பெருஞ்செல்வம்' என்றும் கூறினார். அச்செல்வமும் பயன்படாது என்ற இதனான் வருகின்ற அதிகாரப் பொருண்மையும் தோற்றுவாய் செய்யப்பட்டது. இவை நான்கு பாட்டானும் அஃது இல்லாரது இழிவு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பண்பில்லாதவன் முன்னை நல்வினையா னெய்திய பெரிய செல்வம் அக்குற்றத்தால் ஒருவர்க்கும் பயன்படாது கெடுதல், நல்ல வான் பால் ஏற்றகலத்தின் குற்றத்தால் இன்சுவைத்தாகாது கெட்டாற்போலும், (எ-று).


transliteration

yenpathaththaal yeithal yelithaenpa yaarmaatdum
panputaimai yennum valakku

anputaimai aanra kutippiraththal ivvirandum
panputaimai yennum valakku

uruppoththal makkaloppu anraal vaeruththakka
panpoththal oppathaam oppu

nayanodu nanri purindhtha payanutaiyaar
panpupaa raatdum ulaku

nakaiyullum innaa thikalchi pakaiyullum
panpula paadarivaar maatdu

panputaiyaarp patdundu ulakam athuinrael
manpukku maaivathu man

arampolum koormaiya raenum marampolvar
makkatpanpu illaa thavar

nanpaatrraar aaki nayamila seivaarkkum
panpaatrraar aathal katai

nakalvallar allaarkku maayiru gnyaalam
pakalumpaatr patdanru irul

panpilaan paetrra paerunjselvam nanpaal
kalandhtheemai yaalthirindh thatrru